திங்கள், 3 டிசம்பர், 2012

தலித்களை குறி வைத்து ராமதாஸ் தலைமையில் தீர்மானம் போட்டு திரளும் பிற ஜாதி அமைப்புகள்!

சென்னை: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்" தலைமையில் பல்வேறு ஜாதிகளைச் சேர்ந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூடி ஒரு கூட்டம் போட்டு தலித் மக்கள் தொடர்பாக 7 தீர்மானங்களையும் போட்டுள்ளனர்.
தலித் மக்களால் பிற சமுதாய மக்கள் பாதிக்கப்படுவதாகவும், இழிவுபடுத்தப்படுவதாகவும் இவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்தத் தீர்மானங்கள் குறித்த விவரம்:
எஸ்.சி-எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை திருத்த வேண்டும்
அனைத்து சமுதாய மக்களும் சம உரிமையுடனும், சம மரியாதையுடனும் வாழ வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமும், கருத்தும் ஆகும். சாதியின் பெயராலோ அல்லது மதத்தின் பெயராலோ பாகுபாடு காட்டப்படுவதை எவரும் விரும்பவில்லை. குறிப்பாக காலங்காலமாக ஒடுக்கப்பட்ட தலித் சமுதாயத்தினர் கல்வி, வேலைவாய்ப்பு , பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னேனறவேண்டும் என்பதுதான் அனைத்து சமுதாயத்தினரின் விருப்பமாகும். இந்தத் துறைகளில் அவர்கள் முன்னேறி வருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. http://tamil.oneindia.in/

அதேபோல், தமிழகத்தின் எந்தப்பகுதிகளிலும் தீண்டாமை என்பது எந்த வடிவத்திலும் நிலவக்கூடாது; மனதளவில் கூட தீண்டாமையை எவரும் கடைபிடிக்கக்கூடாது என்பது தான் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ள அனைத்து சமுதாயத் தலைவர்களின் நிலைப்பாடு ஆகும். தீண்டாமை இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்காக அனைத்து சமுதாயத்தினரும் மேற்கொண்ட முயற்சிகளின் பயனாக தமிழகத்தில் தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்கிறது என்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாக உள்ளது.
இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில், அதை எண்ணி மகிழ்ச்சி அடைய வேண்டிய தலித் சமுதாயத்தினரில் சிலர், தங்களுக்கு பிடிக்காதவர்களை பழி வாங்கவேண்டும் என்பதற்காக அவர்கள் மீது எஸ்.சி-எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கும்படி பொய்ப் புகார்களை அளிப்பது வருத்தமும் வேதனையும் அளிக்கிறது.
பொதுவாகவே, தங்களுக்கு பிடிக்காதவர்களை பழி வாங்கவும், பொய்ப் புகார்களை அளிக்கவும், காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்து செய்யவும் தான் எஸ்.சி-எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தலித்துகளில் சிலர் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். 1989ஆம் ஆண்டில் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து இன்று வரை, இச்சட்டப் பிரிவுகளின் படி தொடரப்பட்ட வழக்குகளில் 2.2 விழுக்காடு வழக்குகளில் மட்டுமே குற்றச்சாற்றுகள் நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.
இதிலிருந்தே இந்தச் சட்டப்படி தொடரப்பட்ட வழக்குகளில் 97.8 விழுக்காடு வழக்குகள் பொய் வழக்குகள் என்பது தெளிவாகிறது. இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது குறித்து கவலை தெரிவித்த டெல்லி அமர்வு நீதிமன்றம், எஸ்.சி-எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் எதற்காக கொண்டு வரப்பட்டதோ, அந்த நோக்கத்திலிருந்து விலகிச் சென்று கொண்டிருக்கிறது. தங்களுக்கு பிடிக்காதவர்களுடனான சிறு சிறு பிரச்னைகளை தீர்த்து பழி வாங்குவதற்காக இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தப் போக்கை தடுத்து நிறுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. இந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதை மத்திய அரசே நாடாளுமன்றத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறது.
வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது தான் பல்வேறு சமுதாயங்களிடையே மோதலை ஏற்படுத்தி சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைகிறது. சமூக நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டுமானால் இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டால், அதன்படி கைது செய்யப்படுபவர் ஜாமினில் வெளிவரமுடியாத நிலை உள்ளது; இதை மாற்றி ஜாமினில் வெளிவரும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்படவேண்டும்.
எனவே, இந்தச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நீதிபதி தலைமையில்,கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி அளிக்கப்படும் புகார்கள் அனைத்தையும் இக்குழுவின் பார்வைக்கு அனுப்பி, ஒப்புதல் பெற்ற பிறகே அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் அளிக்கப்படும் புகார்கள் நிரூபிக்கப்படாத பட்சத்தில், அவை பொய்ப் புகார்கள் எனக் கருதப்பட்டு, அவற்றை அளித்தவர்கள் மீது நேரடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பிரிவுகளை சேர்க்கும் வகையில் எஸ்.சி-எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டம் வலியுறுத்துகிறது.
வன் கொடுமை சட்டத்தில் திருத்தம் கோரி போராட்டம்
தமிழ்நாட்டில் எஸ்.சி- எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகள் தவறாக பயன்படுத்தப்படுவது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதில் காட்டும் அதே அக்கறையை, அதற்கான வன்கொடுமை தடுப்புச் சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதிலும் மத்திய, மாநில அரசுகள் காட்ட வேண்டும். அப்போது தான் சமூக நல்லிணக்கம் பாதுகாக்கப் படுவதையும், இச்சட்டப் பிரிவுகளால் அப்பாவிகள் பழிவாங்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய முடியும்.
எனவே, எஸ்.சி-எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில், அதில் தேவையான திருத்தங்களைச் செய்ய வலியுறுத்தி அனைத்து சமுதாயங்களின் சார்பில் வரும் 2013ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் தொடர்முழக்கப் போராட்டம் நடத்துவதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
காவல்துறை நடுநிலையுடன் செயல்பட வேண்டும்
தமிழக காவல்துறையில் உள்ள சில அதிகாரிகள் ஒருதலைபட்சமாக நடந்து கொள்கின்றனர். நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டிய காவல்துறை அதிகாரிகள், அதை காலில் போட்டு மிதித்துவிட்டு, சாதி உணர்வுடன் தங்களது சாதிக்காரர்கள் பக்கமே நிற்கின்றனர். இதனால், பல இடங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்படுவதற்குப் பதிலாக, அவர்கள் மீதே பொய் வழக்குகள் போடப்படுவதும், பழி வாங்கலுக்கு உள்ளாக்கப்படுவதும் நடைபெறுகிறது. சமூக நல்லிணக்கம் பாதிக்கப்படுவதற்கு சில காவல்துறை அதிகாரிகளின் இந்தப் போக்கே காரணமாக உள்ளது.
இப்போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது. சமூக நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்காக, நேர்மையுடனும், ஒரு தரப்பு நிலை எடுக்காமலும் பணியாற்ற வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் அறிவுரைகளை வழங்க வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குனர் அவர்களை இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
பெற்றோர் அனுமதியுடன் மட்டுமே 21 வயதுக்கு முன் திருமணம்
நாகரீக சமுதாயத்தில் காதல் திருமணங்களுக்கோ அல்லது கலப்பு திருமணங்களுக்கோ தடை போடுவது சரியானதாக இருக்காது. இத்தகைய திருமணங்களை நாங்கள் எதிர்க்கவும் இல்லை.
ஆனால், காதல் திருமணங்கள் என்ற பெயரில் நடத்தப்படும் நாடகத் திருமணங்களால் சமுதாயத்தில் பல்வேறு சீரழிவுகள் ஏற்படுகின்றன. எனவே,இத்தகைய நாடகத் திருமணங்களைத் தான் அனைத்து சமுதாயங்களும் எதிர்க்கின்றன.
இந்தத் திருமணங்கள் உண்மையான அன்பையும் நேசத்தையும் அடிப்படையாகக் கொண்டிருக்காமல், உடல் கவர்ச்சி, நாடகம் நடத்தி திருமணம் செய்த பின்னர் பெண் வீட்டாரிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கம் ஆகியவற்றையே அடிப்படையாக கொண்டிருக்கின்றன. இரு மனம் இணைவது தான் திருமணம் என்ற இலக்கணத்திற்கு பொருந்தாத வகையில் நடைபெறும் இந்த நாடகத் திருமணங்கள் ஓரிரு மாதங்களிலேயே தோல்வியில் முடிகின்றன. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளும் இதை உறுதி செய்கின்றன.
உதாரணமாக நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் நடைபெற்ற 955 காதல் நாடகத் திருமணங்களில் 712 திருமணங்கள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன. திருமணத்திற்கு பிறகு எதிர்கொள்ளும் கொடுமைகளை தாங்கிக் கொள்ள முடியாமல் 32 இளம் பெண்களும், அவமானத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் 37 பெற்றோர்களும் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர்.
காதல் நாடகத் திருமணங்களால் சமுதாயத்திற்கு கிடைக்கும் பயன் தோல்வியடைந்த திருமணங்களும், பெற்றோரின் தற்கொலைகளும் தான். சமூக மோதலுக்கும், நல்லிணக்கம் கெடுவதற்கும் இவைதான் அடிப்படையாக அமைகின்றன. தோல்வியடைந்த காதல் நாடகத் திருமணங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருமே தலித் அல்லாத சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களை ஏமாற்றி மணந்து கொண்டவர்கள் அனைவரும் தலித்துகள் என்பதிலிருந்தே, இத்தகைய திருமணங்கள் எப்படி திட்டமிட்டு நடத்தப்படுகின்றன என்பதையும், இத்தகைய திருமணங்களை செய்யும்படி தலித் இளைஞர்களை அந்த சமுதாய தலைவர்கள் எப்படியெல்லாம் தூண்டுகிறார்கள் என்பதையும் உணர முடியும்.
காதல் நாடகத் திருமணங்கள் என்ற வலையில் வீழ்த்தப்படும் பெண்கள் அனைவருமே பதின் வயது பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்த வயதில் அவர்களால் தங்களின் எதிர்காலம் பற்றி சிந்திக்க முடியாது. உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் குடும்பம் நடத்துவதற்குரிய தகுதியை அவர்கள் பெற்றிருப்பதில்லை என்பதால் இவை குழந்தை திருமணங்களாகவே அமைகின்றன.
இதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க பெண்களின் திருமண வயதை 21 ஆகவும், ஆண்களின் திருமண வயதை 23 ஆகவும் உயர்த்த வேண்டும். இந்த வயதுக்கு முன்பாக அவர்கள் திருமணம் செய்துகொள்வதாக இருந்தால், அதற்கு பெற்றோரின் ஒப்புதல் அவசியம் என்று சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். சீனா, சிங்கப்பூர், ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளிலும், அமெரிக்காவின் மிசிசிபி மாநிலத்திலும் குறிப்பிட்ட வயதுக்கு முன்பாக திருமணம் செய்துகொள்ள பெற்றோரின் ஒப்புதல் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதே போன்ற சட்டத்தை இந்தியாவிலும் கொண்டுவந்து காதல் நாடக திருமணங்களைத் தடுக்கவேண்டும் என்று அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டம் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது. இஸ்லாமிய, கிறித்தவ மத கோட்பாடுகளுக்குட்பட்டு நடைபெறும் திருமணங்களை இத்தீர்மானம் கட்டுப்படுத்தாது என்றும் இக்கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.
தலித்கள் வாழும் பகுதியில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தலித்துகள் வாழும் பகுதிகள் வழியாக மாணவிகளோ, பெண்களோ சுதந்திரமாக நடமாட முடியாத நிலை காணப்படுகிறது. அவ்வழியே செல்லும் மானவிகளை அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் அருவறுக்கத்தக்க வகையில் ஈவ் டீசிங் செய்வதால் மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்தவேண்டிய நிலை ஏற்படுகிறது.
இதைத்தடுக்க காவல்துறையில் ஈவ் டீசிங் தடுப்புப் பிரிவு என்ற தனிப்பிரிவை ஏற்படுத்தி, அப்பிரிவைச் சேர்ந்த காவலர்களை மாணவியரும், பெண்களும் செல்லும் பாதைகளிலும், பேருந்து நிறுத்தங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள் அமைந்துள்ள இடங்களிலும் சாதாரண உடையில் நிறுத்தி கண்காணிக்க வேண்டும்.
மாணவிகளிடம் தவறாக நடந்துகொள்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் சென்னையில் இருப்பதைப் போல மாணவிகளும், பிற பெண்களும் பயணம் செய்வதற்கு வசதியாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் உள்ள பகுதிகளுக்கு மகளிர் மட்டும் என்ற சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழக அரசை அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தொகுதிகளை மாற்றுங்கள்
சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தனித் தொகுதிகள் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை என சுழற்சி முறையில் மாற்றி அமைக்கப்படுவதற்கு ஏற்ற வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று மத்திய அரசை அனைத்து சமுதாய தலைவர்கள் கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
விசாரணைக் குழு அமையுங்கள்
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் நடத்தப்பட்ட காதல் நாடகத் திருமணங்களால் ஆயிரக்கணக்கான இளம்பெண்களும், அவர்களின் குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் தலைமையில் ஓர் விசாரணைக் குழுவை அமைத்து, விசாரித்து, உண்மை நிலையை நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: