ஞாயிறு, 8 நவம்பர், 2020

5 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை.. ஜோ பைடன் ஆட்சி பொறுபேற்ற உடன்?

maalaimalar :ஜோ பைடன் ஆட்சி பொறுபேற்ற உடன் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படுவது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. 

ஜோ பைடன் வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட கமலா ஹாரிஸ் ஆகியோர் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் ஜனவரி மாதம் பொறுப்பேற்கிறார். இந்த சூழலில் ஜோ பைடன் ஆட்சி பொறுப்பேற்ற உடன் வெளிநாட்டில் இருந்து அமெரிக்காவில் தஞ்சம் அடைந்தவர்களுக்கு குடியுரிமை அளிப்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும். இதுவே அவரது முதல் கையெழுத்தாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதன்படி அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் 1.10 கோடி புலம் பெயர்ந்த மக்களுக்குக் குடியுரிமை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதில் 5 லட்சம் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 


இதன்மூலம் ஆண்டுதோறும் 95,000 என்ற எண்ணிக்கையில் குடியுரிமை அளித்து உரிய ஆவணங்களுடன் அமெரிக்காவின் குடிமக்களாக மாற்றப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவை பொறுத்தவரை பல்வேறு நாடுகளில் இருந்து தஞ்சமடைந்தவர்கள் தான், அந்நாட்டை வல்லரசாக மாற்றியதில் பெரும்பங்கு வகித்துள்ளனர்.

முன்னதாக ஜோ பைடன் தனது தேர்தல் பிரச்சாரங்களின்போது, தன்னுடைய தலைமையில் ஆட்சி அமைந்தால் குடியேற்றத் திட்டங்களில் செய்யப்படும் சீர்திருத்தம், குடியுரிமை வழங்குதல் தொடர்பாக வாக்குறுதிகளை அளித்திருந்தார்.

அதன்படி ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், நாடாளுமன்றத்தின் துணையுடன் குடியேற்றச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து நவீனமாக்கப்படும். குறிப்பாக முறையான ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் 1.10 கோடி பேர் தங்கள் குடும்பத்தாருடன் இணையும் வகையில் குடியுரிமை வழங்கப்படும். இதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

மேலும் வேலை அடிப்படையிலான விசாக்கள் ஹெச்1பி விசா வழங்குவது அதிகரிக்கப்படும், க்ரீன் கார்டுகள் போன்றவை மூலம் சட்டபூர்வமாக அமெரிக்காவில் தங்கி வெளிநாட்டை சேர்ந்தவர்கள் பணியாற்ற வகை செய்யப்படும். அதிபர் டொனால்ட் டிரம்ப் கொண்டு வந்த முஸ்லிம்களுக்குத் தடை உத்தரவு நீக்கப்படும். அந்தத் தடை அதிபராகப் பதவியேற்ற முதல் நாளே நீக்கப்படும். எல்லைப் பகுதியில் நீடிக்கும் மனிதநேயப் பிரச்சினைகளுக்கும், குழப்பங்களுக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை: