திங்கள், 2 ஜூன், 2014

இதுவா பாச அர்பணிப்பு ? சுத்த முட்டாள்தனம் / கோழைத்தனம் !

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில், 'தி இந்து'வின் ஆறாம் பக்கத்தை
திருப்பியபோது ஒரு தலைப்பு அதிரச் செய்தது. அது, '500 ரூபாய் பிரச்சினையால் அடுத்தடுத்து 4 பேர் தற்கொலை' என்பது. வாசிக்கத் தொடங்கினேன். அடுத்த அதிர்ச்சி. குடும்பமே தற்கொலைசெய்துகொண்டதை அன்றில் பறவைகளோடு ஒப்பீடு செய்திருந்தார் செய்தியாளர். செய்தியின் முடிவில் மீண்டும் அதிர்ச்சி. ஓர் ஏழைக் குடும்பம் ஒட்டுமொத்தமாக தற்கொலை செய்துகொண்டுள்ள கோர நிகழ்வை, அன்றில் பறவைகளோடு ஒப்பீடுசெய்து, அது ஒரு பாச அர்பணிப்பு என்று குறிப்பிட்டு எழுதப்பட்டிருந்தது கோபத்தை வரவழைத்தது. 'தி இந்து' இப்படிச் செய்யக் கூடாது.
- சின்னையா காசி, முகநூல் வழியே…

நம்பிக்கையைக் காப்போம்!
எத்தனையெத்தனை சவால்களும் இன்னல்களும் சூழ்ந்திருந்தாலும், அவற்றைத் துணிந்து நின்று எதிர்கொள்வதே வாழ்க்கை. நன்னம்பிக்கையை விதைப்பதையே 'தி இந்து' பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ் நாளிதழ் தொடங்கிய நாளிலிருந்தே எல்லா வகைகளிலும் இதை வெளிப்படுத்திவருகிறது. உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் முடக்கிப்போடப்பட்டவர்கள் காலத்தை எப்படியெல்லாம் வென்று நிற்கிறார்கள் என்பதற்கான உற்சாக உதாரணங்களைத் தொடர்ந்து வெளிச்சமிட்டுக் காட்டிக்கொண்டே இருக்கிறது. மிகச் சமீபத்தில்கூட, தேர்வுத் தோல்விகள் இளைய சமூகத்தின் மனதைக் காயப்படுத்திவிடக்கூடாது என்று உளவியல் நிபுணர்களின் உற்சாக வழிகாட்டல்களை வெளியிட்டது. இந்நிலையில், நேற்று வெளியான செய்தி வாசகர் சின்னையா காசியிடம் ஏற்படுத்திய வருத்தத்தை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. 'தி இந்து' என்றும் வாசகர்களின் நம்பிக்கையைத் தக்கவைக்கும்.தொடர்ந்து நன்னம்பிக்கையையும் நல்லெண்ணங்களையும் விதைக்கும்.
- ஆசிரியர் /tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: