திங்கள், 17 அக்டோபர், 2016

ரூ 200 க்காக சாமியாடி புகை, நெரிசலில் உயிர்விட்ட ஏழைத்தாய் .. மந்திரிகள் போட்டி போட்டுகொண்டு கோவில் கோவிலாக ஜால்ரா

“மந்திரிமாரெல்லாம் போட்டி போட்டு வழிபாடு நடத்துறாங்க.. ஒரு மந்திரி பால்குடம் எடுக்கிறதுக்கு பெண்கள் கூட்டத்தைச் சேர்த்தாருன்னா.. இன்னொரு மந்திரி யாகம் நடத்துறதுக்கு கூட்டம் சேர்க்கிறாரு.. மந்திரி ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்ட திருத்தங்கல் பெருமாள் கோவில் வழிபாட்டு நிகழ்ச்சிக்கு சென்றவர் தான் பொன்னுத்தாய்.. யாக புகையில் மூச்சு திணறி மயங்கி விழுந்து செத்துட்டாருன்னு சொல்லுறாங்க.. சாமியாடி கிழே விழுந்து செத்துட்டாருன்னும்
சொல்லுறாங்க.. எல்லாம் அந்த பெருமாளுக்கே வெளிச்சம்..” என்று புலம்பியிருக்கிறார்கள்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி தமிழகம் முழுவதும் கோவில்களில் அதிமுகவினர் சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலும் பல கோவில்களில் இதே வேண்டுதலோடு ஹோமம், யாகமெல்லாம் வளர்த்து தொடர்ந்து பூஜைகள் செய்து வருகின்றனர்.


இன்று (16-10-2016) திருத்தங்கல் நின்ற நாராயண பெருமாள் கோவிலிலும் வழிபாட்டு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக, திருத்தங்கல் முருகன் காலனியைச் சேர்ந்த பொன்னுத்தாய் மயங்கிச் சரிந்து உயிரை விட்டிருக்கிறார். இது குறித்து நம்மிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி ஆதவன், “தலைக்கு ரூ.200 கொடுத்து கோயிலுக்கு வாங்கன்னு கூப்பிட்டிருக்காங்க.. லீவு நாள்தான.. ஒரு நாள் செலவுக்கு ஆச்சேன்னு ஏழை தாய்மார்கள் நிறைய பேரு ஜெயலலிதாவுக்காக பிரார்த்தனை பண்ணுறதுக்கு கோயிலுக்கு போயிருக்காங்க.. அதுல ஒருத்தர்தான் பொன்னுத்தாய்..

பெருமாள் கோயில் படிக்கட்டுல வச்சு குலவை போட்டு பொன்னுத்தாய் ஆடிருக்காங்க.. அப்ப மயங்கி விழுந்திருக்காங்க..

உடனே, தனியார் ஆஸ்பத்திரிக்கு பொன்னுத்தாயை தூக்கிட்டுப் போயிருக்காங்க.. அங்கேயிருந்த டாக்டர் “ஆள் இறந்திருச்சு”ன்னு சொல்லிட்டாரு.. என்னத்தச் சொல்லுறது? ரொம்ப கொடுமைங்க!” என்றார் ஆதங்கத்துடன்.

உயிரோடு கோவிலுக்குச் சென்று பிணமாக திரும்பிய பொன்னுத்தாயை சுடுகாட்டுக்கு எடுத்துச் சென்ற போது அந்த ஏரியாவாசிகள் “மந்திரிமாரெல்லாம் போட்டி போட்டு வழிபாடு நடத்துறாங்க.. ஒரு மந்திரி பால்குடம் எடுக்கிறதுக்கு பெண்கள் கூட்டத்தைச் சேர்த்தாருன்னா.. இன்னொரு மந்திரி யாகம் நடத்துறதுக்கு கூட்டம் சேர்க்கிறாரு.. மந்திரி ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்ட திருத்தங்கல் பெருமாள் கோவில் வழிபாட்டு நிகழ்ச்சிக்கு சென்றவர் தான் பொன்னுத்தாய்.. யாக புகையில் மூச்சு திணறி மயங்கி விழுந்து செத்துட்டாருன்னு சொல்லுறாங்க.. சாமியாடி கிழே விழுந்து செத்துட்டாருன்னும் சொல்லுறாங்க.. எல்லாம் அந்த பெருமாளுக்கே வெளிச்சம்..” என்று புலம்பியிருக்கிறார்கள். -சி.என்.இராமகிருஷ்ணன்  நக்கீரன்.இன்

கருத்துகள் இல்லை: