வியாழன், 24 நவம்பர், 2016

ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அப்போலோவில்... என்னதான் நடக்கிறது?


minnambalam.com: அலுவலகத்தில் வைஃபை ஆனில் இருந்தது. உள்ளே நுழைந்ததும் வாட்ஸ் அப் அனுப்பிய மெசேஜ் டெலிவரி ஆனது. “அப்பல்லோவில் இருக்கிறேன். சில எக்ஸ்குளூசிவ் தகவல்கள் இருக்கின்றன. சற்றுநேரத்தில் வருகிறேன்!” என்பதுதான் அந்த மெசேஜ். காத்திருந்தோம். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு வந்து விழுந்தது அந்த மெசேஜ்.
‘‘ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றப்பட்டாலும் இன்னும் யாரையும் பார்க்க அனுமதிக்கவில்லை. இன்னும் ஓரிரு வாரங்களில் ஜெயலலிதா உறுதியாக டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் . அப்போது, யாரையும் பார்க்க அனுமதிக்கப் போவதும் இல்லை. இதெல்லாம் இருக்கட்டும்... கடந்த அக்டோபர் 23ஆம் தேதி தமிழகம் முழுக்க ஒரே நேரத்தில் அதிமுக-வினர் கோயில்களில் வழிபாடு நடத்தினார்கள். பால்குடங்கள் எடுத்து சுவாமிக்கு அபிஷேகம் செய்தார்கள். எல்லோரையும் ஒரே நாளில், ஒரே நேரத்தில் அன்று பால்குடம் எடுக்கவும், விசேஷ பூஜைகள் நடத்தவும் அதிமுக தலைமையில் இருந்து உத்தரவுபோயிருக்கிறது.   இரத்த பந்தம் இருப்பவர்களின் உடல் உறுப்புக்கள் இலகுவாக பொருந்தி விடும் வாய்ப்பு அதிகம் . 

அதன்படிதான், வடசென்னை தெற்கு மாவட்டக் கழகம் சார்பில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. அதன்பின், அன்னதானம் வழங்கப்பட்டது. வழக்கறிஞர் பிரிவு சார்பில், சென்னை சூளை பகுதியில் அமைந்துள்ள சுப்பிரமணியர் திருக்கோயிலில், முதலமைச்சர் நலம் பெற வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது. தென்சென்னை தெற்கு மாவட்டக் கழகம் சார்பில், மயிலாப்பூரில் அமைந்துள்ள முண்டகக்கண்ணியம்மன் கோயிலில், அம்மனுக்கு ஆயிரத்து எட்டு பால்குட அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகேயுள்ள யதுகிரி யதிராஜ ஜீயர் மடத்தில் நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணம் நடைபெற்றது. காலை 6 மணிக்குத் தொடங்கி, இரவு 10 மணி வரை நடைபெற்ற இந்த பாராயணத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பட்டாச்சாரியார்கள் முதல்வருக்காக சிறப்பு வழிபாடு செய்தனர். காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டக் கழக வழக்கறிஞர் பிரிவு சார்பில், தாம்பரம் சானடோரியத்தில் அமைந்துள்ள ஸ்ரீராமர், ஆஞ்சநேயர் மற்றும் வைத்தியநாத சுவாமி கோயிலில் பாலாபிஷேகம் செய்து சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெற்றன. கரூர் மாவட்டக் கழகம் சார்பில் ரெங்கநாதசுவாமி கோயிலில் 108 மூலிகை பொருட்களைக் கொண்டு மிருத்யுஞ்சய யாகம், சுதர்சன யாகம், நவக்கிரக யாகம் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
திண்டுக்கல், கக்கன் நகர் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில், பத்திரகாளியம்மன் கோயிலில் இருந்து தொடங்கிய பால்குட ஊர்வலம், நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று அபிராமி அம்மன் கோயிலில் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. திருவள்ளூர் கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில், மாதவரம் பேருந்து நிலையம் அருகேயுள்ள நாகாத்தம்மன் கோயிலில் இருந்து ஆயிரத்து எட்டு பெண்கள் பால்குடம் எடுத்து, அலகு குத்தி, கங்கையம்மன் கோயிலுக்கு ஊர்வலமாகச் சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். தன்வந்திரி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் ஒன்றியக் கழகம் சார்பில், ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, யாகசாலை அமைத்து, 108 மூலிகைகளைக் கொண்டு மஹா மிருத்யுஞ்சய யாகம் உள்ளிட்ட பல்வேறு யாகங்கள் நடைபெற்றன. புதுச்சேரி, உப்பளம் தொகுதி நிர்வாகிகள் சார்பில், கவுசிகல பாலசுப்பிரமணியர் கோயிலில் இருந்து ஆயிரத்து எட்டு பெண்கள் பால்குடம் ஏந்தி முக்கியச் சாலைகள் வழியாகச் சென்று, காலபைரவர் கோயிலில் சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதெல்லாம் சாம்பிளுக்காக... இப்படி தமிழ்நாடு முழுக்கவே அன்று விஷேச வழிபாடுகள் நடந்தன.
அன்று நடந்த வழிபாடுகளுக்கும், இப்போது நான் சொல்லப்போகும் தகவலுக்கும் சம்பந்தம் இருக்கிறது. அக்டோபர் 18ஆம் தேதி, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கை அப்பல்லோ மருத்துவமனையில் அட்மிட் செய்திருக்கிறார்கள். அதே நேரத்தில், கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் உறவினர் ஒருவரும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அக்டோபர் 18ஆம் தேதியிலிருந்து 5 நாட்களுக்குப் பிறகு அதாவது, அக்டோபர் 23ஆம் தேதியன்று காலை ஜெயலலிதாவுக்கு முக்கியமான ட்ரீட்மெண்ட் ஒன்று நடந்திருக்கிறது. அன்று மருத்துவமனைக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்டு பேல் வந்திருந்தார். அவர் மருத்துவமனையில் இருந்தாலும், அளிக்கப்பட்ட சிகிச்சைக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அப்பல்லோ மருத்துவர்கள், சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை மருத்துவர்கள் ஆலோசனையின்படி அந்த சிகிச்சையை மேற்கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் அன்று, எல்லா கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அதுமட்டுமல்ல... ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், தொழிலதிபரின் உறவினர் ஆகியோர் மருத்துவமனையில் அட்மிட் ஆனதற்கும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்!” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
‘‘ஷாக்கா இருக்கே... அப்படி என்ன ஸ்பெஷல் சிகிச்சை?” என்ற கேள்வி ஃபேஸ்புக்கில் இருந்து வந்தது.
பதிலை அடுத்த மெசேஜில் தட்டியது வாட்ஸ் அப்.
“இந்த சிகிச்சையை மேற்கொள்வதற்கு சில சட்டச் சிக்கல்கள் இருக்கின்றன. அதனால்தான் மருத்துவமனையிலிருந்து எதுவும் ‘மூச்’ விடவில்லை. மத்திய அரசிடம் ஒப்புதல் வாங்கியபிறகே அப்பல்லோ நிர்வாகம் இந்த சிகிச்சையை மேற்கொண்டதாம். சிகிச்சை தொடர்பான விபரங்களை மத்திய அரசுக்கும் தெரியப்படுத்தியிருக்கிறது அப்பல்லோ நிர்வாகம். இந்த சிகிச்சைக்குப் பிறகு, ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மருத்துவமனையிலிருந்து வீட்டுக்குத் திரும்பிவிட்டார். அதேசமயத்தில், முக்கியத் தொழிலதிபர் உறவினரான அவரும் அப்பல்லோவிலேயே இருந்திருக்கிறார். எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்பு இருப்பதாகவே சொல்கிறார்கள்.!” என்று முடிந்தது அந்த மெசேஜ்.

கருத்துகள் இல்லை: