புதன், 3 ஜூலை, 2013

ரயில்வே ஊழல் வழக்கில் பன்சால் காப்பாற்றப்பட்டார் குற்றப்பத்திரிகையில் அவர் பெயர் இடம்பெறவில்லை

புதுடில்லி: ரயில்வே வாரியத்தில், முக்கிய உறுப்பினர் பதவி வாங்கித்
தருவதாக கூறி நடந்த முறைகேடு தொடர்பாக, சிறப்பு கோர்ட்டில், நேற்று சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில், முன்னாள் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் பெயர் இடம்பெறவில்லை ரயில்வே வாரிய உறுப்பினர் மகேஷ்குமாருக்கு, "பசையுள்ள' வேறு பதவி வாங்கித் தருவதாக கூறி, ரயில்வே அமைச்சராக இருந்த பவன்குமார் பன்சாலின் உறவினர், விஜய் சிங்லா என்பவர், 90 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றார். இந்த விவகாரத்தில், பன்சாலுக்கும் தொடர்பு இருப்பதாக, குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, அவர் தன் ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.மகேஷ் குமார், தன் தூதர் மற்றும் இடைத்தரகராக செயல்பட்ட கோயல் மூலம், 90 லட்சம் ரூபாயை, விஜய் சிங்லாவிடம், சண்டிகாரில் உள்ள அவர் வீட்டில் கொடுத்தார். இதையடுத்து, சி.பி.ஐ., அதிகாரிகள், சிங்லாவையும், கோயலையும் கைது செய்தனர். இந்த விவகாரத்தில், மகேஷ் குமார் உட்பட, இடைத்தரகராக செயல்பட்ட, மற்றொரு நபரான, மஞ்சுநாத், உட்பட, 10 பேர் கைது செய்யப்பட்டனர்.


இந்த வழக்கில், சி.பி.ஐ., இன்றைக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், சிறப்பு கோர்ட்டில், நேற்று, நீதிபதி சுவர்ண காந்த ஷர்மா முன்னிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில் ரயில்வே வாரிய உறுப்பினராக இருந்த மகேஷ்குமார், பன்சாலின் உறவினர் சிங்லா, இடைத்தரகராக செயல்பட்ட சந்தீப் கோயல், சமீர் சந்திர், சுசில் டாகா, அஜய் கார்க், ராகுல் யாதவ், மஞ்சுநாத், உதவியாளரான முரளி, வேணுகோபால் ஆகியோர் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. விஜய் சிங்லாவின் வீட்டிற்கு, லஞ்ச பணத்தை எடுத்துச்சென்ற, கூரியர் நிறுவனத்தை சேர்ந்த இரண்டு பையன்கள் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் இடம் பெறவில்லை.

இந்த வழக்கால், அமைச்சர் பதவியை இழந்து, சி.பி.ஐ.,யால் நீண்ட விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பவன்குமார் பன்சால் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம் பெறவில்லை. இவருக்கு நேரடியாக தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரத்தையும், சி.பி.ஐ.,யால் கண்டுபிடிக்க முடியவில்லை, என, கூறப்படுகிறது. ஒருவேளை இதன் பின் ஆதாரம் கிடைத்தால், துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் போது, சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதால், கைதானவர்கள் ஜாமினில் விடுதலை செய்யப்படுவார்கள், என எதிர்பார்க்கப்படுகிறது. dinamalar.com

கருத்துகள் இல்லை: