வியாழன், 28 ஜனவரி, 2021

அயோத்தியில் நிகழ்ந்ததற்கும் நேற்று தில்லி செங்கோட்டையில் நிகழ்ந்ததற்க்கும் இடையிலான ஒற்றுமை

Image may contain: 1 person, on stage and outdoor, text that says 'TASHI TOBGYAL'
Abilash Chandran  :   ராஜ மௌலி, சங்கர், கேமரோனை மூக்கில் விரல் வைக்க செய்த பாஜக..    நேற்றைய நாளை என்னுடன் வாழ்வின் மிக மோசமான நாட்களில் ஒன்று என்பேன்.
சீக்கிய விவசாயிகளின் டிராக்டர் பேரணி இப்படி கண்முன்னால் சீரழிவதை, அதை சங்கிகள் கொண்டாடுவதை, அவர்களுடைய டி.வி சேனல்களில் நெறியாளர்கள் ஒரு குஷியுடன் “பாருங்கள் பாருங்கள், என்னென்ன செய்கிறார்கள், போராட்டம் கலவரமாவதைப் பாருங்கள்” எனக் கூவுவதைப் பார்க்க சகிக்கவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுத்தியது -
இதுவரை சீராக பொறுமையாக போராடியவர்கள் குதிரை மீது வேஷம் அணிந்து அமர்ந்து கையில் வாளுடன் வருவதை, அவர்களை போலிசார் அமைதியாக அனுமதிப்பதை, சிலர் டிராக்டர்களை போலிசார் மீது மோத வருவதைப் போல செலுத்துவதை, செங்கோட்டைக்கு எதிரில் உள்ள கொடிக்கம்பத்தில் ஒருவன் ஏறி சீக்கிய கொடியை ஏற்றி கொக்கரிப்பதை பார்க்கையில் இவற்றில், இந்த அப்பட்டமான அராஜக செயல்கலில் இதுவரை நாம் பார்த்த விவசாயிகளின் தோரணை, உடல்மொழி, கண்ணியம் இல்லை. இது வேறொரு கூட்டம். இவர்களை எப்படி தலைநகரின் மையம் வரை வந்தார்கள்?
ஏன் தலைநகரில் போலிசார் மிக மிக குறைவாக நிறுத்தப்பட்டிருந்தார்கள்? அவர்கள் ஏன் தில்லியை திறந்து வைத்து காத்திருக்கிறார்கள்? இக்கேள்விகளுக்கு நேற்று எந்த விடையும் கிடைக்கவில்லை.
சன் நியூசில் ஒரு விவாதம் நடக்கிறது. அதில் ஜெயரஞ்சன், ஒரு இடதுசாரி தலைவர் ஆகியோர் மனம் உடைந்து போய் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் பாஜக சார்பில் பேசும் நாராயணன் அவ்வளவு உற்சாகத்துடன், மகிழ்ச்சியுடன், நிறைவுடன் தெரிகிறார். அவரது மகிழ்ச்சியை என்னதான் முயன்றாலும் அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. தன்னிடம் உள்ள ஒரு ஆவணத்தைக் காட்டி “இதில் உள்ள 36 வாக்குறுதிகளில் பலவற்றை விவசாயிகள் மீறி இருக்கிறார்கள், அராஜகம் பண்ணி இருக்கிறார்கள்” என சொல்லும் போது அவரது கண்களில் மின்னிய திளைப்பு, அந்த ஒளியைக் கண்டு அதிர்ந்தேன். 
 
நியாயமாக குடியரசு தினம் அன்று போலிசாரை மீறி கலவரம் நடப்பது பாஜகவுக்கு நிகழ்ந்த அவமதிப்பாகவே அவரைப் போன்றவர்கள் கண்டு கொதித்துப் போயிருக்க வேண்டும். அதிர்ச்சி அடைந்திருக்க வேண்டும். ஆனால் அந்த உணர்ச்சிகள் அவரிடம் இல்லை. அவர் இதை ஏற்கனவே அறிந்திருந்தார், எதிர்பார்த்திருந்தார் எனத் தோன்றியது. நியாயமாக எதிர்க்கட்சிகள் பாஜகவின் கையறு நிலையை கண்டு மகிழ்ந்திருக்க வேண்டும், ஆனால் அவர்கள் சோர்வாக இருந்தார்கள். ஏனென்றால் நடந்தேறுவது மிகப்பெரிய நாடகம் என அவர்களின் உள்ளுணர்வுக்குப் பட்டிருக்கலாம், ஆனால் முழு உண்மையும் நேற்று வெளிவரவில்லை. இன்று வெளிவந்து விட்டது.
 
நேற்று பிரதானமான விவசாய அமைப்புகள் தமக்கு விதிக்கப்பட்ட எல்லைப் பகுதிகளில் தான் டிராக்டர் பேரணி சென்றனர். ஆனால் கிஸான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி எனும் குழுவை சேர்ந்தவர்கள் போலிசாரின் மறைமுக அனுமதியுடன், பாஜகவின் அறிவுறுத்தலை, வழிகாட்டலைப் பின்பற்றி போலிசார் அனுமதி அளித்த 2 மணிநேரங்களுக்கு முன்பே தலைநகரை நோக்கி கையில் கத்தி, கைத்தடிகள், சீக்கிய கொடிகள் சகிதம் டிராக்டர்களிலும் குதிரைகளிலுமாய் கிளம்பி விட்டார்கள். பாஜக நாராயணனுக்கு எப்படி அதிர்ச்சியோ வருத்தமோ இல்லையோ அதே போல இவர்களுக்கு பயமோ அக்கறையோ இல்லை. அதகளம் பண்ணுகிறார்கள். முன்பே செய்தி தெரிந்திருந்த சேனல்கள் இதை நேரலை பண்ணுகிறார்கள். 
 
சங்கிகள் இப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி விவசாயிகள் உண்மையில் குண்டர்கள், அராஜகவாதிகள், இடது தீவிரவாதிகள் என எழுதுகிறார்கள். அவர்கள் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த திரைக்கதைக்கு ஏற்ற காட்சிகள் கிடைத்து விட்டன. போலிசார் இந்த பாஜக பி-டீமினரை, சங்கிகளின் கொத்தடிமைகளான விவசாயிகளை விட்டு விட்டு உண்மையான அமைப்பின் தலைவர்களான ரஜேவால் போன்றோர் மீதும், இதை அம்பலப்படுத்திய யோகேஷ் யாதவ் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், இடதுசாரிகள், கல்லூரி ஆசிரியர்கள் மீது வழக்கு பதிவு செய்கிறார்கள். பஞ்சாப் விவசாயிகளோ ஒரு கட்டத்தில் உண்மை நிலவரத்தை புரிந்து கொண்டு பாஜக பி-டீமை சேர்ந்த நடிகர் தீப் சித்து, சத்னம் பன்னு, சர்வான் பாந்தர் ஆகியோரை துரோகிகள் என அறிவித்து தம் போராட்ட களத்தில் இருந்து வெளியேற்றுகிறார்கள். 
 
அவர்கள் நேற்று நடந்தது பாஜகவின் சதித்திட்டத்தின் படி அரங்கேறிய போலி ஆர்ப்பட்டமும் கலவரமுமே, தமது போராட்டம் அற வழியில் அமைதியாக தொடரும் என அறிவித்துள்ளனர்.
இந்த மறுபக்கத்தை தெரிந்து கொள்ளாமல் நேற்று நான் இப்போராட்டம் தடம் மாறி செல்கிறதே எனப் புலம்பினால், வேறு சில நண்பர்களோ இந்த ஆர்ப்பாட்டங்களை “பூபாளம் அதிரும் ஓசை கேட்கிறது” என கொண்டாடி கொண்டிருந்தனர். நண்பர்களே, அந்த ஓசை அசலான விவசாயப் போராளிகள் எழுப்பியது அல்ல. நீங்கள் நேற்று பார்த்தது பாஜகவின் பி-டீம் நேற்று நடித்த பாகுபலியை மிஞ்சிய படக்காட்சிகள், நீங்கள் நேற்று கேட்டது அந்த இரண்டாம் தர ஸ்டண்ட் நடிகர்கள் எழுப்பிய இரைச்சல்.
 
 
காந்தியின் படுகொலை முதற்கொண்டே இப்படியான பிரம்மாண்ட அதிரடி காட்சிகளை இயக்குவதில் இந்துத்துவ கட்சிகளுக்கு அனுபவம் உண்டு. அயோத்தியில் நிகழ்ந்ததற்கும் நேற்று தில்லி செங்கோட்டையில் நிகழ்ந்ததற்க்கும் இடையிலான ஒற்றுமை அப்படித்தான் ஏற்படுகிறது. ஆனால் ஒன்று அயோத்தி சம்பவத்தில் இருந்து புல்வாமா தாக்குதல் வரை பாஜக இப்படியான ரியாலிட்டி ஷோக்களை பின்னிருந்து இயக்குவதில் ஹாலிவுட்டையும் மிஞ்சும் நிபுணத்துவத்தை, கற்பனையை, துணிவைப் பெற்று விட்டது. திட்டமிட்டு துல்லியமாக சரியான நேரத்தில் ஒரு பிரம்மாண்ட போர்க்கள காட்சியை நேரலையாக நிகழ்த்திக் காட்டுவது சாதாரண காரியமல்ல. 
 
அதை வைத்து அரசியல் செய்து மக்கள் மனத்தில் ஒரு பிம்பத்தை உருவாக்கி உணர்ச்சி அலைகளை கிளப்புவதிலும் அவர்களுக்கு வல்லமையும், பெரும் உள்-கட்டமைப்புகளும் இப்போது ஏற்பட்டுள்ளன. நேற்றைய காட்சிகள் நிச்சயமாக ராஜ மௌலி, சங்கர் போன்றோரை மட்டுமல்ல ஹாலிவுட்டில் ரிட்லி ஸ்காட் (“கிளாடியேட்டர்”), ஜேம்ஸ் காமரோன் (“அவதார்”) போன்றோரையும் மூக்கில் விரல் வைக்க செய்திருக்கும். 
 
அடுத்த ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படும் போது பாஜக தலைவர்களில் ஒருவரை ஏனும் சிறந்த இயக்குநராக தேர்வு செய்யாவிடில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து கடும் கண்டனங்களை தெரிவிக்க வேண்டும். எதிர்காலத்தில் சினிமாவில், ஊடகத்தில் சோபிக்க விரும்புவோர் பாஜகவில் சேர்ந்து ஒரு சில வருடங்களாவது இண்டெர்னாக பணியாற்ற வேண்டும் என நான் பரிந்துரைக்கிறேன். ஏனென்றால் உலகின் மிகச்சிறந்த நடிகர்களும் இயக்குநர்களும் அந்த கட்சியில் தான் இருக்கிறார்கள்!

கருத்துகள் இல்லை: