சனி, 22 அக்டோபர், 2011

புலிகளின் புலனாய்வுப் பிரிவில் முக்கியமானவனாக இருந்த ‘அம்புறோஸ்’

ltte torture-3புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (19)
19. R 140
காந்தியும் அவனுடைய பரிவாரங்களும்; தாங்கள் கொண்டுவந்த ‘கைதிகளை’ அந்த இடத்தில் இறக்கி அடைத்துவிட்டு, என்னையும் தோழர் விவேகானந்தனை (அன்ரன்) சந்திக்க வைத்த பின், மீண்டும் பழைய இடத்துக்குத் திரும்பி வந்தார்கள். அப்பொழுது நேரம் பின்னிரவைத் தாண்டியிருந்தது. திரும்பி வரும்போது மீண்டும் என் கண்களைக் கறுப்புத் துணியால் கட்டிவிட்டு, வாகனத்தின் பின்பக்கத்தில் ஏற்றிக் கொண்டார்கள். காந்தியின் அடியாட்கள் என்னைச் சுற்றிவளைத்து அமர்ந்து கொண்டனர்.

நாம் சென்ற இடம் எதுவென்று அந்த நேரத்தில் அறியமுடியாவிடினும், எனது பின்னைய சிறை வாழ்க்கையின் போது அது எந்த இடம் என்பதை, சக கைதிகள் மூலம் விபரமாக அறிந்து கொண்டேன். அந்த இடம் கொடிகாமத்துக்கு அண்மையில் உள்ள வரணிப் பகுதியின் எருவன் என்ற இடமாகும். அங்குள்ள தென்னந்தோட்டமொன்றில், புலிகள் புதிதாக அந்தச் சிறைச்சாலையை நிர்மாணித்திருந்தனர்.
அந்த இடத்தை புலிகள் ‘மேலுலகம்’ என அழைப்பது வழமை. அதேநேரத்தில் கைதிகள் அந்த இடத்தை ‘மஸ் கடை’ ( இந்த சிங்களச் சொல்லுக்கு ‘இறைச்சிக் கடை’ என அர்த்தம்) எனத்தான் குறிப்பிடுவர். அந்தக் குறியீட்டுச் சொல் அந்த இடத்துக்கு மிகவும் பொருத்தமானது என்பதைப் பின்னர் அறிந்துகொண்டேன். அவ்வளவு தூரம் அந்த இடம் புலிகளின் சித்திரவதை முறைகளுக்கும் கொடுமைகளுக்கும் பெயர் பெற்றிருந்தது.மிகவும் ‘பயங்கரமானவர்கள்’ என புலிகளால் கருதப்படுவோரே அந்த இடத்துக்கு அனுப்பப்படுவதுண்டு. (புலிகளின் கண்களுக்குள் விரலைவிட்டு ஆட்டிய ‘புளொட் சிறீ’ அந்த இடத்திலிருந்ததான் மிகக் கெட்டிக்காரத்தனமாகத் தப்பியோடியவர் என்பதைப் பின்னர் அறிந்தேன். அதுபற்றி சந்தர்ப்பம் வரும்போது எழுதுவேன்) அங்கு ஒருவர் அனுப்பப்பட்டால், அவர் பெரும்பாலும் உயிருடன் திரும்பி வருவதில்லை என்பது ஒரு நியதியாக இருந்து வந்தது. (ஒரு சிலர் விதிவிலக்காக திரும்பி வந்துள்ளனர்) அதனால்தான் புலிகளின் புலனாய்வுப் பிரிவில் மிக முக்கியமானவனாக இருந்த ‘அம்புறோஸ்’ என்பவன், நான் கைதுசெய்யப்பட்ட ஆரம்ப நாட்களில் என்னைச் சந்தித்த போது, “நீங்கள் இப்பொழுது வைக்கப்பட்டிருப்பது ஒரு விடுதி போன்றது. எங்கள் விசாரணைக்கு நீங்கள் ஒத்துழைக்கவில்லையென்றால், இதற்கு மேலே உள்ள மேல் வீட்டுக்குத்தான் போக வேண்டி வரும். அங்கை போனால் அவ்வளவுதான்” என என்னை எச்சரித்தான்.

நான் இப்பொழுது வைக்கப்பட்டிருக்கும் இடமே நரகலோகமாக இருக்கையில், அதற்கும் மேலாக இருக்குமிடம் நிச்சயமாக அவர்கள் சொல்வது போல “மேலுலகமாக’த்தான் இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன். அந்த இடத்துக்கு புலிகள் வைத்துள்ள அவர்களது ‘உத்தியோகபூர்வமான’ பெயர் ‘ராங் 1’ (TANK 1 ) என்பதாகும். பொதுவாக புலிகளின் சித்திரவதை முகாம்கள் எல்லாமே இந்த ‘ராங்’ என்ற பெயர் கொண்டே அமைந்திருக்கும் என்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன். அந்த வகையில் இப்பொழுது என்னைக் கொண்டுவந்து சேர்த்திருக்கும் இடம் ஆனைக்கோட்டையிலுள்ள ‘ராங் 2 என்பதையும் அறிந்தேன். ஆனால் இவையெல்லாவற்றையும் நான் அங்கு சிறைவாசத்தை ஆரம்பித்த பின்னரே அறிந்துகொள்ள முடிந்தது.

நாங்கள் திரும்பவும் ராங் - 2 முகாமுக்கு வந்தபோது நேரம் நள்ளிரவைத் தாண்டி 2 மணி ஆகிவிட்டிருந்தது. அவர்கள் என்னைக் கூட்டிச்சென்று முதற்தடவையாக அந்தச் சிறைச்சாலைக்குள் அடைத்தனர். உள்ளேயிருந்த யாரையோ அழைத்து எனக்கு படுப்பதற்கு ஒரு இடம் கொடுக்கும்படி உத்தரவிட்டனர். அந்த ஆரவாரத்தில் அங்கிருந்த அநேகமானோர் விழித்துக் கொண்டுவிட்டனர். அந்த மங்கலான வெளிச்சத்தில் வந்திருப்பவர் யார் என அறிவதில் அவர்கள் ஆர்வமாக இருந்ததை அவதானிக்க முடிந்தது. ஆனால் யாருமே என்னுடன் கதைக்க முற்படவில்லை. தமக்குள் ஏதோ இரகசியமாகக் கதைத்துக் கொள்வது என் காதுகளுக்குக் கேட்டது.

எனக்கு சிறை வாசலுக்கு அருகாமையில் இரண்டாவது ஆளாகப் படுப்பதற்கு இடம் கிடைத்தது. ‘கிழங்கு அடுக்கினாற் போல’ என்று சொல்வார்களே, அதுபோல மனிதர்களை அங்கு நீளத்துக்கு அடுக்கி வைத்திருந்தனர். துட்டகெமுனு கூட தமிழர்களின் நெருக்குதலாலும், கடலின் நெருக்குதலாலும் கூனிக்குறுகிப் படுத்தான் என வரலாற்று ஏடுகளில் எழுதி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நவீன ‘எல்லாளன்’களின் இடத்தில், அவர்களது கைதிகளுக்கு அப்படித்தன்னும் கூனிக்குறுகிப் படுப்பதற்குக்கூட, ஒரு சிறு இடைவெளி தன்னும் விட்டு வைக்கப்படவில்லை.

அன்று இரவு அவர்கள் எனது உணவு பற்றி எவ்வித அக்கறையும் காட்டவில்லை. எனக்கும் சாப்பிடும் மனநிலை இருக்கவில்லை. ஆனால் வரணியில் தொடங்கிய தண்ணீர் தாகம் இருந்துகொண்டே இருந்தது. அருகில் படுத்திருந்தவரிடம் கேட்டு சிறிது தண்ணீர் வாங்கிக் குடித்து விட்டு, வெற்று சீமெந்துத் தரையில் படுத்தேன். மார்கழி மாதமாகையாலும், வெறும் சீமெந்துத் தரையில் படுத்துப் பழக்கமில்லையாகையாலும், மிகவும் குளிராக இருந்தது. அந்தக் குளிரைப் போக்க நான் கொண்டு வந்த கம்பளி சுவெற்றா கொஞ்சம் உதவியாக இருந்தது.

அன்றைய அலைச்சல் காரணமாக அசதியில் சிறிது நேரம் தூங்கிவிட்டேன். காலையில் விழித்த போது, அங்கிருந்த அனைவரும் அங்குள்ள அடைப்பில்லாத மல சல கூடத்தில் காலைக் கடன்களை முடிக்கவும், முகம் கழுவவும் முண்டியடித்துக் கொண்டு நிற்பதை அவதானித்தேன். பலர் என்னருகில் வந்து என்னை உற்றுப் பார்த்துவிட்டுச் சென்றனர்.

எனக்கருகில் இருந்த ஒரு வயதான மனிதர் என்னைப் பார்த்து மெதுவாகச் சிரித்தார். பின்னர் “நீங்கள் முகம் கழுவல்லையோ?” என வினவினார். என்னிடம் கதைத்த முதல் சக கைதி அவர்தான். நான் “கழுவுவம்” என்றேன்.

பின்னர் அவர் சிறிதுநேரம் யோசித்துவிட்டு, “புதிசாக வந்திருக்கிறியள். காலையிலை விசாரணைக்குக் கூப்பிடுவினம். முகம் கழுவி ரெடியா இருந்தாத்தான் நல்லது” என்றார்.

நான் எழுந்து சென்று முகம் கழுவ முயற்சித்தேன். பல் விளக்குவதற்கு எந்தப் பொருட்களும் அங்கு இருக்கவில்லை. எப்பொழுதாவது ஒருமுறை பற்பொடி வழங்கப்படுவது உண்டு எனப் பின்னர் தெரிந்துகொண்டேன். இரண்டு தேநீர்க் கோப்பை அளவு தண்ணீரில் முகம் ‘கழுவினேன்’. உடுத்திருந்த சாரத்தால் முகத்தைத் துடைத்துக்கொண்டு, எனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போய் இருந்தேன்.

காலைத் தேநீர் என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை. அநேகமானோர் முகம் கழுவிய பின்னர் வெறும் தண்ணீரைப் பருகியதைக் கண்டேன். அது அவர்களுக்குப் பழகிப்போய்விட்டது. தண்ணீர் இறைக்கும் இயந்திரம் இறைத்துத்தான் அங்கு தண்ணீர் வரவேண்டும். அதனால் சில வேளைகளில் குடிப்பதற்குத் தண்ணீர் இல்லாமலும் காத்திருக்க நேரிடும் என்பதைப் பின்னர் அறிந்து கொண்டேன். காலையில் தேநீர் அருந்தாமல் இருப்பது எனக்குக் கஸ்டமாக இருந்தது. சமாளித்துக் கொண்டேன்.

காலை 9 அணி அளவில் புலி உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வந்து, உள்ளேயிருந்த கைதிகளில் சிலரைப் பெயர் சொல்லியும், சிலரை ஏதோவொரு இலக்கத்தைச் சொல்லியும் வெளியே அழைத்துச் சென்றனர். அவர்கள் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுகிறாhகள் என்பதை அறிந்துகொண்டேன். அங்கே இரண்டுவிதமான கைதிகள் இருந்தனர். ஒரு பகுதியினா விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். இன்னொரு பகுதியினர் விசாரணை முடிந்து தண்டனையை எதிர்பார்த்து காத்திருந்தனர். சிலர் விசாரணை முடிந்த பின்னரும், இரண்டு வருடங்களுக்கு மேலாகவும் கூடக் காத்திருந்தனர்.

அரசாங்கச் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் போன்று, இங்குள்ளவர்கள் பகிரங்கமாக நீதிமன்றங்களில் வைத்து விசாரிக்கப்படுவதில்லை. குற்றச்சாட்டுகளும் வெளிப்படையாக சந்தேக நபர்களுக்குத் தெரிவிக்கப்படுவதில்லை. விசாரிக்கும் ‘புலிப் பொடியன்’ என்ன குற்றச்சாட்டு எனச் சொல்லாமல், சுற்றி வளைத்துக் கேள்விக்கு மேல் கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பான். அவன் என்னத்தை எதிர்பார்க்கிறான் என்ற தெரியாததால், கைதி வேறு ஏதேதோ எல்லாம் சொல்லுவார். “என்னடா எங்களைச் சுத்தப் பாக்கிறியா?” எனக்கேட்டு பல்வேறு வகையான சித்திரவதைகள் அவர் மீது நிகழ்த்தப்பட்டு, ஏதாவதொரு குற்றம் ஒப்புதலாகப் பெறப்படும்.

அதன் பின்னரும் அவனுக்கு என்ன தண்டனை என்று தெரிவிக்கப்பட மாட்டாது. திடீரென ஒரு இரவில் அழைத்துச் செல்லப்பட்டு தண்டனை வழங்கப்படும் போதுதான், என்ன தண்டனை என்பது தெரியவரும். இந்த ‘விடுதலைப் பயங்கரவாதம்’ என்பது, இலங்கைத் தமிழர்களால் பெரிதாகப் பேசப்பட்டு வரும் ‘அரச பயங்கரவாதத்தில்’ இல்லாத, புலிகளுக்கு மட்டுமே உரிய ‘சிறப்பம்சம்’ ஆகும்.

நான் அங்கு காத்திருக்கையில், எனது முறையும் வந்தது. துப்பாக்கி சகிதம் வந்த ஒருவன். “பதிசாக வந்த மணியம் யார்?” என வினவினான். நான் உடனும் வாசலருகில் எழுந்து சென்று, “நான்தான்” என்றேன். அவன் “வெளியே வா” என்றுவிட்டு, இன்னொருவனை அழைத்து கதவைத் திறந்து என்னை வெளியே கூட்டிக்கொண்டு போனான்.

என்னை அழைத்தவனின் (இயக்க) பெயர் ஆதவன் என்றும், அவன்தான் இந்தச் சிறைச்சாலை வாசலின் நிரந்தரக் காவலாளி என்றும் அறிந்து கொண்டேன். அத்துடன் அந்த ‘வாயிற்காப்போன்’ ஆவரங்காலைச் சேர்ந்தவன் எனவும் பின்னர் தெரிந்து கொண்டேன்.

வெளியே என்னை அழைத்துச் சென்ற அவர்கள், நான் வீட்டிலிருந்து உடுத்து வந்த சாரம், சேட், பெனியன், உள்ளங்கி எல்லாவற்றையும் கழற்றிப் பெற்றுக்கொண்டு, கைதிகளுக்கு என உடுக்கக் கொடுக்கும் சிவப்பு புள்ளிகளிட்ட சாரம் ஒன்றைக் கட்டிக் கொள்ளும்படி தந்தனர். பலரால் உடுக்கப்பட்டு, நீணட நாட்களாக துவைக்கப்படாமல் இருந்த அந்தச் சாரத்திலிருந்து வந்த மணத்தால் எனக்கு வயற்றைக் குமட்டிக்கொண்டு வந்தது. ஆனால் வேறு வழியில்லை. வாங்கி உடுத்திக் கொண்டேன்.

அதன்பின்னர் அவர்கள் வெளியே அழைத்துச் சென்றனர். அங்கு ஒருவன் படம் பிடிக்கும் புகைப்படக் கருவியுடன் நின்று கொண்டிருந்தான். அவன் என்னைக் கண்டதும், “எப்படி ஐயா மாமியார் வீட்டு வாழ்க்கை இருக்குது?” என நையாண்டி செய்தான். எனக்கு உள்ளே கோபம் பொத்துக்கொண்டு வந்தாலும், அவனை ‘ஏமாற்றக்கூடாது’ என்பதற்காக அசட்டுத்தனமாகச் சிரித்து வைத்தேன்.

இந்த ‘விடுதலைப் போராளிகள்’ மக்களை நடாத்தும் முறையைப் பார்க்கையில், தமிழ் மக்கள் தெரியாத்தனமாகத் தங்கள் தலையில் தாங்களே மண் அள்ளிப் போட்டதை எண்ணி, அவர்கள் மீது அனுதாபம்தான் வந்தது. நான் எமது கட்சி 1960களில் தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்களை நடாத்திய காலத்திலும், பின்னர் இனப்பிரச்சினை தீவிரமடைந்து, நாம் ‘தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணி’யை அமைத்து வேலை செய்த காலத்திலும், சில தடவைகள் இலங்கைப் பொலிசாரால் - அதுவும் பெரும்பாலும் சிங்களப் பொலிசாரால் - கைதுசெய்யப்பட்டிருந்த போதிலும், அவர்கள் இவர்கள் போல எந்த நேரமும் கேலியும் கிண்டலுமாக எம்முடன் அநாகரிகமாக நடந்து கொள்ளவில்லை என்பதை நினைக்க, இவர்களது ஒழுக்கங்களின் தன்மையை இட்டு கவலையும் கோபமும்தான் ஏற்பட்டது.

பின்னர் அவர்கள் ஒரு நம்பர் எழுதிய போட் பலகையைக் கொண்டுவந்து எனது கழுத்தில் தொங்கவிட்டு விட்டு, என்னைப் பல கோணங்களில் புகைப்படம் எடுக்க ஆரம்பித்தனர். சாரத்தை கணுக்கால் வரையும் அவிழ்த்துவிட்டு, பின்னர் முழங்கால் வரையும் மடித்துக் கட்டிவிட்டு, நேராக நின்று, பக்கவாட்டில் நின்று, பின் பக்கமாகத் திரும்பி நின்று எனப் பல கோணங்களில் படம் எடுத்தனர்.

படம் எடுத்து முடிந்ததும், அந்தப் படப்பிடிப்பாளன் என்னை நோக்கி, “ஐயா இதுக்கு முந்தி இப்பிடி ஒருநாளும் படம் நடிச்சிருக்கமாட்டியள் தானே?” என மீண்டும் ஒரு பெரிய ‘நகைச்சுவையைச் சொல்லி என்னைப் பார்த்துச் சிரித்தான்.

பின்னர் அவர்கள் என் கழுத்தில் தொங்கவிட்ட அந்த இலக்கத் தகட்டை (நாய்களுக்கு கழுத்தில் கட்டுவது போன்ற) கழற்றினார்கள். அதைக் கழற்றியவன் என்னைப் பார்த்து, “இது என்ன நம்பர் எண்டு தெரியுமா?” என வினவினான். நான் “தெரியாது” என்றேன். “இதுதான் உங்கள் கைதி இலக்கம். இதை எப்பொழுதும் ஞாபகம் வைச்சுக் கொள்ள வேணும். இந்த நம்பரைச சொல்லித்தான் இனிமேல் கூப்பிடுவம்” என்றான்.

அதில் இருந்த இலக்கத்தைப் பார்த்தேன். R 140 என அதில் எழுதப்பட்டிருந்தது. ஓஸ. இனி என்னுடைய இன்னொரு பெயர் கைதி R 140. வருங்காலத்தில் தற்செயலாக நான் இவர்களிடமிருந்து விடுதலை பெற்று வெளியே வந்து வாழ்ந்து இயற்கையாக மரணமடைய நேரிட்டால், எனது மரண அறிவித்தலைப் போடும்போது, எனக்கு தாய் தந்தையர் இட்ட பெயரான சுப்பிரமணியம் என்பதுடன், எனது ‘மேய்ப்பர்களான’ புலிகள் இட்ட பெயரான R 140 என்பதையும் போட வேண்டும் என்ற, ஒரு விசித்திரமான எண்ணம் அந்த நேரத்தில் எனக்குள் தோன்றி மறைந்தது.

தொடரும்

கருத்துகள் இல்லை: