சனி, 22 அக்டோபர், 2016

நம் உடல் நமக்கு இல்லையா? எப்போது கடைசியாக குதித்து இருக்கிறீர்கள்?எப்போது ஓடியாடி டென்னிஸ் விளையாடி...

மின்னம்பலம்,காம் : கடந்த வாரம் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது இரு பெண்கள் பேசிக் கொள்வதைக் கேட்க நேர்ந்தது. இருவருமே திண்டிவனம் அருகில் உள்ள ஏதோ ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண்கள். மத்திய வயதில் இருந்தனர். ‘எங்க ஊர்ல இந்த வயசுப் பசங்க எல்லாம் சேர்ந்து போட்டி வச்சானுவ. அதுல நம்மள மாதிரி இருக்குற பொம்பளைகளுக்கும் ஓட்டப்பந்தயம் வச்சானுவ. நானு கலந்துக்குலாமா, வேண்டாமான்னு யோசிச்சுக்கினே இருந்தேன். என் மாமியா எதுவும் சொல்லிட்டா என்ன பண்றதுன்னு பயம். அப்புறமா என்ன ஆனாலும் பரவாலேன்னு போட்டியில சேர்ந்துட்டேன். எங்கூட என் தெருவுல இருந்த நாலு பொம்பளயவ சேந்துட்டாங்க. ஓடுனம்பாரு, ஒரு ஓட்டம். யப்பா… என்னம்மா ஓடினுனேன். அப்புறம் பார்த்தா நாந்தான் ஃபர்ஸ்ட்டுனு சொல்லிட்டானுவ அந்த பயலுவ. மேடையில கூப்புட்டு, ரெண்டு பிளேட்டு பரிசா தந்தானுவ. எனக்கு அழுகாச்சியா வந்துருச்சு. இந்த ஊருக்கு வாக்கப்பட்டு வந்து 24 வருஷமாவுது. இப்பத்தான் இந்த ஊரு தெருவுல ஓடியிருக்கேன். எனக்கு ஓடணும்னு எம்புட்டு ஆச தெரியுமா? பள்ளியோடம் படிக்கிறப்ப ஓடினதுதான். அப்புறம் எங்க? ஒம்பதாவது படிக்கிறப்ப கண்ணாலம் பண்ணிட்டாங்க. அதுக்கப்புறம் காடு, ஊடுன்னு அலையத்தான் முடிஞ்சது. புள்ள குட்டின்னு பொழப்பு கெடந்து சீரழியுது. இதுல ஆசப்பட்டத செய்ய முடியுதா?’ என்று பேசி முடித்த கணம், அவரது கண்களில் ஏக்கம் இருந்ததை காண முடிந்தது.

இன்று கூட தொலைக்காட்சிகளிலும் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நடத்தப்படும் பாட்டுப் போட்டி, நடனப்போட்டி, பேச்சுப் போட்டி என்று ஒவ்வொரு கலைப் போட்டிகளிலும் பெண்களில் பலர் எத்தனை ஆசையோடு கலந்து கொள்கிறார்கள். அதில் வெற்றியும் பெறுகிறார்கள். சிலர் கை நிறைய பரிசு வாங்கினதற்காக, ஆல் ரவுண்டர் ஷீல்டு வாங்குவார்கள். ஆனால், காலப் போக்கில் இவர்கள் எங்கு போகிறார்கள்?
ஒரு நாற்பது வயது பெண்மணி தன் மகளுடனோ, மகனுடனோ சேர்ந்து நடனம் ஆடுவதை நம் குடும்பங்களில் பார்க்க முடியுமா? ஒரு வீட்டில் மனைவியோ, அம்மாவோ உறக்கப் பாடி சந்தோஷப்பட முடியுமா? கலாச்சாரத்தின் பெயரால், பெண்ணின் உடல் மீது எப்போதும் ஒரு சுமை அழுத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ஒரு பெண் தன் உடலை, தான் ஆசைப்பட்டது போல் பயன்படுத்திக் கொள்ள முடிவதில்லை. அதனால் தான், பதினான்கு வயதில் துறந்த ஆசையை, 24 வருடங்கள் கழித்து, தானே சுயமாக எடுத்த முடிவின் மூலம் தெருவில் ஒரு பெண்ணால் தான் ஆசைப்பட்டது போல் ஓட முடிந்திருக்கிறது. ஒருவேளை அந்த கிராமத்தில் அப்படி ஒரு விழா நடக்கவேயில்லை என்றால், அவருடைய ஆசை நிறைவேறியே இருக்காது அவர் மரணம் வரை. இதுதான் இங்கு வாழும் பலகோடி பெண்களின் நிலை.
ஒரு பெண் தான் ஆசைப்பட்டது போல திருமணம் செய்ய முடியாது; ஆசைப்பட்டது போல படிக்க முடியாது; ஆசைப்பட்டது எதுவுமே செய்ய முடியாது. அதுவும் அவளது உடலை அவள் விருப்பத்துக்கிணங்க ஒன்றும் செய்ய முடியாது. பெண்களே… உங்கள் உடம்பை எப்போது உங்கள் இஷ்டப்படி வளைத்து இருக்கிறீர்கள்? எப்போது கடைசியாக குதித்து இருக்கிறீர்கள்? கடைசியாக எப்போது உங்கள் ஆசைப்படி ஓடியாடி டென்னிஸ் விளையாடி இருக்கிறீர்கள்? அப்படி எதுவும் செய்திருந்தால் கூட, அதுவும் உடற்பயிற்சி என்ற காரணத்தால், அவர்கள் சொன்னபடி உங்கள் உடம்பை குனிந்து, நிமிர்ந்து, வளைந்து… அதற்கு என்று ஒரு ஆசனத்தின் பெயரை வைத்திருப்பீர்கள்.
இதற்கு காரணம் இந்த கலாச்சாரம் கொடுக்கும் அழுத்தம் மட்டுமல்ல; நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் அழுத்தமும் காரணம். நம் உடம்பை அப்படி வளைக்கக்கூடாது; ஆடக்கூடாது; பாடக்கூடாது. அப்படி செய்தால் என் கணவருக்குப் பிடிக்காது; மகனுகுப் பிடிக்காது; மாமியாருக்குப் பிடிக்காது; அவருக்குப் பிடிக்காது; இவருக்குப் பிடிக்காது என்று நமக்கு நாமே பல கண்டிஷன்களைப் போட்டுக் கொள்கிறோம். அந்த கண்டிஷன்களை காலம் முழுவதும் நீடித்து வைத்திருக்கிறோம். இது நமது உடல், இதை நமது விருப்பதுக்கு ஏற்ப வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற சிந்தனை நமக்குள் வந்தால் மட்டுமே, மாற்றம் நம்மைச் சுற்றியுள்ளவர்களிடமும் ஏற்படும். பெண்ணாகப் பிறந்து விட்டோம் என்பதற்காக ஏன் இந்த உடம்புக்கு இத்தனை கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும்? ஒரே ஒருநாள் உங்களுக்குப் பிடித்தது போல் அட்லீஸ்ட் ஒரு பாடலுக்கு நடனமாடிப் பாருங்கள். உங்கள் மனம் எத்தனை ரிலாக்ஸாக இருக்கிறது என்று தெரியும். நம் உடல், நமக்கன்றி வேறு யாருக்கு?!
- நாச்சியாள் சுகந்தி

கருத்துகள் இல்லை: