ஞாயிறு, 24 ஜனவரி, 2021

வடுக வந்தேறி என்று கூறும் இனவாதிகள் பாரதி தாசனை துணைக்கு அழைப்பது கயமை

Image may contain: 3 people, people standing and people on stage
தமிழ் மறவன் : · தோழர்களே! இனவாதம் பேசுகிற இனவாதிகள் "வந்தேறி" வடுகர் எனும் சொல்லாடல்களை பயன்படுத்துவதோடல்லாமல் "எங்குப் பிறப்பினும் தமிழன் தமிழனே இங்குப் பிறப்பினும் அயலான் அயலானே!" எனும் பாவேந்தரின் பாடல் வரிகளில் வரும் இந்த நான்கு வரிகளை மட்டுமே எடுத்தியம்புவர். இது பாவேந்தரையே இழிவுபடுத்துகிற, தங்களின் இனவாத இழிவான செயலுக்கு புரட்சிக்கவியை துணைக்கு அழைத்துக் கொள்கிற மோசமான செயலாகும். ஏனெனில் அதே பாடலில்..
"நாமெல்லாம் திராவிடர்கள் என்ற எண்ணம்
நம்முளத்தில் வேரூன்ற வேண்டும்! மேலும்
நாமெல்லாம் ஒரேவகுப்பார் என்ற எண்ணம்
நன்றாக நம்முணர்வில் ஏற வேண்டும்
தீமையுற நமைஎல்லாம் சமையம், சாதி
சிதறடிக்க இடங்கொடுத்தல் நமது குற்றம்.
ஆமைஉயிர் காக்குந்தன் முதுகின் ஓட்டை
அகற்றென்றால் அவ்வாமை கேட்க லாமா?" என இனவாதிகளை செருப்பாலடித்ததைப் போன்ற வரிகளை மிக வசதியாக மறைத்து விடுகின்றனர்.
மேலும்..
"இடியாப்பக்காரா" எனும் தலைப்பில் இனவாதம் பேசுவோருக்கு மரண அடி கொடுக்கிறார் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள்.
இவைகளை எல்லாம் மறைத்து விட்டு பாவேந்தர் திராவிடத்தை மறுதலித்த தமிழ் தேசியராக கட்டமைக்க முயலும் இனவாதிகளை அம்பலப்படுத்தி முகத்திரையை கிழித்தெறிவோம்.
இப்பாடலை பொறுமையுடன் படித்து பகிருங்கள் தோழர்களே!
இடியப்பக் காரா-ஓ-இடியப்பக் காரா!
விடியற் காலம் தட்டைத் தூக்கி
வீட்டார் கேட்கக் கூவி வந்தாய்
இடியப்பக் காரா!
செப்ப னிட்ட வீட்டுக் காரன்
தெலுங்கு பேசும் மீசைக்காரன்
அப்பமு வெல ஏமி என்றான்
அயலான் அவன் என என்றான்
எப்படி அவன் அயல் ஆவான்
இன ஒழுக்கம் குறைந்த துண்டோ?
செப்பும் மொழி தெலுங் கென்றால்
தெலுங்கு மொழியும் உன் உடைமை!
இடியப்பக் காரா!
அடிமரமே ஒன்றேடா
அதன் பெயர்தி ராவிடமே
தடங்கிளைகள் ஐந்தல்லவா
தமிழ், தெலுங்கு, கேரளமே
அடடேகன் னடம், துளுவம்,
ஐங்கிளைக்கும் அடிஒன்றே
கொடிது கொடிது தெலுங்கனைநீ குறைகூறும் மனப்பான்மை
இடியப்பக் காரா!
ஐந்து நிறத்தில் மணிக் கோவை
அவற்றூடே செல்லுவது
பொன்னிழையே அல்லாமல்
பூணூலா சொல்லிடுவாய்
சென்னைக் காரன் கோழி என்பான்
தெலுங்குகாரன் கோடி என்பான்
கன்னடத்தான் கோளி என்பான்
களிச்சேரலன் கோலி என்பான்
துளுவக் காரன் கோழ் என்பான்
சொன்ன இந்த ஐந்திலும்
ஒளிக்கும் உயிரைப் பார்த்த துண்டோ
உள்ளப் பொதுமை கண்ட துண்டோ
தெளிவி லார்க்கும் தெரிவியடா
திராவிடர்!தி ராவிடமே!!
ஒளிக்காதே உன் மனத்தை
உயர் தெலுங்கன் நம்மவனே
இடியப்பக் காரா!
தெலுங்கனா உன் பகைவன்? ஒரு
கேரளனா உன் பகைவன்?
துலங்கும் ஒரு கன்னடனா?
துளுவனுமா உன் பகைவன்?
உலர்சருகே இவர்களெலாம்
உன்பகைவர் என்று சொன்னால்
நலம்புரியும் உறவினர்கள்
நாட்டிலெவர் தாம் உனக்கு?
இடியப்பக் காரா!
தெலுங்குகாரன் நாட்டாட்சி
செய்யும் நிலை வந்துவிட்டால்
தெலுங்கருக்கே நல மெல்லாம்
செய்திடுவான் என்கின்றாயா?
மலையாளி நாடாண்டால்
மலையாளத் தார்களுக்கே
நலம் புரிவான் என்கின்றாயா?
நல்ல கரடி உன் கரடி
இடியப்பக் காரா!
இரட்டி செய்த ஆட்சியிலே
இரட்டி யார்க்கே நாட்டை எல்லாம்
புரட்டி விட்டான் என்று நீயே
புளுகியதும் உண்டல்லவா?
விருப்பமுடன் வேளா ளன்
வேளாளர் தங்களையே
உருப்படச்செய் தான் என நீ
உளறுவதும் உண்டல்லவா?
வரிந்து கட்டி வன்னியனும்
வன்னியர்க்கே நன்மையெலாம்
புரிந்து விட்டான் என்று மனம்
புழுகியதும் மெய்தானே?
துருக்கருக்கே நலம் புரிவான்
சிரிக்கும்படி இப்படி நீ
செப்புவதும் உண்டல்லவா?
இடியப்பக்காரா!
நாவலந்தீ வொன் றதிலே
நவிலும் இரண் டுலகம் உண்டு
மூவேந்தர் கொடிபறக்க
முத்தமிழின் நலம் சிறக்கத்
தேவைஎலாம் கொண்ட திரா
விடஉலகம் ஒன்றாகும்!
ஆஒட்டி ஆத்தின்னும்
ஆரியநாடொன்றாகும் !
நடுவிலொரு விந்தியமாம்!
நல்லதிரா விடநாடு.
கடல் மூன்றும் புடைசூழும்
கவினுறு தென் பாங்கினிலே!
வடநாட்டில் திராவிடர்கள்
வாழுகின்றார் அங்கவர்கள்
வடவர்கள்தாம் என்பதான
மனநிலை கொண்டவராவார்
வடுவிலாத் திராவிடத்தில்
வடவர்களைச் சேர்ந்தசில
மடயர்களும் உண்டப்பா
வயிற்றெரிச்சல் கூறிடுவேன்
இடவிரும்பும் திரவிடத்தில்
இரந்துண்டு வாழுமந்தக்
கவிழ்ப்பதுதான் பெரு நோக்கம்
இடியப்பக் காரா!
இந்நிலையில் திரவிடன்நீ
என்ன நினைத் திடவேண்டும்?
நின்இனத்தார் பெற்ற பேறு
நீ பெற்ற பேறல்லவா?
கன்னடனோ, கேரளனோ,
கன்னானோ. மண்ணானோ
வன்னியனோ, மன்னவனோ,
எல்லாரும் திரவிடரே!
இடியப்பக் காரா!
திரவிடத்தின் தீமை எலாம்
திரவிடரின் தீமை என்க
திரவிடத்தின் நல மெல்லாம்
திரவிடரின் நல மென்க
மருளாதே அஞ்சாதே
வடவர்களை நீக்கிடுவாய்
திரவிடத்தில் திரவிடரின்
ஆட்சியை உண்டாக்கிடுவாய
இடியப்பக் காரா!"
அருமையாய் இனவாதிகளை கிழித்தெறிந்த பாவேந்தர் வாழ்கவே!
- மு.தமிழ் மறவன்

கருத்துகள் இல்லை: