ஞாயிறு, 20 நவம்பர், 2016

சிதம்பரம் எச்சரிக்கை :இது முதல் கட்டம்தான். இரண்டாம் கட்ட விளைவுகளும் உண்டு!


காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், மும்பையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
கேள்வி:– ரூபாய் 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து?
ப.சிதம்பரம் பதில்:– நாட்டில் புழக்கத்தில் இருந்து, 86 சதவீத ரூபாய் நோட்டுகளை திரும்பப்பெற்றதால், ஏற்படக்கூடிய முதல் கட்ட விளைவுகளை பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். இந்த முதல் கட்ட விளைவுகள், இப்போது முதல் இன்னும் பல வாரங்கள் தொடரும். அதன்பின்னர் இரண்டாவது கட்ட விளைவுகளை நீங்கள் பார்க்கலாம். மத்திய அரசின் நடவடிக்கையில் எனக்கு எழுந்துள்ள ஒரு சந்தேகம், அவர்கள் அரசில் உள்ள அறிவார்ந்த பொருளாதார நிபுணரான டாக்டர் அரவிந்த் சுப்பிரமணியனை கலந்து ஆலோசிக்கவில்லையோ என்பதுதான். எதிர்மறை விளைவுகள்
கேள்வி:– முதல் கட்ட விளைவுகள், 2–ம் கட்ட விளைவுகள் என சொல்வது? பதில்:– மிகக் குறைந்த பணத்துடன் இப்போது நிறைய மக்கள் வாழுகிற நிலை ஏற்பட்டிருக்கிறது. அவர்களிடம் நுகர்வு இல்லை.

அழுகக்கூடிய பழங்கள், காய்கறிகள் விற்பனை இல்லை.
 2–ம் கட்ட விளைவுகள் என்னும்போது, அதை நீங்கள் திருப்பூர், சூரத் போன்ற இடங்களில் பார்க்கலாம். தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு பறிபோய் இருக்கிறது. ஆட்குறைப்புகள் தொடங்கி விட்டன.
 வயல்களில் விதைகளை விதைத்துள்ள விவசாயிகளுக்கு உரம் வாங்கவும், தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்கவும் பணம் இல்லை என்னும்போது 2–ம் கட்ட விளைவுகள் முக்கியமாக உணரப்படும். எனவே விளைவுகள் நிச்சயம் எதிர்மறையானதாக அமையும் என்றுதான் நான் கருதுகிறேன். பாதிப்புகளின் அளவு என்ன என்பதை இப்போதே கூறி விட முடியாது.

 50 நாட்கள் கேள்வி:– கருப்பு பண ஒழிப்புக்கு எதிரான நடவடிக்கையின் பலன்கள் குறித்து அறிய 50 நாட்கள் ஆகும் என பிரதமர் நரேந்திர மோடி கூறி இருக்கிறாரே? பதில்:– தனிப்பட்ட நபர்களின் பணப்புழக்க நெருக்கடி வேண்டுமானால் எளிதாகலாம். ஆனால் வேறு பல பிரச்சினைகளை இது தீர்க்காது. ஒரு சின்ன கணக்கு. அவர்கள் 2 ஆயிரத்து 200 கோடி எண்ணிக்கையிலான ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்துள்ளனர்.

ரூபாய் நோட்டு அச்சிடும் அனைத்து அச்சகங்களும் மாதம் ஒன்றுக்கு 300 கோடி நோட்டுகள்தான் அச்சடிக்க முடியும். அப்படி பார்க்கிறபோது, தேவையான நோட்டுகளை அச்சடிக்க 7 மாதங்கள் ஆகும். குறைந்த மதிப்பிலான நோட்டுகளை அச்சடிக்க மேலும் 5 மடங்கு காலம் ஆகும். இதையெல்லாம் அவர்கள் சிந்திக்க வில்லை என்று கருதுகிறேன்.

இது அரசாங்கத்துக்கு அசாதாரணமானது அல்ல. இந்த ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கையினால், கள்ள நோட்டுகளை முழுமையாக அகற்றிவிட முடியாது. ரூ.400 கோடி அளவுக்குத்தான் கள்ளநோட்டுகள் உள்ளன. அதாவது மொத்த புழக்கத்தில் இருந்து ரூ.16 லட்சத்து 24 ஆயிரம் கோடியில் இது 0.028 சதவீதம். இவ்வாறு கூறினார்.

கருத்துகள் இல்லை: