சனி, 8 டிசம்பர், 2012

புலிகளின் கொலை பட்டியலில் இருந்து கருணா, டக்ளஸ் போல உயிர் தப்பினேன்!” -சம்மந்தன்

Viruvirupu “விடுதலை புலிகளின் கொலை பட்டியலில் எனது பெயரும், எனது சகாக்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன” என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார், இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். அப்படியிருந்தும் புலிகளிடம் இருந்து உயிர்தப்பி, தற்போது இலங்கை தமிழர்களின் அதிகபட்ச எம்.பி.க்களை கொண்ட தமிழ் கட்சியின் தலைவராக உள்ளார் இவர்.
அதே நாடாளுமன்றத்தில் தற்போது உள்ள விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்), அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் புலிகளின் கொலைப் பட்டியலில் இருந்தவர்கள்தான். அந்த வரிசையில் தாமும், தமது சகாக்களும் புலிகளின் கொலை பட்டியலில் இருந்ததை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இலங்கை நாடாளுமன்றத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது, முன்பு விடுதலைப் புலிகள் இலங்கையில் இயங்கிய காலத்தில், அவர்களால் உருவாக்கப்பட்ட கட்சி.
விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் தலைவராக இருந்த தமிர் விடுதலைக் கூட்டணியில் இருந்து இரா.சம்பந்தன் உட்பட உறுப்பினர்கள், விடுதலைப் புலிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த மண்டையன் அதிரடி படையணியின் பிரதம தளபதி சுரேஷ் பிரேமச்சந்திரன், என்று எதிரும் புதிருமாக உள்ள பலரைக் கொண்டு விடுதலை புலிகள் தீர்க்கதரிசனத்துடன் உருவாக்கிய அரசியல் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனால், அக் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த இரா.சம்பந்தன் நேற்று (வெள்ளிக்கிழமை) இலங்கை நாடாளுமன்றத்தில் பேசியபோது, “விடுதலைப்புலிகளுடன் எமக்கு தொடர்பு உள்ளது என எம்மீது தவறான குற்றச்சாட்டுகளும், பிரசாரங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. அதனை நான் மறுக்கின்றேன்.  ஆனால், நீங்களோ (அரசு) எம்மைப் புலிகள் என்றும், எங்களைப் புலிகளின் பங்காளிகள், பிரதிநிதிகள் என்றும் கூறுகின்றீர்கள். இதனை மாற்றிக்கொள்ளவேண்டும்.
விடுதலைப் புலிகள் சிங்கள மக்களை மட்டும் கொலை செய்யவில்லை. விடுதலை புலிகளின் கொலை பட்டியலில் எனது பெயரும், எனது சகாக்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன.
புலிகள் இருந்த காலங்களில் எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு சுதந்திரமாக கருத்துக்களை வெளியிட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தில், எமது சுதந்திரமான கருத்துக்களை வெளியிடுகிறோம். இதை எமக்கு ஏற்படுத்திக் கொடுத்த ஜனாதிபதிக்கும், பாதுகாப்புச் செயலாளருக்கும் புண்ணியம் கிடைக்க வேண்டும்.
இன்று புலிகளை அழித்துவிட்டோம் என்று யார் யாரோ கூறிக்கொள்கின்றனர். புலிகளை எவரும் அழிக்கவில்லை. அவர்கள் தம்மைத் தாமே அழித்து கொண்டனர்.  ஜனநாயகத்தையும், தார்மீகத்தையும், மனித உரிமைகளையும் கடைப்பிடிக்கத் தவறியதாலேயே புலிகள் அழிந்து போனார்கள்.
வெளிநாட்டில் உள்ள தமிழர்கள், உங்களை ‘புலம்பெயர்வாழ் சமூகம்’ என்று சொல்லிக்கொண்டு கூச்சல் போடுகின்றீர்கள். 1956-ம் ஆண்டு முதல் 1983-ம் ஆண்டு வரை சிங்கள அரசுகளால் மேற்கொள்ளப்பட்ட இன ஒழிப்பின்போது தம்மைப் பாதுகாத்து கொள்வதற்காக இந்த மக்கள் நாட்டைவிட்டு வெளியேறி விட்டனர். நாம் இன்னமும் இலங்கையிலேயே இருக்கிறோம்.
இலங்கையின் வட பகுதியில் (தமிழ் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி) இருந்து ராணுவ முகாம்களை முழுமையாக அகற்றவேண்டும் என்றோ, ராணுவம் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்றோ, நான் ஒருபோதும் கூறியதில்லை.
வடக்கில் நிலைகொண்டுள்ள ராணுவத்தினர் தங்களின் வரையறைக்குள் இருந்து செயற்படவேண்டும் என்றுதான் கூறினேன். தமிழர் பகுதிகளில் அவர்கள் புலனாய்வு செய்யலாம், கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆனால் அவர்கள் எமது மக்களின் வாழ்விற்கு இடையூறாக இருப்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
தற்போது, அமெரிக்கா உட்பட வெளிநாடுகளும், ஐ.நா.வும் இலங்கை தமிழர் பிரச்னையை தீர்ப்பதற்கு, இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்புடன், இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்துகின்றன. அப்படியான நிலையில், அக் கட்சியின் தலைவர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இலங்கை சீனியர் அமைச்சரும், முன்பு தமிழர் தரப்புடன் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொண்டவருமான நிமால் சிறிபால டி சில்வா, “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், விடுதலைப் புலிகளுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இது பாராட்டப்பட வேண்டிய விஷயம். இரா.சம்பந்தனின் உரையின் முதல் பகுதி அரசுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது” என்று பேசினார்.
தொடர்ந்தும், இரா.சம்பந்தன் பற்றி சிலாகித்துப் பேசிய அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, “உறுப்பினர் இரா.சம்பந்தன் இனவாத கோட்பாடுகளை கைவிட்டு உரையாற்றினார். நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். ராணுவத்தினர் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கில் தமிழ் மக்களின் மனங்களை வென்று வருகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.
இதைத்தான் நாமும் சொல்லி வருகிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும், நாம் சொல்லும் கருத்துகளை உறுதிப் படுத்தியதற்கு, அரசின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்” என்றார்.
தற்போது இலங்கையில், நாடாளுமன்ற பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளில், அதிகபட்ச உறுப்பினர்களை கொண்ட கட்சி, இரா.சம்பந்தனின் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்புதான். மற்றைய தமிழ் கட்சிகள், அரசு சார்பு கட்சிகள் என்று கூறப்படுகின்றன. இந்த நிலையில், இரா.சம்பந்தனின் நாடாளுமன்ற பேச்சு, திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் சில பிரிவுகள், மற்றும் வைகோ, நெடுமாறன், சீமான் ஆகியோரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பை கடுமையான சொற்களில் விமர்சிப்பார்கள் என எதிர்பார்க்கலாம். தியாகிகளை விட நீண்ட துரோகிகளின் பட்டியலில், இரா.சம்பந்தனின் பெயரையும் இணைத்துக் கொள்ள சான்ஸ் உள்ளது.
அல்லது, சம்பந்தனை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலை இருந்தால், பிளேட்டை மாற்றி, “இலங்கை அரசு அச்சுறுத்தி, அவரை அப்படி பேச வைத்தது. அப்படி பேசாவிட்டால், இலங்கையில் அவரது உயிருக்கு உத்தரவாதம் இல்லை” என்று ஒரே போடாக போட்டுவிடலாம்.
இரா.சம்பந்தன் குடும்பத்துடன் வசிப்பது, இலங்கையில் அல்ல, இந்தியாவில்!

கருத்துகள் இல்லை: