சனி, 14 நவம்பர், 2020

வடஆப்பிரிக்க அகதிகளின் படகுகள் கடலில் விபத்து 94 பேர் கடலில் மூழ்கி பலி !

thesamnet.co.uk  :வடஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி கடாபியின் ஆட்சி வீழ்த்தப்பட்ட பிறகு அங்கு அதிகாரப் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.  போராளிக் குழுக்கள் அரசுப்படையினர் இடையேயான மோதலில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த மோதலில் இருந்து தப்பித்து உயிரை பாதுகாத்துகொள்ள லிபியாவில் வாழும் மக்கள் பலர் ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி சட்ட விரோதமாக கடல் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் தொடர்ச்சியாக விபத்து ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், லிபியா நாட்டின் திரிபோலி இருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹாம்ஸ் என்ற நகரின் பகுதிக்குள் அமைந்துள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் 120-க்கும் மேற்பட்ட பயணிகள் ஒரு படகில் சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். ஆனால், மோசமான வானிலை காரணமாக அகதிகள் சென்ற படகு இன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 
இந்த விபத்தில் 74 பேர் உயிரிழந்தனர்.
அதேபோல், தலைநகர் திரிபோலில் இருந்து வடகிழக்கு பதியில் அமைந்துள்ள சோர்மன் என்ற நகரின் கரையில் அமைந்துள்ள மத்திய தரைக்கடல் பகுதியில் மற்றொரு படகில் 50-க்கும் அதிகமான அகதிகள் ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொண்டனர். அவர்கள் சென்ற படகும் நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 
இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர். எஞ்சியோர் அப்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தவர்களால் மீட்கப்பட்டனர்.
இதனால், லிபியாவின் மத்திய தரைக்கடல் பகுதியில் இன்று ஒரே நாளில் நடந்த படகு விபத்துக்களில் அகதிகள் 94 பேர் உயிரிழந்தனர். ஆண்டுதோறும் மத்திய தரைக்கடல் பகுதியில் ஏற்படும் படகு விபத்துகளில் ஆயிரக்கணக்கான அகதிகள் உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: