ஞாயிறு, 2 டிசம்பர், 2012

ஜெயிக்கலாம் தோழி / அத்தியாயம் 19 உங்கள் டார்கெட் என்ன?



கடந்த காலங்களில் வங்கிகள் தொழிலதிபர்களுக்கு அதிக அளவு சாதகமாக இருந்தது. இந்திய வங்கிகளின் கண்ணோட்டம் பெரும்பாலும் தொழிலதிபர்களுக்கு கடன் கொடுப்பதை ஊக்குவிக்கும் விதமாகவே இருந்தது. இந்திய வங்கிகளின் கூட்டமைப்பு தொழில் கடன்களை கொடுப்பதில் நடுத்தரமான ஒரு கொள்கையைக் கையாண்டு வந்தது. அதாவது கடன் கொடுக்கும்போது மீடியம் ரிஸ்க் உள்ள தொழில்களையே தேர்ந்தெடுத்தனர். இதன் பொருள், தொழில் தொய்வடைந்தாலும், வங்கிக்கு வர வேண்டிய நிலுவைகளைப் பிணையாக அசையாச் சொத்துக்களிலிருந்து பெற்றுக்கொண்டுவிடலாம். http://www.tamilpaper.net/?p=7155

ஒரு தொழிலைத் தொடங்க நினைப்பவர் எதிர்காலத்தில் வங்கிக் கடனை ஒழுங்காகச் செலுத்துவார் என்ற நம்பிக்கையிலும் அவரது கடந்த கால வங்கிக்கணக்குகளை வைத்தும் ஒரு வங்கி முடிவு செய்கிறது. ஒரு நல்ல கடந்தகாலத்தை உருவாக்கத் தெரியாத தொழிலதிபர்களால் எப்படி ஒரு நல்ல வளமான வருங்காலத்தை உருவாக்கமுடியும்? வங்கி அதிகாரிகள் வங்கிக் கடன் கொடுக்கும்போது பெரும்பாலும் நமது அதிகபட்ச பொறுமையைச் சோதிப்பது வழக்கமாகும். இது தொழிலதிபர்களுக்கு பெரும் சுமையாக இருந்தாலும், ஏன் அவ்வாறு செய்கிறார்கள் என்றால், உங்கள் தொழிலை நடத்தக்கூடிய அளவு பணத்தை உங்களை வைத்தே புரட்டச் செய்ய வேண்டுமென்பதால், இதை சரியாகப் புரிந்துக் கொள்ளவேண்டும்.
சுயதொழிலுக்கு வருபவர்கள் சவால்களைச் சமாளிக்கும் திறன் படைத்தவர்களாக இருப்பது அவசியம். அதனால் புதிதாக வரும் தொழில்முனைவோர் தங்கள் கனவுகளை எண்களோடு அதாவது டார்கெட்டோடு தொடர்புப்படுத்தி தொழில் செய்யப் பழகுங்கள். மாதாந்திரத் தொழிலுக்கான குறியீடுகளை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.
இப்படி நிர்ணயித்துக்கொண்டு பணிபுரியும்போது வியாபாரம் நிச்சயமாக விரிவடையும். விரிவடைந்து வரும் தொழில் மூலதனத்திலிருந்து, ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து தனியாக சேமிப்பது அவசியம். இது நிறுவனத்தின் பலமாக உருமாறும்.
உங்கள் தொழில் நிறுவனங்களுக்கு கிடைக்கும் கடன்கள் என்பது (குறுந்தொழில்களைப் பொருத்தவரை) தனிநபர் கடன்களே. ஆகவே தனிநபர்களின் Networth எனப்படும் சுயமதிப்பீட்டை முடிந்தவரை உயர்த்திக்கொள்ளவேண்டும்.
சமீபத்தில் DARE எனப்படும் நாளிதழ் குறுந்தொழிலுக்கான சமூக அறிவை அதிகப்படுத்தும் நோக்கத்துடன் ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது. அதில் சிறு மற்றும் குறுந்தொழில்களைப் பாதிக்கும் இரு பெரும் அங்கங்களாக கடனுதவியும் தொழில்நுட்ப அறிவும் எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் தமிழ்நாட்டிலுள்ள சில முக்கிய நகரங்களின் போக்கைப்பற்றி விரிவாக அலசப்பட்டது. அதன் ஒரு சில துளிகளை கீழே பார்ப்போம்.
கோவையைப் பொருத்தவரை பெரும் என்ஜினியரிங் சார்ந்த யூனிட்களின் தேவை அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்தப் பயிலரங்கில் பேசிய பலரும் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக் கொள்ளுதல் தொழிலதிபர்களுக்கு மிக அவசியமானது என்பதையும், இதனால் தொழிலுக்கு ஏதுவாகும் என்றும், பணமும் நேரமும் மிச்சப்படுத்த தொழிலதிபர்களால் இயலும் என்பதையும் எடுத்துக்காட்டினார்கள்.
சென்னையைப் பொருத்தவரை கணினிச் சார்ந்த துறைகள் (ஹார்ட்வேர், சாஃப்ட்வேர்) மிக அதிக அளவில் பொருளீட்டும் வாய்ப்புகள் பெற்றுள்ளன என்று கணிக்கப்பட்டது. திருவனந்தபுரமும் இத்துறைகளில் மிக அதிக அளவில் பேசப்படும் ஒரு வர்த்தக இடமாக மாறிக்கொண்டு வருகிறது.
0
இந்தியாவில் ஒரு நிறுவனத்தை உருவாக்கி அதைப் பதிவு செய்வதற்கு குறைந்தது 20 முதல் 40 நாள்கள் தேவைப்படுகின்றன. தொழில் என்று வரும்பொழுது நிறுவனங்களின் தன்மையையும் அதை பதிவு செய்வதற்கு வேண்டிய சட்டத்தேவைகளையும் அடிப்படையாகத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
தனி நபர்கள் மட்டும் அங்கத்தினராக இருந்து தொடங்குவதை நிறுவனம் என்று அழைப்பர். இத்தகைய நிறுவனங்களை நடத்துபவர், அதாவது தொழில்முனைவோர் Current Account எனப்படும் வியாபாரக் கணக்கை வங்கியில் தொடங்க வேண்டும். நான் முன்பே சொல்லியது போல் இத்தகைய தனிநபர் நிறுவனங்களுக்கு வருமான வரிக்கான பதிவுகள் மற்றும் சேவை வரிக்கான பதிவுகள் அவசியம். மின்சாரம் வணிகத்துக்குத் தேவையான மறுமதிப்பீடு செய்து, செலுத்த தொடங்கியிருக்க வேண்டும் (Commercial E.B).
அடுத்து பிரைவேட் லிமிடெட் எனப்படும் கூட்டு நிறுவன அமைப்பைப் பற்றி பார்ப்போம். இத்தகைய நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் இரண்டு இயக்குநர்களும் இரண்டு பங்குதாரர்களும் தேவை. அதிகபட்சமாக 50 பங்குதாரர்கள் வரை இருக்கலாம். இயக்குனர்களின் அளவுக்கு உச்சவரம்பு கிடையாது. ஒவ்வொரு நிறுவனமும் தங்களுக்கென்று Articles of Association என்பதை உருவாக்கி, அதாவது நிறுவனத்துக்குரிய சட்டவிதிகளை ஏற்படுத்தி அதிகபட்ச இயக்குநர்களின் தொகையை நிர்ணயித்துக் கொள்ளலாம். இத்தகைய பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு குறைந்தபட்ச முதலீடு ஒரு லட்சம். பொதுமக்களிடமிருந்து முதலீடு வாங்க முடியாது. எனினும் இயக்குனர்களிடமிருந்தும் பங்குதாரர்களிடமிருந்தும் அவர்களது உறவினர்களிடமிருந்தும் deposit எனப்படும் வைப்புத் தொகைகளை முதலீடாகப் பெற்றுக் கொள்ள முடியும். பங்குதாரர்கள் தங்களுடைய பங்குகளை அந்நிறுவனத்தின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள முடியும்.
பப்ளிக் லிமிடெட் எனப்படும் பொதுத்துறை நிறுவனங்களின் அடிப்படை விதிகளைப் பார்ப்போம். இந்த நிறுவனங்களின் குறைந்தபட்ச முதலீடு 5 லட்சமாகும். இயக்குனர்களின் எண்ணிக்கை மூன்றாக இருத்தல் அவசியம். பங்குதாரர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை ஏழு, அதிக பட்ச உச்சவரம்பு இல்லை. பொதுமக்களிடமிருந்து முதலீட்டுக்கு பணத்தை வசூலிக்கலாம்.
0

கருத்துகள் இல்லை: