செவ்வாய், 22 நவம்பர், 2016

ஜேஎன்யு மாணவர் நஜீப்பை தாக்கியது ஏபிவிபி அமைப்பினரே; முதற்கட்ட விசாரணையில் தகவல்

உத்தரப்பிரதேச மாநிலம் பட்துவான் பகுதியை சேர்ந்தவர் நஜீப் அகமது(27). இவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உயிரி தொழில்நுட்பத்துறையில் ஆய்வுப் படிப்பினை மேற்கொண்டு வந்தார். பொதுவாக பல்கலைக்கழகத்தில் நல்ல நடத்தை யைக் கொண்ட மாணவராகவும், கல்வியிலும்சிறந்த மாணவராகவும் விளங்கி வந்துள்ளார். இதுவரை அப்பல்கலை.யில் ஒழுங்கீன செயல் உள்ளிட்ட எவ்விதமான குற்றச்சாட் டும் நஜீப் மீது கிடையாது. இந்நிலையில், மாணவர் நஜீப் மாயமானது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழும்பியது. அரசியல் காரணங்களுக்காக ஏபிவிபி யினரால் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் மாணவர்கள் குற்றம்சாட்டியதாக தெரிவிக்கிறது தீக்கதிர் நாளிதழ். மேலும் தீக்கதிர் வெளியிட்டுள்ள செய்தியில்,

ஜேஎன்யு பேராசிரியர் ஆயிஷா கிட்வாய் கடந்த அக்டோபர் 14 அன்று இரவுவிடுதியில் நடைபெற்ற வன்முறை குறித்தும்அதில் நஜீப் அகமது என்ற மாணவர்மிக மோசமான முறையில் தாக்கப்பட்டதாகவும் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்த வன்முறை குறித்து விடுதி காப்பாளர் அக்டோபர் 15ல் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
அப்போதே இச்சம்பவம் குறித்தும் மாணவர் நஜீப் காணாமல் போனதற்கான காரணம் குறித்து தெரிந்திருந்தும் பல்கலைக் கழக நிர்வாகம் ஏன் மூடி மறைத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.இப்பிரச்சனை ஊடகங்களில் பெரிதுப் படுத்தப்பட்டதற்கு பின்பே டெல்லி காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. நஜீப் அகமது வின் தாயார் பாத்திமா நபீஸ் கண்ணீர் மல்க தில்லி ஜந்தர்மந்தர் பகுதியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்று மகனை மீட்டுத்தாருங்கள் எனக் கதறிய காட்சிகளை அனைத்து ஊடகங்களும் வெளியிட்டிருந்தன.

மகனை மீட்டுத் தரக்கோரி போராட்டம் செய்த நஜிப்பின் தாயார் இழுத்துச் செல்லப்படும் காட்சி
மகனை மீட்டுத் தரக்கோரி போராட்டம் செய்த நஜிப்பின் தாயார் இழுத்துச் செல்லப்படும் காட்சி
மேலும் பாத்திமா நபீஸ் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரையும் சந்தித்து முறையிட்டனர். இப்பிரச்சனையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாணவர் நஜீப் மீட்கப்பட வேண்டுமென்று உள்துறை அமைச்சர் மற்றும் குடியரசுத் தலைவருக்கும் சீத்தாராம் யெச்சூரி கடிதம் எழுதினார்.  இதுகுறித்த பிரச்சனையில் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்ட பின்னணியிலேயே இவ்வழக்கு குற்றவியல் புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. மாணவர் நஜீப் காணாமல் போய் 36 நாட்களுக்குப் பிறகும் டெல்லி காவல்துறை ஆணையர் அலோக்குமார் விசாரணை நடைபெற்று வருவதாக கூறி வருகிறார்.
இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகத்தின் சார்பாக அமைக்கப்பட்ட விசாரணைக் கமிட்டி நவம்பர் 20 அன்று முதற்கட்ட விசாரணையை நடத்தியுள்ளது. இந்த விசாரணையில் பல மாணவர்கள் நேரடியாக வாக்குமூலங்கள் அளித்துள்ளனர். கடந்த 14ந்தேதி இரவு நடைபெற்ற வன்முறையில் நஜீப் ஏபிவிபி மாணவர் அமைப்பினரால் தாக்கப்பட்டதும் மிக இழிவான வார்த்தைகளால் அவமானப் படுத்தப்பட்டார் என்றும் தெரியவந்துள்ளது. இதில் நஜீப்பை மிகக்கொடூரமாக தாக்கிய மாணவர் ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்த விக்ராந்த் குமார் என்பவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் ஏபிவிபி மாணவர் அமைப்பை பாதுகாக்கும் நோக்கிலே தொடர்ந்து செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த ஒரு மாதகாலத்திற்கும் மேலாக மூடி மறைக்கப்பட்ட பல்வேறு விஷயங்கள் வெளியே வரத்துவங்கியுள்ளது. சரியானகோணத்தில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு இச்சம்பவத்தில் தொடர்புடைய பலரும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும், இதில் தொடர்புடையவர்கள் பல்கலைக் கழகத்திலிருந்து உடனடியாக நீக்கப்பட வேண்டும் எனவும் நஜீப் அகமது குறித்த முழு உண்மையையும் அவர் மீட்கப்படுவதற்கான நடவடிக்கையையும் காவல்துறையும் பல்கலைக் கழக நிர்வாகமும் மேற்கொள்ள வேண்டும் என ஜேஎன்யு மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். thetimestamil.com

கருத்துகள் இல்லை: