திங்கள், 9 நவம்பர், 2020

பட்டாசு வெடிக்க மொத்தமாக தடை - தேசிய பசுமைத் தீர்ப்பாயம்!

tamil.samayam.com : நாடு முழுவதும் வரும் 13ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பட்டாசுகள் வெடிப்பதற்கு மக்கள் ஆர்வம் காட்டுவர். கொரோனா தொற்று, காற்று மாசுபாடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பல்வேறு மாநில அரசுகள் பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளன. இதற்கிடையில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு பட்டாசு விற்பனை மற்றும் வெடிப்பது பற்றி உரிய பதிலளிக்குமாறு 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது./

இந்நிலையில் டெல்லி மற்றும் இந்தியாவில் காற்று மாசுபாடு மிக மோசமான நிலையில் இருக்கும் மாநிலங்கள் ஆகியவற்றில் பட்டாசு வெடிக்க தடை விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது நடப்பு மாதத்தில் சராசரி அளவிற்கும் கீழே காற்றின் தரம் குறைந்த சிறு மற்றும் பெரு நகரங்களுக்கும் பொருந்தும்.



பள்ளிகளை திறக்கலாமா? வேண்டாமா? - மாறி மாறி முடிவெடுக்கும் மாநில அரசுகள்!

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், இன்று நள்ளிரவு முதல் வரும் 30ஆம் தேதி நள்ளிரவு வரை அனைத்துவிதமான பட்டாசுகள் விற்கவும், வெடிக்கவும் ஒட்டுமொத்தமாக தடை விதிக்கப்படுகிறது. காற்று மாசுபாடு நடுத்தரமாக இருக்கக்கூடிய நகரங்களில் பசுமை பட்டாசுகளை மட்டும் வெடிக்கலாம்.

NGT Order

அதுவும் தீபாவளி, சாட், புத்தாண்டு/ கிறிஸ்துமஸ் ஆகிய பண்டிகைகளின் போது இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசுகள் வெடிக்க வேண்டும். இதற்காக மாநில அரசுகள் பரிந்துரைக்கும் நேர அளவை பின்பற்ற வேண்டும்.

இல்லையெனில் தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரையும், சாட் பண்டிகையின் போது காலை 6 மணி முதல் 8 மணி வரையும், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையின் போது இரவு 11.55 முதல் நள்ளிரவு 12.30 வரையும் பட்டாசுகள் வெடிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: