வெள்ளி, 21 அக்டோபர், 2011

உள்ளாட்சி தேர்தல் : பெரும்பாலான இடங்களில் அதிமுக முன்னிலை!.

:உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இதனையடுத்து தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கான வாக்கு எண்ணிக்கையில் ஆளும் அதிமுக பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கான தேர்தல் அக்டோபர் 17, 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடந்தது. மொத்தம் 1,32,401 உள்ளாட்சி பதவியிடங்களுக்கு நேர்முக தேர்தல் நடக்கிறது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 12,759 உள்ளாட்சி பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது.முதல்கட்ட தேர்தலில் 77.02 சதவீதம் வாக்குகளும், நேற்று நடைபெற்ற 2ம் கட்ட வாக்குப்பதிவில் 80.47 சதவீதம் வாக்குகளும் பதிவாகி உள்ளது. இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 12,759 உள்ளாட்சி பதவியிடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது.

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் 86,104 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. மூன்று கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை உள்ளாட்சி தேர்தலில் பதிவு செய்துள்ளனர். தேர்தலில் 2.39 லட்சம் வாக்குப்பெட்டிகளும், 80,500 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன. இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் ‘சீல்’ வைக்கப்பட்டு பாதுகாப்பாக வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அறைகளில் நாளை காலை சரியாக 8 மணிக்கு பதிவான வாக்குகள் அனைத்தும் எண்ணும் பணி துவங்கும்.

அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தையும் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் செய்துள்ளனர். சென்னையில் மேயர் மற்றும் 200 கவுன்சிலர்களுக்கு பதிவான வாக்குகள் அனைத்தும் லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 18 மையங்களில் வைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 29மையங்களிலும், திருவள்ளூரில் 18 மையங்களிலும் வாக்குகள் எண்ணப்படுகிறது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும் வாக்கு எண்ண ஏற்பாடு செய்துள்ள அறைகளில் 14 மேஜைகள் போடப்பட்டு இருக்கும். அதன்படி ஒவ்வொரு சுற்றிலும் 14 வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டு எண்ணப்படும்.

முதல் சுற்று வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பிறகு அடுத்த சுற்று துவங்கும். இப்படி 20 சுற்றுகளுக்கு மேல் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் பதிவான வாக்குப்பெட்டியில் நாளை 8.30 மணிக்கு முதல் சுற்று முடிவு தெரிந்துவிடும். வாக்கு சீட்டு மூலம் ஓட்டுப்பதிவு நடந்த இடங்களில் காலை 10 மணிக்கு மேல்தான் முதல் சுற்று முடிவு தெரியவர வாய்ப்புள்ளது. அதேபோன்று மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகளின் இறுதி முடிவு காலை 11 மணிக்கு மேல் தெரிந்து விடும். ஆனால் வாக்கு சீட்டு மூலம் ஓட்டுப்பதிவு நடந்த இடங்களில் இறுதி முடிவு நாளை மாலைக்கு பிறகுதான் தெரியவரும்.

ஓட்டு எண்ணும் மையங்கள் அனைத்தையும் வீடியோ எடுக்கும்படி மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள், பத்திரிகையாளர்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழகம் முழுவதும் உள்ள 200க்கும் மேற்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி தேர்தல்

சென்னை மாநகராட்சி தேர்தலில் பதிவான வாக்குகள், 18 மையங்களில் இன்று எண்ணப்படுகிறது. அனைத்து நடவடிக்கைகளும் வீடியோவிலும், வெப் கேமராவிலும் பதிவு செய்யப்படுகிறது. சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு 32 பேரும், 200 வார்டுகளுக்கான உறுப்பினர் பதவிக்கு 2,478 பேரும் போட்டியிடுகின்றனர். இதற்கான தேர்தல் கடந்த 17ம் தேதி நடந்தது. மொத்தம் 44 லட்சத்து 84 ஆயிரத்து 60 வாக்காளர்களில், 23 லட்சத்து 15 ஆயிரத்து 186 பேர் வாக்களித்துள்ளனர். மொத்தம் 51.63 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்த வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு சென்னையில், 18 மையங்களில் தொடங்குகிறது. இந்த மையங்களில் 35 அறைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். ஒவ்வொரு அறையிலும், 6 முதல் 10 மேஜைகள் போடப்பட்டுள்ளது.

இதில், மேயர் வேட்பாளருக்கு தனியாகவும், வார்டு உறுப்பினர்களுக்கு தனியாகவும் மேஜைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு சுற்றுக்கு 6 முதல் 10 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்படும். உதாரணமாக, ஒரு வார்டில் 23 வாக்குச் சாவடிகள் இருந்தால் முதல் சுற்றில் 7 வாக்குச் சாவடிகளுக்கான வாக்குகள் எண்ணப்படும். அதன்படி, 3 சுற்றில் 21 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்படும். மீதமுள்ள 2 வாக்குச் சாவடிகளுக்கான வாக்குகளும் எண்ணப்படும். பின்னர், அதிக வாக்குகள் பெற்ற வார்டு உறுப்பினருக்கான அறிவிப்பு வெளியிடப்படும். அதைத்தொடர்ந்து, அடுத்த வார்டுக்கான வாக்குகள் எண்ணப்படும். இப்படி ஒவ்வொரு வார்டுகளாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் அறிவிக்கப்படும்.

மேயர் வேட்பாளருக்கான வாக்குகள் 18 மையங்களிலும் எண்ணப்படுகின்றன. இந்த மையங்களில் இருந்து லயோலா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு மையத்துக்கு, வாக்கு எண்ணிக்கையின் விவரங்கள் உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மூலம் அவ்வப்போது அனுப்பப்படும். ஒருங்கிணைப்பு மையத்தில் இருக்கும் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி, வாக்கு எண்ணிக்கை விவரங்களை ஒருங்கிணைத்து, மேயர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து அவ்வப்போது அறிவிப்பு வெளியிடுவார். இந்த விவரங்கள் அனைத்தையும் புதன்கிழமை மாலை சென்னை ரிப்பன் மாளிகையில் நடந்த மேயர் வேட்பாளர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில், சென்னை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான தா.கார்த்திகேயன் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: