பாகிஸ்தானில் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று படிப்பதை தடை செய்துள்ள தலிபான்களின் நடவடிக்கைகளை, குழந்தைப் போராளியான மலாலா யூசுப்சாய் தைரியமாக எதிர்த்தார். அத்துடன், பெண் கல்வி உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இதனால் அவர் மீது ஆத்திரம் அடைந்த தலிபான் தீவிரவாதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் 9-ம் தேதி அவரை சரமாரியாக சுட்டனர். தலையில் குண்டு பாய்ந்து உயிருக்குப் போராடிய அவருக்கு லண்டனில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு மறுபிறவி எடுத்துள்ள மலாலா தொடர்ந்து அங்கேயே தங்கியிருக்கிறார். அவரது தந்தை பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் பணியாற்றுவதால் அங்கு பள்ளிப் படிப்பைத் தொடர்கிறார். இந்நிலையில், மலாலாவின் 16-வது பிறந்தநாள் ‘மலாலா தினமாக’ உலகம் முழுவதும் வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கொண்டாடப்பட உள்ளது. ஐ.நா. சார்பில் நியூயார்க்கில் உள்ள தலைமை அலுவலகத்தில் 12-ம்தேதி மலாலா தினம் இளைஞர் அமர்வு நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடி மாணவனை ஐ.நா. தேர்வு செய்துள்ளது. 17 வயதான லட்சுமணன் ஹெம்ப்ராம் (வயது 17) என்ற அந்த மாணவன், கலிங்கா சமூக அறிவியல் கல்வி நிலையத்தில் படித்து வருகிறான். அவன் இந்தியாவின் இளம் தலைவர் பிரதிநிதியாக மலாலா தின நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்.
மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஏழை சாந்தால் பழங்குடி குடும்பத்தில் பிறந்தவர் லட்சுமணன். அவரது தந்தை ஒரு தொழிற்சாலையில் வேலை பார்க்கிறார். 2006-ம் ஆண்டு முதல் கலிங்கா கல்வி நிலையத்தில் படித்து வரும் லட்சுமணன், இப்போது பிளஸ்2 முடித்துள்ளார். பொறியாளர் ஆகும் நோக்கத்துடன் உயர்படிப்பை தொடங்கியிருக்கிறார்.
இளையோர் தலைமைப் பண்பு பயிற்சி பெற்றுள்ள லட்சுமணன், தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஐ.நா. சுற்றுச்சூழல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு காலநிலை மாற்றம் தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.maalaimalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக