செவ்வாய், 2 ஜூலை, 2013

பாமகவிடம் கலவர சேதம் அறவிட விசாரணை ஆரம்பம் !

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில், வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா நடைபெற்றது.
இதையொட்டி, மரக்காணம் பகுதி வழியாக வாகனங்களில் வந்த பா.ம.க., வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும், மரக்காணம் காலனியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், உயிரிழப்பும், ஆங்காங்கே பல்வேறு இடங்களில் பஸ்கள், டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து டாக்டர் ராமதாஸ் உள்பட பா.ம.க. தலைவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து வட மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. இதில், அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் கல்வீச்சில் சேதம் அடைந்ததாக கூறப்பட்டது. 10 பஸ்கள், 2 வேன்கள், 35 மரங்கள் தீயிட்டுக்கொளுத்தப்பட்டன. 150-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.
சட்டசபையில், இது தொடர்பாக, முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசும்போது, சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது, தமிழ்நாடு பொது சொத்துகள் (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டம் 1992-ன் கீழ் இழப்புகளை ஈடுகட்ட பா.ம.க.விடம் இருந்து நஷ்டஈடு பெறப்படும் என்றும் அறிவித்தார்.

வருவாய்த்துறை, போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் தங்கள் துறைகளுக்கு ஏற்பட்டுள்ள சேத விவரங்களை மதிப்பீடு செய்து வைத்துள்ளனர்.
பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியது தொடர்பான விசாரணையை, அரசு கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் டி.எஸ்.ஸ்ரீதர், சிவில் நீதிபதிக்குரிய அதிகாரத்துடன் விசாரணை அதிகாரியாக இருந்து நடத்துகிறார். இது தொடர்பான முதல் விசாரணை, சென்னை எழிலகத்தில் உள்ள, வருவாய் ஆணையர் அலுவலகத்தில் உள்ள அறையில் 01.07.2013 திங்கள்கிழமை தொடங்கியது.

இது குறித்து, கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் டி.எஸ்.ஸ்ரீதர் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:-
பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக பா.ம.க., வன்னியர் சங்கத்தினர் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரணையை ஒரு வருடத்தில் முடிக்க சொல்லியுள்ளனர். சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க முடியாது. அபாரதம் விதிப்பதற்கு விசாரணை அதிகாரிக்கு அதிகாரம் உண்டு. தேவைப்பட்டால், சம்பவம் நடந்த இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிடுவேன். இவ்வாறு கூறினார்.
விசாரணை முடிவில், இந்த வழக்கில் பா.ம.க. தரப்பில் ஆஜரான வக்கீல் பாலு நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டப்படி இந்த வழக்கை சந்திப்போம். பொது சொத்துகளுக்கு இன்னார்தான் சேதம் ஏற்படுத்தினார்கள், இவ்வளவு சேதம் ஏற்பட்டுள்ளது என்ற விசாரணையே இன்னும் முடியவில்லை.
இந்த வழக்கில் டாக்டர் ராமதாஸ், பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு பதிலாக நாங்கள் ஆஜராகி வாதாட கோரி மனு செய்துள்ளோம். வழக்கு விசாரணை 30-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வக்கீல் பாலு கூறினார். 

கருத்துகள் இல்லை: