திங்கள், 23 மே, 2016

இந்தியாவின் முதல் ஆர்.எல்.வி டிடி ராக்கெட் நாளை விண்வெளியில்

இன்று மறுபயன்பாட்டிற்கு ராக்கெட்டுக்களை கொண்டு வரும் சோதனையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இறங்கியுள்ளது.
இது இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றில் முக்கிய மைல்கல்லாகும். இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) விஞ்ஞானிகளின் உழைப்புக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இது கருதப்படுகிறது.
இதற்காக ஆர்.எல்.வி டிடி என்கிற ராக்கெட்டை தயாரித்துள்ள இஸ்ரோ, நாளை காலை 9.30 மணிக்கு அந்த ராக்கெட்டை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவாண் ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்துகிறது.
இதற்காக ஸ்ரீஹரிகோட்டா செல்ல பெங்களூருவிலிருந்து சென்னை வந்த இஸ்ரோ தலைவர் கிரண்குமார் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஆர்.எல்.வி டிடி ராக்கெட்டை நாளை பரிசோதனை செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.
இந்த ஆர்.எல்.வி டிடி ராக்கெட் இப்போது முதல்முறையாக தொழில்நுட்பரீதியாக சோதனை முறையில் ஏவப்படுகிறது. இது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட பிறகு செயற்கைக்கோள்களுடன் செலுத்தப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.  தினமணி.com

கருத்துகள் இல்லை: