வியாழன், 16 அக்டோபர், 2014

மகாராஷ்டிரா ஹரியானாவில் அறுதி பெரும்பான்மை யாருக்கும் இல்லை ? Exit கருத்து கணிப்பில் பாஜாகவுக்கு அதிக இடங்கள் கிடைக்கும் !

வாக்குச்சாவடி அதிகாரிகள் மகாராஷ்டிரத்தில் வாக்கு எந்திரங்களை சரிபார்க்கின்றனர். | கோப்புப் படம்
வாக்குச்சாவடி அதிகாரிகள் மகாராஷ்டிரத்தில் வாக்கு எந்திரங்களை சரிபார்க்கின்றனர். மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணா மாநில சட்டப்பேரவைக்கான வாக்குப் பதிவுகள் இன்று நடைபெற்றன. ஹரியாணாவில் 73% வாக்குகள் பதிவாகியுள்ளது. அக்டோபர் 19ஆம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெறும்.; இந்த நிலையில் தேர்தல் வாக்குப்பதிவுகள் முடிந்ததற்கு பிறகான கருத்துக் கணிப்பில் இரு மாநிலங்களிலும் அதிக இடங்களில் பாஜக வெற்றி பெறும் ஆனாலும் அறுதிப் பெரும்பான்மை கிடைப்பது அரிது என்று தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரத்தை 15 ஆண்டுகளாக ஆட்சி செய்த காங்கிரஸ்-என்.சி.பி. கூட்டணி இந்தத் தேர்தலில் உடைந்து போனதால் கடுமையாகத் தோல்வியை எதிர்நோக்குகிறது என்றும் சிவசேனா இரண்டாவது பெரிய கட்சியாக வெற்றி பெறும் என்றும் இந்தக் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.


டுடே’ஸ் சாணக்கியா நடத்திய ஒரு கருத்துக் கணிப்பு, மகாராஷ்டிரம் மற்றும் ஹரியாணா இரண்டிலுமே பாஜக பெரும்பான்மை பெறும் என்று கணித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிரத்தில் 27 கூட்டங்களில் கலந்து கொண்டு தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டார். மகாராஷ்டிர மாநில வரலாற்றில் பாஜக முதன்முறையாக ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாக்குப்பதிவுகள் முடிவுற்ற நிலையில் நடைபெற்ற மற்றொரு, சி-வோட்டர் கருத்துக் கணிப்பில், மகாராஷ்டிரத்தின் 288 தொகுதிகளில் பாஜக 129 இடங்களைக் கைப்பற்றும் என்று கூறப்பட்டுள்ளது. சிவசேனா 56 இடங்களிலும் காங்கிரஸ் 43, என்.சி.பி. 36, எம்.என்.எஸ். 12, மற்றவை 12 என்று கூறப்பட்டுள்ளது.

பெரும்பான்மை பெற 145 இடங்களில் ஒரு கட்சி வெற்றி பெற வேண்டும்.

ஏ.பி.பி. சானலுக்காக ஏ.சி.நீல்சன் செய்த கருத்துக் கணிப்பில், பாஜக 127 இடங்களிலும் சிவசேனா 77 இடங்களிலும், காங்கிரஸ் 40 இடங்களிலும் வெற்றி பெறலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஹரியாணா மாநிலத்தில் டுடே’ஸ் சாணக்கியாவின் கருத்துக் கணிப்புகளின் படி 90 இடங்களில் பாஜக 52 இடங்களில் வெற்றி பெறலாம் என்று கருதப்படுகிறது. மாறாக சி-வோட்டர் கருத்துக் கணிப்பில் பாஜக-விற்கு 37 இடங்கள் கிடைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஏ.சி.நீல்சன் கருத்துக் கணிப்பில் பாஜக 46 இடங்களைக் கைப்பற்றலாம் என்று தெரிகிறது.

அக்டோபர் 19ஆம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெறுகிறது  tamil.thehindu.com

கருத்துகள் இல்லை: