சனி, 22 அக்டோபர், 2016

மிஸ்டர் கழுகு : 45 நிமிஷம் உள்ளேயே இருக்கணும்! பன்னீர் அமைச்சரவை கூட்ட எபிசொட்

ஜெயலலிதா நலம் பெற்றுவிட்டார்... 27-ம் தேதி வீடு திரும்புகிறார்... என்றெல்லாம் செய்திகள் வருகிறதே?” - கழுகாரைப் பார்த்ததும் கேள்வியைப் போட்டோம். ‘‘முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து, அப்போலோவில் இருந்து வெளிவரும் அறிக்கைகள் முற்றிலும் நின்றுவிட்டன. ‘முதலமைச்சரின் உடல்நிலை முன்னேறி வருகிறது’ என கடைசியாக கடந்த 10-ம் தேதி அறிக்கை வந்தது. அதன்பிறகு, 10 நாட்கள் ஆகியும் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. அரசுத் தரப்பில் இருந்து இதுவரையில் எந்த அறிக்கையும் வெளியாகவில்லை. ‘முதல்வர் நலம்பெற்றுவிட்டார்... இரண்டு நாளில் வீடு திரும்புவார்’ என்று அ.தி.மு.க. நிர்வாகிகள்தான் திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். ஜெயலலிதாவின் உடல்நிலையில் இறக்கமும் இல்லை; முன்னேற்றமும் இல்லை. அவர் சிகிச்சைக்கு சேர்ந்தபோது, என்னவிதமான உபாதைகளோடு அவதிப்பட்டாரோ அதே நிலைதான் தற்போதும் நீடிக்கிறது. செயற்கைச் சுவாசம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இத்தனை நாட்கள் செயற்கை சுவாசத்தில் இருப்பதே மிகவும் அபாயகரமான நிலையைத்தான் சொல்லாமல் சொல்கின்றன. அப்போலோ மருத்துவமனையின் மௌனமும், ஆட்சி நிர்வாக மூவ்மென்டுகளும் அதைத்தான் உறுதிசெய்கின்றன.”


‘‘லண்டன் மற்றும் எய்ம்ஸ் டாக்டர்கள் அப்போலோவில் இருந்து சென்றுவிட்டார்களே?”

‘‘லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியெல் 23-ம் தேதி மீண்டும் வருகிறார். ஆனால், எய்ம்ஸ் டாக்டர்களின் பணி முடிவடைந்துவிட்டது. அவர்கள் இனிமேல் வரமாட்டார்களாம். டெல்லி ஊடகங்கள் இப்போது, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் த்ரிகா, நிதிஷ் நாயக்கைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பியெல், ‘இதற்குமேல் ஜெயலலிதாவின் உடல்நிலையில் முன்னேற்றங்களைக் கொண்டுவர வேண்டுமானால், அதற்கானக் கருவிகள் வேண்டும். இங்கிருப்பவை போதுமானவை அல்ல. அதனால், வாய்ப்பிருந்தால், லண்டனுக்கு ஜெயலலிதாவை கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளைப் பற்றி யோசியுங்கள்’ என்றும் தெரிவித்துள்ளாராம், லண்டன் செல்வது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. தேவைப்பட்டால், தீபாவளிக்குப் பிறகு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படலாம் எனவும் அல்லது வீட்டில் வைத்துப் பார்க்கலாம் என்றும் சொல்லப்​படுகிறது!”

‘‘பிரதமர் மோடி ஏன் வரவில்லை?”
‘‘பிரதமர் மோடி ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க வருகிறார் என்று, சசிகலா குடும்பத்தினர்தான் கிளப்பிவிட்டனர். அந்தச் செய்தி பரவியதும், கவர்னரும், தமிழகத்தில் உள்ள மத்திய உளவுப்பிரிவுமே பதறிவிட்டன. தங்களுக்கு இதுவரை தகவல் வரவில்லையே என்று அவர்களும் தொடர்ந்து டெல்லியைத் தொடர்பு கொண்டனர். அங்கிருந்து கடைசிவரை அப்படி ஒரு தகவல் உறுதி செய்யப்படவில்லை. அதன்பிறகுதான், அது வேண்டுமென்றே, உயர் பதவியில் இருப்பவர்களும் சசிகலா குடும்பத்தினரும் சேர்ந்து பரப்பிய வதந்தி என்பது தெரியவந்தது.”

‘‘ஏன் இப்படி பரப்ப வேண்டும்?”

‘‘மத்திய அரசு எங்களோடு உடன்பாடாகத்தான் இருக்கிறது, நாங்களும் பி.ஜே.பி-க்கு எதிரி அல்ல என்பதைக் காட்டும் சந்தர்ப்பமாக இதனைப் பயன்படுத்திக்கொண்டார்கள். ‘பிரதமர் வருகிறார் என்றால் அவர் முதலமைச்சரைப் பார்க்க அனுமதி கிடைக்குமா? மற்றவர்கள் மாதிரி பிரதமர், ஜெயலலிதாவை சந்திக்காமல் போக முடியாது’ என்றும் கறார் காட்டப்படுகிறதாம். ஜெயலலிதாவை மோடி பார்ப்பது மாதிரியான படத்தை வெளியிடுவதா, வேண்டாமா? என்று சசிகலா தரப்புக்கு இன்னும் குழப்பம் நீங்கவில்லை. பிரதமர் ஒரு இடத்துக்கு வருகிறார் என்றால் அந்த இடத்தைப் பாதுகாப்பு படை வீரர்கள் முன்கூட்டியே பார்த்தாக வேண்டும். அந்த நடைமுறைகள் ஜெயலலிதா விஷயத்தில் பின்பற்ற முடியாது. எனவே, பிரதமரின் வருகை என்பது சர்ச்சையையும் சந்தேகத்தையும் அதிகமாக விதைத்துள்ளது!”

‘‘அமைச்சரவைக் கூட்டம் நடத்திவிட்டாரே பன்னீர்?’’

‘‘செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் வேலைகள் முறையாக நடக்கிறது என்பதைக் காட்டுவதற்காகவே, அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு முன்பு ஜூன் 6-ம் தேதி, ஜெயலலிதா தலைமையில் ஒரு அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அதன்பிறகு, அக்டோபர் 20-ம் தேதி நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், கூட்டம் நடைபெற்றுள்ளது. ஜெயலலிதா பங்கேற்ற அமைச்சரவைக் கூட்டங்களிலாவது கொஞ்சம் வெளிப்படைத்தன்மை இருந்தது. ஆனால், இப்போது நடைபெற்ற கூட்டத்தில் அதுவும் இல்லை. முதல்வர் இல்லாமல்  நடைபெறும் அமைச்சரவைக் கூட்டம் என்பதால், பெரிதாக எந்த விவாதங்களும் இருக்காது என்றே அனைவரும் நினைத்தனர். முதல்வரின் செயலாளர்கள் வெங்கடரமணன், தலைமைசெயலாளர் ராம மோகன்ராவ் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். உள்ளாட்சி தேர்தல், தள்ளிபோனதால் அது குறித்தும் முடிவெடுக்க வேண்டும் என்கிற கட்டாயத்தின் பேரில்தான் கூட்டம் நடத்த முடிவாகியது. அமைச்சரவைக் கூட்டத்தின் மையத்தில் முதல்வர் அமர்ந்து இருப்பார். அவருக்கு எதிரே இருபுறமும் அமைச்சர்கள் வரிசையாக இருப்பார்கள். இந்தக் கூட்டத்தில் முதல்வரின் இடம் காலியாக இருந்தது. நிதியமைச்சர் பன்னீர்செல்வம், தான் வழக்கமாக அமரும் வலது புறத்தில் அமர்ந்திருந்தார். அவருக்கு முன்பாக ஜெயலலிதாவின் புகைப்படம் வைக்கப்பட்டு இருந்தது!”

‘‘என்ன பேசினார்களாம்?”

‘‘எல்லாம் முன்கூட்டியே முடிவுசெய்த விஷயங்கள்தான். காவிரிப் பிரச்னை பற்றி பேசப்பட்டிருக்கிறது. உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியோடு முடிவடைவதால், அதற்குத் தனி அதிகாரிகளை நியமிப்பது போன்றவைக் குறித்தும் பேசப்பட்டிருக்கிறது. பன்னீர்செல்வம் உட்பட எந்த அமைச்சர்களும் அதிகமாகப் பேசவில்லை. விவாதங்கள் எதுவும் நடைபெறவில்லை. முதல்வரின் செயலாளர்கள், அரசின் ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் ஆகியோர் சில யோசனைகளைச் சொன்னார்கள். அமைச்சர்கள் அதற்குத் தலையசைத்தனர். அவ்வளவுதான்.”

‘‘ஓஹோ!”

‘‘முதல்வரின் மருத்துவச் செலவு குறித்து அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்றார்கள். ஆனால், அதுபற்றி எந்தப் பேச்சும் இல்லை. அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றால், அதன் வீடியோ க்ளிப்பிங்ஸை செய்தித்துறை வழங்கும். ஜெயலலிதா இல்லாததால் அதுவும் மிஸ்ஸிங். அதைவிட சுவாரசியம், அமைச்சரவைக் கூட்டம் கண்டிப்பாக 45 நிமிடங்கள் நடைபெறவேண்டும் என்று மேலிடத்தில் இருந்து ஓ.பி.எஸ்-ஸுக்கு முதல்நாளே உத்தரவு வந்துவிட்டதாம்.”

‘‘அப்படியா?”

‘‘ஆமாம்! அமைச்சர்கள் பேசினாலும் சரி, பேசாவிட்டாலும் சரி, 45 நிமிடங்கள் அந்த அறையில் இருந்து யாரும் வெளியேறக் கூடாது என்று சொல்லியுள்ளார்கள். விரைவாக முடித்தால், அது விமர்சனத்தை ஏற்படுத்தும் என்று பக்கா ப்ளானாகத்தான் இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும் மற்ற மாநிலங்களில், முதலமைச்சர் பத்திரிகையாளர்களைச் சந்திப்பார். தமிழகத்தில் அந்த வழக்கம் இல்லை. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டம் பற்றி, அதிகாரப்பூர்வமாக யாரும் பேசவில்லை. ஆனால், கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்ற தகவல்கள் மட்டும் அதிகாரப்பூர்வமற்ற வழிகளில் வெளியிடப்படுகின்றன. அரசின் செய்திக் குறிப்பு கண்டிப்பாக வந்திருக்க வேண்டும். ஆனால், வரவில்லை. காரணம் எந்த அமைச்சரும் அதிகாரியும் அந்தப் பொறுப்பை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. இன்னும் சொல்லப்போனால், முதலமைச்சர் ஜெயலலிதா வீடு திரும்பும்வரை, இனிமேல் அமைச்சரவைக் கூட்டமே கூட்டப்படாது என்றும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன” என்று சொல்லி நிறுத்திய கழுகாரை,விகடன்,காம்

கருத்துகள் இல்லை: