சனி, 22 அக்டோபர், 2011

சோனியாகாந்தியுடன் கருணாநிதி சந்திப்பு: இன்று மாலை கனிமொழியை பார்க்கிறார்!

புதுடெல்லி:தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6.10 மணிக்கு ஏர்-இந்தியா விமானம் மூலம் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். அவருடன் அவரது துணைவியார் ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி. யின் மகன் ஆதித்யா, மத்திய மந்திரி பழனிமாணிக்கம் ஆகியோர் சென்றனர்.

டெல்லி விமான நிலையத்தில் கருணாநிதியை டி.ஆர்.பாலு மற்றும் எம்.பி.க்கள் வரவேற்றனர். பிறகு கருணாநிதியும், அவர் குடும்பத்தினரும் லீலா ஓட்டலுக்கு சென்று தங்கினார்கள். இன்று (சனிக்கிழமை) காலை மத்திய மந்திரிகள் ப.சிதம்பரம், சல்மான் குர்ஷித் ஆகியோர் லீலா ஓட்டலுக்கு வந்து கருணாநிதியை சந்தித்தனர். அவர்கள் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து பேசியதாகத் தெரிகிறது.11 மணியளவில் கருணாநிதி காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். ஜன்பத் சாலையில் உள்ள சோனியா வீட்டுக்கு 11.15 மணியளவில் சென்றடைந்தார். சோனியாகாந்தியுடன் கருணாநிதி நீண்ட நேரம் பேசினார். சோனியாவிடம் கருணாநிதி உடல்நலம் விசாரித்தார். அமெரிக்க மருத்துவ மனையில் சோனியாகாந்திக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை நடந்தது. அது தொடர்பான விவரங்களை கருணாநிதி கேட்டறிந்தார்.

பிறகு கருணாநிதி லீலா ஓட்டலுக்கு திரும்பினார். இன்று மாலை கருணாநிதி டெல்லி திகார் ஜெயிலுக்கு சென்று கனிமொழியை சந்தித்து பேசுகிறார். அவருடன் ராஜாத்தி அம்மாளும் செல்கிறார். கனிமொழி மீதான கோர்ட்டு நடவடிக்கைகளை பொறுத்து கருணாநிதி சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை: