திங்கள், 17 அக்டோபர், 2016

ஜெ-வுக்கு வெளிநாட்டில் சிகிச்சை! - மோடி திடீர் யோசனை!..

minnambalam.com மொபைல் டேட்டாவை ஆன் செய்தோம். கிரீம்ஸ் ரோட்டில் இருந்து வாட்ஸ் அப் அனுப்பிய மேசேஜ்கள் அடுத்தடுத்து வந்து விழுந்தன.
‘‘வழக்கம்போலவே பரபரப்பாக இருக்கிறது கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனை. அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் மாறி மாறி வந்துபோனபடி இருக்கிறார்கள். அதிமுக-வின் செய்தித் தொடர்பாளரான சி.ஆர்.சரஸ்வதி மருத்துவமனைக்குள் சென்றார். முதல் தளத்துக்குக்கூட அவர் செல்லவில்லை. தரைத் தளத்தில் நின்று அங்கிருந்த சிலருடன் பேசிக்கொண்டிருந்தார். திரும்பி வெளியே வந்தவர், ‘முதல்வர் அம்மா நலமுடன் இருக்கிறார். கண் விழித்துப் பார்க்கிறார். விரைவில் பூரண நலமுடன் வீடு திரும்புவார்…’ என்றெல்லாம் சொல்லிவிட்டுப் போனார். அடுத்து, முன்னாள் அமைச்சர் பொன்னையன் மருத்துவமனைக்குப் போனார். அவர் முதல் தளம்வரை போவதற்கு அனுமதிக்கப்பட்டார். அமைச்சர் பன்னீருடன் சில நிமிடங்கள் பொன்னையன் பேசியபடி இருந்தார். பிறகு அவரும் வெளியே வந்து, ‘முதல்வர் புரட்சித்தலைவி அம்மா கண்விழித்துப் பார்த்து, தனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கு நன்றி சொன்னார். அம்மாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது’ என்று சொன்னார். இனி பிரதாப் ரெட்டிகாரு  நிம்மதியாக தூங்கலாம்?

இதையெல்லாம் மருத்துவமனை வாசலில் 24 மணி நேரமும் காத்திருக்கும் தொண்டர்கள் நம்பவில்லை. அப்பல்லோவுக்கு எதிரே உள்ள டீக்கடைகளில் அமர்ந்திருக்கும் அதிமுக தொண்டர்கள், ‘10ஆம் தேதி வரைக்கும் தினமும் அம்மாவின் உடல்நிலை பற்றி ஆஸ்பிட்டல்ல இருந்து அறிக்கை கொடுத்துட்டே இருந்தாங்க. கடந்த ஒரு வாரமாக, ஏன் எந்த அறிக்கையும் கொடுக்கவே இல்லை. ஒரு பேப்பர்ல தண்ணி குடிச்சாங்கன்னு எழுதுறாங்க. இன்னொரு பேப்பர்ல கண் முழுச்சுப் பார்த்தாங்கன்னு எழுதுறாங்க. உள்ளே போய்ட்டு வர்றவுங்க ஒரு கதை சொல்றாங்க. எதை நம்புறதுன்னே தெரியல. அப்படியெல்லாம் நடந்திருந்தால், அதை ஆஸ்பத்திரியில இருந்தே அதிகாரபூர்வமாகச் சொல்லியிருக்கலாமே…’ என்று பேசிக்கொள்வதை கேட்க முடிந்தது’’ என்பதுதான் முதல் மெசேஜ்.
“நியாயமான கேள்விதான்!” என்று ஃபேஸ்புக் கமெண்ட் போட்டது.

(ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி)
தொடர்ந்து அடுத்த மெசேஜும் வாட்ஸ் அப்பில் இருந்து வந்தது.
“டெல்லியில் இருந்து அமித் ஷாவும் அருண் ஜெட்லியும் அப்பல்லோவுக்கு வந்து போனார்கள் இல்லையா… அவர்கள் பிரதமரிடம், ‘ஜெயலலிதா உடல்நிலை குறித்து விரிவாகப் பேசியிருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு வேண்டப்பட்ட சிலர் டெல்லியில் இருக்கிறார்கள். அவர்கள் பிரதமர் அலுவலகத்துடன் பேசியிருக்கிறார்கள். ‘ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து ட்ரீட்மெண்ட் கொடுக்கப்பட்டு வருது. ஆனால் அவங்க இம்ப்ரூமெண்ட் ஆக இன்னும் எவ்வளவு நாள் ஆகும்னு தெரியாது. சிங்கப்பூர்ல இருக்கும் மவுண்ட் எலிசபெத் ஹாஸ்பிட்டலுக்கு மாற்றினால், ஓரளவு சீக்கிரம் டெவலப்மெண்ட் ஆக வாய்ப்பு இருக்கு. நாங்கள் சொன்னால் சரியாக இருக்காது. பிரதமர் அலுவலகத்திலிருந்து தமிழ்நாடு கவர்மெண்ட் சைடுல பேசுங்க…’ என்று சொல்லியிருக்கிறார்கள். பிரதமர் அலுவலகத்திலிருந்தும் உடனே பேசியிருக்கிறார்கள். ‘இந்த கண்டிஷன்ல உடனே சிங்கப்பூர் ஹாஸ்பிட்டலுக்கு மாற்றினால் நல்லது. அதுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்யத் தயாராக இருக்குது’ என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் தமிழக அரசுத் தரப்பிலிருந்து இதுவரை எந்தப் பதிலும் சொல்லவில்லையாம். அப்படி பதில் வந்தால் முதல்வரை உடனடியாக சிங்கப்பூர் மருத்துவமனைக்கு சிறப்பு ஆம்புலன்ஸ் விமானம் மூலமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்யுமாம்.” என்பதே அந்த மெசேஜ்.அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக். தொடர்ந்து ஸ்டேட்டஸ் ஒன்றையும் அப்டேட் செய்தது.

கருத்துகள் இல்லை: