சனி, 8 டிசம்பர், 2012

கமல் விதை போட்டிருக்கிறார். விஸ்வரூபம் எடுத்து விருட்சமாக

கமல் எப்போதுமே மந்தையிலிருந்து பிரிந்து தனியே செல்லும் ஆடுதான். இந்த தோற்றத்தை அவர் வலிந்து உருவாக்குகிறார் என்றொரு விமர்சனம் உண்டு. எனக்கென்னவோ அவரது இயல்பே இதுதானென்று தோன்றுகிறது. சாரு சொல்வதைப் போல ஒருவகையில் கமல் ‘நிகழ மறுத்த அற்புதம்’தான். அவருக்கு பலவருடம் பின்னால் வந்தவர்களெல்லாம் அவரை தாண்டி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். அதேநேரம் தமிழ் சினிமாவுக்கு புது இரத்தம் பாய்ச்சும் பணியை அவர் தவம் போல மேற்கொண்டு வருவதை மறுக்க முடியாது. குறிப்பாக அதிசமீபத்திய தொழில்நுட்பங்களை தமிழில் அறிமுகப்படுத்திப் பார்த்துவிட வேண்டும் என்கிற அவரது வெறி முக்கியமானது. இதனால் கமலுக்கு தனிப்பட்ட முறையில் ஏராளமான பொருளிழப்பு என்றாலும், சினிமாவுக்கு லாபம்தான்.திருட்டு வீடியோ கேசட் காலத்திலிருந்தே தொழில்நுட்பங்களை மிகச்சரியாக புரிந்துகொண்டு, அதற்கேற்ப சினிமாவில் மாற்றங்கள் தேவை என்று வலியுறுத்தி வருகிறார். தொழில்நுட்பத்தை சபிக்கக்கூடாது. அதை நமக்கு வாகாக எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென சிந்திக்க வேண்டும் என்பது அவரது கட்சி. http://www.luckylookonline.com/
லேட்டஸ்ட்டாக விஸ்வரூபம் பிரச்சினை. கிட்டத்தட்ட கோவணத்தை கூட அடகுவைத்து படம் எடுத்திருக்கிறார். இப்போதிருக்கும் வியாபார முறையை வைத்துக்கொண்டு இப்படத்தை காட்சிப்படுத்தினால், தலையில் துண்டை போட்டுக்கொண்டு காசி, இராமேஸ்வரம் என்று தயாரிப்பாளர் கமல் போயாகவேண்டும். ‘வீடியோ ஆன் டிமாண்ட்’ மூலமாக வெளியிடுவதின் மூலம் பெரிய லாபத்தை காணமுடியுமென்று சொல்கிறார். குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டி பழகிய தமிழ் திரையுலகினர் வழக்கம்போல குதித்துக் கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் இன்று குதித்துக் கொண்டிருப்பவர்கள்தான் இதே முறையில் பல கோடிகளை குவிக்கப் போகிறார்கள். ஏனெனில் கமலின் ராசி அப்படி. அவர் அறிமுகப்படுத்தும் விஷயங்களின் அறுவடையை மற்றவர்கள்தான் செய்துக் கொண்டிருக்கிறார்கள். அவருக்கு உழக்குதான் மிச்சம்.
சம்பாதிக்கும் எல்லா பணத்தையும் திரும்பத் திரும்ப சினிமாவிலேயே முதலீடு செய்யும் கமல்ஹாசன், சினிமாவை அழிக்கும் முயற்சிகளில் இறங்கமாட்டார் என்று நம்பலாம். படமெடுக்கும் முதலாளி என்கிற அடிப்படையில் அவர் ‘லாபம்’ எதிர்ப்பார்ப்பது நியாயம்தான். கமல் வெறும் கலைஞன் மட்டுமல்ல.
சினிமா என்பது சர்வநிச்சயமாக வணிகம்தான். இதை சினிமாக்காரர்கள் ஒப்புக்கொள்வதில் ‘ஈகோ’ இருக்கலாம். கலை, பொழுதுபோக்கு ஆகிய அம்சங்களை தாண்டி, சினிமாவின் குறிக்கோள் பணம் ஈட்டுவதே. ஹாலிவுட்டுக்கு நெருக்கமாக தொழில்நுட்பரீதியாக நாம் வளரும் அதே நேரத்தில், அவர்களது வியாபார யுக்திகளையும் கைக்கொண்டாக வேண்டும். இன்றைய தினகரன் வெள்ளிமலரில் (டிச.7, 2012) ‘தயாரிப்பாளரே இல்லாமல் சினிமா’ என்றொரு கட்டுரை வெளியாகியிருக்கிறது (சினிமா ஆர்வலர்கள் நிச்சயம் வாசித்தே ஆகவேண்டிய கட்டுரை). தயாரிப்பாளரே இல்லாமல் பலரும் சேர்ந்து முதலீடு செய்து படம் தயாரிப்பது என்கிற முறையை குறித்து அக்கட்டுரை ஆழமாக அலசுகிறது. சினிமாத்தொழில் இப்படியெல்லாம் மாறிக்கொண்டிருக்கும் சூழலில் கமல்ஹாசன் கலையை அழிக்கிறார், இண்டஸ்ட்ரியை பாழாக்குகிறார் என்றெல்லாம் பேசுவது பிற்போக்குத்தனம்.
முதல் போடுபவர்கள் லாபத்தை எடுத்தாக வேண்டும். பணம் எடுக்க என்னென்ன யுக்திகள் இருக்கிறதோ, அத்தனையையும் பிரயோகித்துப் பார்த்தாக வேண்டும். சூதாட்டம் மாதிரியில்லாமல் மற்ற தொழில்களைப் போலவே பணம் போடுபவர்களுக்கு, குறைந்தபட்ச உத்தரவாதத்தை சினிமா வழங்கியாக வேண்டிய காலக்கட்டத்துக்கு வந்துக் கொண்டிருக்கிறது.
இன்று சினிமா என்பது திரையிடுதலில் மட்டும் காசு எடுக்கும் தொழில் அல்ல. ‘பாக்ஸ் ஆபிஸ்’ என்பதை டி.சி.ஆர் எனப்படும் டிக்கெட் கலெக்‌ஷன் ரெக்கார்டை மட்டுமே வைத்து கணக்கிடுகிறோம். வாகனங்களை பார்க்கிங் செய்ய அனுமதிக்கும் கட்டணம், எஃப் & பி எனப்படும் உணவு மற்றும் பானங்களை விற்பதன் மூலம் வரும் வருமானம் ஆகியவற்றையும் சேர்த்தே ஒரு படத்தின் வசூலாக கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தியா முழுக்க மல்ட்டிஃப்ளக்ஸ் கலாச்சாரம் பெருகி வருவதற்கு வெறுமனே திரையில் காட்டப்படும் சினிமா மட்டுமே காரணமல்ல. சினிமாவோடு மறைமுகமாக வருமானம் கொழிக்கும் மற்ற விஷயங்களும்தான் காரணம். இதெல்லாம் சாத்தியம் ஆனதால்தான் இன்று தென்னிந்திய திரைப்படங்கள் கூட நூறு கோடியை தாண்டி வசூலிக்க முடிகிறது.
கமல் விதை போட்டிருக்கிறார். விஸ்வரூபம் எடுத்து விருட்சமாக வளர சினிமாக்காரர்கள் அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் நாம் கனிகளை எதிர்ப்பார்க்க முடியும்.

கருத்துகள் இல்லை: