வெள்ளி, 21 அக்டோபர், 2011

5 Star ஹோட்டல்-சீன நிறுவனத்துடனான ஒப்பந்தம் இடை நிறுத்தப்பட்டுள்ளது : அமைச்சர் பஷில் ராஜபக்ஷ!

காலி முகத்திடலுக்கு அருகாமையிலுள்ள காணியில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அமைக்கும் வகையில் சீனாவின் கெற்றிக் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை இடை நிறுத்தப்பட்டிருப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ நேற்று சபையில் தெரிவித்தார்.
சீனாவின் கெற்றிக் நிறுவனமானது எமது நிபந்தனைகளின் பிரகாரம் செயற்படுவதற்கு இணங்கும் பட்சத்திலேயே மேற்படி உடன்படிக்கை நீடிக்கக்கூடியதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செயல் நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் கீழான கட்டளைகளை அங்கீகரித்துக் கொள்வதான விவாதத்தில் ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. கபீர் ஹாசிம் உரையாற்றிக் கொண்டிருந்தார்.இந்த சந்தர்ப்பத்தில் கபீர் ஹாசிம் எம்.பி. க்கும் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது. இதன்போதே அமைச்சர் பஷில் மேற்கண்ட தகவலை வெளியிட்டார்.

முன்னதாகப் பேசிய கபீர் ஹாசிம் எம்.பி. பேசுகையில், அரசாங்கமானது கெற்றிக் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு பாராளுமன்றத்துக்கும் நாட்டு மக்களுக்கும் தெரியாத வகையில் செயற்பட்டு 54 மில்லியன் அமெரிக்க டொலர்களை முற்பணமாகவும் பெற்றுக் கொண்டது.
நிதி மற்றும் பொருளாதார அமைச்சுகளின் செயலாளரான பி.பி. ஜயசுந்தரவும் சீனாவின் அதிகாரிகளுமே இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். எனவே இவ்விடயத்தில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என்று கபீர் ஹாசீம் எம்.பி. கூறினார்.
இதற்கு விளக்கமளித்த அமைச்சர் பஷில் கூறுகையில், இவ்விடயம் தொடர்பில் நாம் முதலில் கொள்கையளவில் செயற்பட்டு அமைச்சரவைப் பத்திரம் ஒன்றினை சமர்ப்பித்து அமைச்சரவையின் அனுமதியைப் பெற வேண்டும். அதன் பின்னரே ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படும். இதன்பின்னர் இதனை நாட்டு மக்களுக்கு அறிவிக்கும் வகையில் அது வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளிப்படுத்தப்படும்.
இதன் பின்னர் அது மீண்டும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அதன் பின்னரே பாராளுமன்றத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
ஆயினும் சீனாவின் கெற்றிக் நிறுவனத்துடனான இந்தக் கொடுக்கல் வாங்கலானது புரிந்துணர்வு ஒப்பந்தத்துடன் இடை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே அடுத்தகட்ட நடைமுறைகளுக்கு அவசியம் ஏற்பட்டிருக்கவில்லை என்றார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த கபீர் ஹாசிம் எம்.பி. கூறுகையில்,
இந்த விடயமானது சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு வந்ததன் பின்னர் அந்த அமைச்சின் ஊடாக முதலில் அமைச்சரவைப் பத்திரமொன்று சமர்ப்பித்து அனுமதி பெற்று அதனை வர்த்தமானி அறிவித்தலுக்கு உட்படுத்தியதன் பின்னர் அது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டதையடுத்தே அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இருந்தபோதிலும் பாராளுமன்றத்துக்கு அறிவிக்கப்படாத வகையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 54 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முற்பணமாகவும் பெறப்பட்டுள்ளது. இது எவ்வாறு முடியும்?
மேலும் இவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்ட முற்பணமானது தற்போது வைப்பில் உள்ள நிலையில் குறித்த 54 மில்லியன் அமெரிக்க டொலர்களும் மீண்டும் சீன நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படுமா? இல்லாவிட்டால் குறித்த காணித் துண்டு விற்கப்படுமா என்றும் கேள்விகளைத் தொடுத்தார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ, ஒப்பந்தத்துடன் தொடர்புபட்ட நிறுவனம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும். அவ்வாறு இணங்கி வந்தால் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டதான ஒப்பந்தம் நீடிக்கப்படும். இல்லையேல் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாகிவிடும் என்று பதிலளித்தார்.
இதேவேளை சங்கிரிலா மற்றும் கெற்றிக் ஹோட்டல் திட்டங்கள் தொடர்பிலான சகல ஆவணங்களும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கபீர் ஹாசிம் எம்.பி. கூறினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, சங்கிரிலா ஹோட்டல் திட்டம் தொடர்பான விபரங்கள் ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விட்டன எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: