புதன், 19 அக்டோபர், 2011

குடுகாரர்கள், பாதாள குழுவினருக்கு அரசியல் செய்ய இடமளிக்கக்கூடாது - சம்பிக்க அரசுக்கு அழுத்தம்

குடுகாரர்கள், பாதாள குழுவினருக்கு அரசியல் செய்ய இடமளிக்கக்கூடாது - சம்பிக்க அரசுக்கு அழுத்தம்
குடுகாரர்கள், பாதாள உலகக் குழுவினர் உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு அரசியல் செய்ய இடமளிக்கக்கூடாதென ஜாதிக ஹெல உறுமயவின் பிரதான செயலாளர், அரசாங்க அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறு அவர்களை அரசியலில் ஈடுபடுத்தினால் ஏற்படும் பாரதூரமான விளைவுக்கு அண்மையில் முல்லேரியாவில் இடம்பெற்ற சம்பவம் நல்லதொரு உதாரணம் என கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
1977ம் ஆண்டு தொடக்கம் குடுகாரர்கள், கொலையாளிகள், குற்றவாளிகள் நாட்டின் அரசியலுக்குள் பிரவேசித்துள்ளதாகவும் அதுவொன்றும் புதுமை அல்லவெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் அரசியலுக்கு வருவது பணம், அதிகாரம் மற்றும் ஊடகங்கள் ஊடாக பிரபல்யம் என்பவற்றை பெற்றுக்கொள்ளவே தவிர நாட்டுக்கு சேவை செய்ய அல்ல என அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று 95 சதவீதமான அரசியல்வாதிகள் கருப்புப் பணத்தை வீசி அரசியல் செய்கிறார்கள் என்பதை தான் பொறுப்புடன் கூறிக் கொள்வதாகவும் ஆனால் ஜாதிக ஹெல உறுமயவில் உள்ளவர்கள் அவ்வாறு அரசியலுக்கு வந்தவர்கள் அல்லர் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

குடுகாரர்கள், கொலைகாரர்கள், குற்றவாளிகள், பாதாள உலகக் குழுவினர் அரசியல் செய்வதை தடுக்கும் வகையில் சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு தாம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக பாட்டளி சம்பிக்க ரணவக்க கூறினார்.

தேர்தல் சட்டம், விருப்பு வாக்குச் சட்டம் என்பவற்றின் ஊடாக நாட்டில் அரசியல் வீழ்ச்சியை கண்டு வருவதாகவும் விருப்பு வாக்கு முறையை நீக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது குறித்து 2003ம் ஆண்டு தினேஷ் குணவர்த்தன தலைமையில் பாராளுமன்ற குழுவொன்று அமைக்கப்பட்டதாகவும் ஆனால் இன்னும் எதுவும் செயற்பாட்டில் இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

தேர்தல் சட்டம், விருப்பு வாக்கு முறை, தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு செலவிடும் பணம் என்பவற்றை கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் இவ்வாறான சட்டம் இந்தியாவில் தற்போதும் நடைமுறையில் உள்ளதாகவும் அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: