வெள்ளி, 5 ஜூலை, 2013

இளவரசன் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு ! பிரேதப் பரிசோதனை முடிந்தது

தர்மபுரி: இளவரசனின் உடல் பிரேதப் பரிசோதனை முடிவடைந்து விட்டது. இருப்பினும் மறு பிரேதப் பரிசோதனைக்கு உத்தரவிடக் கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தர்மபுரியில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட இளவரசனின் உடல் பிரேதப் பரிசோதனை இன்று காலை தர்மபுரி அரசு மருத்துவமனையில் நடந்தது. முன்னதாக பிரேதப் பரிசோதனையின்போது தங்களது தரப்பிலிருந்து இருவரை அனுமதிக்க வேண்டும் என்று கோரி குடும்பத்தினரும், உறவினர்களும் போராட்டம் நடத்தினர். காவல்துறைசார்பில் அதை ஏற்பதாக உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து அரசு தரப்பில் இருந்து மருத்துவர்கள் தண்டர்சீப், ரவிக்குமார், சதீஷ்குமார் ஆகியோர் பிரேத பரிசோதனையில் ஈடுபட்டனர். இளவரசன் தரப்பிலிருந்து வழக்கறிஞர் தமயந்தி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகி நந்தன் ஆகியோர் மட்டுமே உடன் இருக்க அனுமதிக்கப்பட்டனர். டாக்டர்கள் யாரையும் போலீஸார் அனுமதிக்கவில்லை. மேலும் தடயவியல் நிபுணர்கள் 3 பேரும் உடன் இருந்தனர். இளவரசன் உடல் பிரேதப் பரிசோதனை முடிந்தது... உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு இதையடுத்து பிரேதப் பரிசோதனை முடிவடைந்தும் கூட உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களு டாக்டர்கள் இல்லாமல், பிரேதப் பரிசோதனை நடந்ததை ஏற்க முடியாது , மறு பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று இளவரசனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தர்மபுரி அரசு மருத்துவமனைவளாகத்தில் பரபரப்பு நிலவுகிறது. இந்த நிலையில், இளவரசன் பிரேதப் பரிசோதனையை, நாங்கள் சொல்லும் டாக்டர்களை வைத்துத்தான் நடத்த வேண்டும் என்று கோரி அவரது வக்கீல் சங்கரசுப்பு இன்று மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று பிற்பகல் விசாரணைக்கு வரவுள்ளது.
tamil.oneindia.in

கருத்துகள் இல்லை: