திங்கள், 21 நவம்பர், 2016

வார்டில் இருக்கும் ’ஜெ’ விடம் கேளுங்கள்:ஸ்டாலின்!

சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வந்த மு.க.ஸ்டாலின் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி-பதிலின் தொகுப்பு இது.
கேள்வி: ரூபாய் நோட்டுகள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படுவது பற்றி உங்கள் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன ?
ஸ்டாலின்: தலைவர் கலைஞர் அவர்கள், ரூபாய் நோட்டுகள் இல்லாமல் தமிழக மக்கள் தவித்துவரும் நிலையில், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறும் என அறிவித்திருக்கிறார். நானும் திமுக இளைஞரணி சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறேன். அதில், தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் 24ஆம் தேதி, மாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரை நடைபெறவுள்ள மனிதச் சங்கிலி போராட்டத்தில் திமுக இளைஞரணியினர் பெருந்திரளாக பங்கேற்று, அந்தப் போராட்டம் வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறேன்.

கேள்வி: நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.,க்கள் ஜல்லிக்கட்டு விவகாரம், 500, 1000 ரூபாய் நோட்டுகள் விவகாரம், காவேரி விவகாரம் ஆகிய 3 பிரச்னைகளுக்காக குரல் கொடுத்துள்ளார்கள். திமுக சார்பில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன ?
ஸ்டாலின்:திமுக-வும் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்கும். காவேரி விவகாரம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்கள் குறித்தும் ஏற்கனவே திமுக குரல் கொடுத்து வருகிறது. மீண்டும் மீண்டும் குரல் கொடுக்கும்.
கேள்வி: மனிதச் சங்கிலி போராட்டம் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள் ?
தளபதி: அந்தந்த மாவட்டச் செயலாளர்களின் தலைமையில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறும். கட்சித் தோழர்கள், நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என தலைவர் கலைஞர் அறிவித்துள்ளார்.
கேள்வி: தமிழக விவசாயிகள் தற்கொலை செய்வது தொடர்பாக, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளும் வழங்கவில்லையே?
ஸ்டாலின்:தமிழக முதல்வரை ஐசியு-வில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றிவிட்டதாக செய்தி வந்துள்ளது. அதனால் முதலமைச்சரை பத்திரிகையாளர்கள் முடிந்தால் சென்று சந்தித்து, இதுபற்றிக் கேளுங்கள். அப்படி இல்லையெனில் முதலமைச்சரின் இலாகாக்களுக்கு பொறுப்பேற்றுக் கொண்டுள்ள மாண்புமிகு நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து கேட்கவேண்டிய கேள்வி இது. அப்படியும் இல்லையென்றால் தமிழக விவசாயத்துறை அமைச்சர் ஒருவர் இருக்கிறார். அவரையாவது கேட்டு செய்தி வெளியிட வேண்டும். அப்படியாவது விவசாயிகளுக்கு பயன் கிடைக்கட்டும்.
கேள்வி: ஓ.பன்னீர்செல்வத்திடம் முதல்வரின் பொறுப்புகள் வந்தபிறகு அரசின் செயல்பாடுகள் எப்படி உள்ளது ?
ஸ்டாலின்:முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களிடம் அந்த பொறுப்புகள் இருந்தபோதே தமிழக அரசு செயல்படவில்லை. இப்போது அந்தப் பொறுப்புகள் ஓ.பி. அவர்களிடம் வந்தபிறகும் செயல்படவில்லை. அதனால்தான் அரசு முடங்கிப் போயுள்ளது என தொடர்ந்து சொல்லிவருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.  மின்னம்பலம்.காம்

கருத்துகள் இல்லை: