புதன், 4 ஜூன், 2014

விஜயகாந்த் : 144 தடை உத்தரவு மூலம் பணநாயகம் ஜெயித்தது ! தேர்தல் கமிசனும் காவல்துறையும் இணைந்து பெற்ற வெற்றி !

தேமுதிக ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை காலை சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறது. மத்திய அரசில் பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக்கு பாராட்டு தெரிவித்துக்கொள்கிறது. இலங்கை தமிழர் பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்தியாவில் ஜனநாயகம் வென்று ஆட்சி மாற்றம் ஏற்பட்ட மகிழ்ச்சி ஒருபுறத்தில் இருந்தாலும், தமிழகத்தில் மட்டும் எந்தவித தேவையும் இன்றி வாக்குப் பதிவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு 144 தடை உத்தரவை பிறப்பித்ததன் மூலம், ஆளும் கட்சியினர் அராஜகத்திலும், முறைகேட்டிலும் ஈடுபட்டு, பணநாயகத்தை வெற்றி பெற வைத்தனர்.
இதற்கு தேர்தல் ஆணையமும், காவல்துறையும், கண்டும் காணாமல் இருந்து ஆளும் கட்சிக்கு துணை நின்றது தமிழக தேர்தல் அதிகாரி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதை தடுக்க இயலவில்லை என்றும் கூறியுள்ளார். இதற்கு இக்கூட்டம் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறது.
தமிழக மக்கள் தேமுதிகவை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். ஆனால் விஷமத்தனமான வதந்திகளை பரப்பிவிட்டு தமிழக மக்களிடம் இருந்து தேமுதிகவை பிரிக்க வேண்டும் என்ற முயற்சியில் அதிகார வர்க்கம் ஈடுபட்டுள்ளது. இதற்கெல்லாம் தேமுதிகவோ அல்லது கழக தலைவரோ சிறிதும் கவலைப்படப்போவதில்லை.

தமிழகத்தில் உள்ள நீர் ஆதாரங்களை சீர்படுத்தி, நிலத்தடி நீர் உயர தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். மின்வெட்டிற்கு நிரந்தர தீர்வு காண தமிழக அரசு முன்வர வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலங்களில் சுமார் ஒரு கோடிக்கும் அதிகமானோர் பதிவு செய்து வேலை வாய்ப்பிற்கு காத்திருப்பதாக தெரிகிறது. தமிழகத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிக்க முன்வர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. /nakkheeran.in/

கருத்துகள் இல்லை: