புதன், 11 நவம்பர், 2020

பீகார் தேர்தல் ஒரு முக்கியமான பாடத்தை கற்றுத் தந்திருக்கிறது!

Ganesh Babu : · தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு வரை கூட நிதிஷ் குமார் கூட்டணி மிக எளிதாக வெல்லும் என்றுதான் சொல்லப்பட்டது. பிறகு எப்படி லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியால் பணபலமும், அதிகார பலமும் மிக்க மோடியின் சங் பரிவாரத்தை தோல்வியின் விளிம்புக்கு கொண்டு போய் நிறுத்தமுடிந்தது? அதற்கு முழுமுதற்காரணம் தேஜஸ்வியின் பிரச்சாரம் என்றால் அது மிகையாகாது. அதில் அப்படி என்ன சிறப்பாக இருந்தது என்று நீங்கள் கேட்கக்கூடும். வேறொன்றுமில்லை வலிமையான உண்மைகளை மிக எளிமையாக முன்வைத்தார். அதாவது நாட்டின் பிரதமராக இருந்துக்கொண்டு அந்தப் பதவிக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாமல் மோடி திரும்ப திரும்ப காஷ்மீர், ராமர் கோயில் என்று மதவாதத்தை மையமாகக் கொண்டே பிரச்சாரம் செய்தார். ஒரு கொடுந்தொற்றுக்கிடையில் நடக்கும் தேர்தலில் "ஜெய் ஸ்ரீராம் சொல்லும் ராம பக்தர்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை" என்று பேசினார். பிரதமரின் யோக்கியதையே இதுதான் என்றால் கீழ்மட்ட சங்கிகளைப் பற்றி கேட்கவே தேவையில்லை.
இப்படி பா.ஜ.கவும் சரி, நிதிஷ் குமாரின் ஜனதா தளமும் சரி ஒன்று வன்மத்தோடு மதவாதம் பேசினார்கள், அல்லது 15ஆண்டுகளுக்கு முன்பு முடிந்த லாலுவின் ஆட்சியைப் பற்றி வகைத்தொகையின்றி அவதூறு பேசினார்கள்.
அங்குதான் தேஜஸ்வி களத்தில் நுழைந்தார். வேலைவாய்ப்பின்மை, விலைவாசி‌ உயர்வு, பிற்படுத்தப்பட்ட/தாழ்த்தப்பட்ட பிள்ளைகளின் கல்வியுரிமை என்று பீகார் மக்களின் அன்றாடப் பிரச்சனைகளை மட்டுமே தனது பிரச்சாரத்தின் அடிநாதமாக ஆக்கிக்கொண்டார். அதிலும் குறிப்பாக 'வேலைவாய்ப்பின்மை' என்ற அவரது பிரச்சாரத்தின் மையப்புள்ளி பீகாரின் பொருளாதாரச் சிக்கல், கொரோனா காலத்து புலம்பெயர்வுச் சிக்கல் என்று அனைத்தையும் உள்ளடக்கி ஆளும் தரப்பை உலுக்கிய வண்ணமிருந்தது.
இவரது பிரச்சாரத்தை திசைத்திருப்ப எதிர்தரப்பு எவ்வளவோ முயன்றும் தேஜஸ்வி சளைக்காமல் இதை மட்டுமே பேசினார். வெறும் இருபது நாட்களில் 247 பொதுக்கூட்டங்களில் பேசினார். ஒரே நாளில் 19 பொதுக்கூட்டங்களில் பேசி தனது தந்தையான தலைவர் லாலுவின் சாதனையை (16) முறியடித்தார். பல இடங்களில் 10-15 நிமிடங்கள்தான் பேசினார். ஆனால் சாமானிய பீகாரிகளின் ஆன்மாவை உள்வாங்கிப் பேசினார். ஏழை எளியோரின் வலிகளை எதிரொலித்துப் பேசினார். வாக்காளர் பட்டியலில் பெரும்பான்மையாக இருந்த இளைஞர்களின் கனவுகளின் குரலாகப் பேசினார்.
உண்மைகள் நிறைந்த தேஜஸ்வியின் கர்ஜனைக்கு முன்பு மோடி என்ற நரி ஊளையிட்ட மதவாதக் கூச்சல் மக்களிடம் எடுபடாமல்போயிற்று. விளைவு? கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40இடங்களில் 39இடங்களை வென்ற பா.ஜ.க அணி நேற்று தேஜஸ்வியிடம் சிக்கி சின்னாபின்னமானது.
இன்றைய சூழலில் ஆர்.எஸ்.எஸ் அடக்குமுறையை எதிர்க்க நினைக்கும் எதிர்கட்சிகளுக்கு, பீகார் தேர்தல் ஒரு முக்கியமான பாடத்தை கற்றுத் தந்திருக்கிறது. சங்கிகளின் சூழ்ச்சிக்கு பலியாகி தேவையற்ற விடயங்களில் திசைதிரும்பால், கவனம் சிதறாமல் நம் பிரச்சாரத்தை நாமே தீர்மானிக்கவேண்டும் என்பதுதான் அது. We should play the game on our own terms.
நமக்கு இருக்கும் ஒரே ஆறுதல் என்னவென்றால் இந்த கவனம் சிதறாமையைப் பொறுத்தவரை தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்கள் தேஜஸ்விக்கு முன்னோடியாகத் திகழ்கிறார் என்பதுதான். அதன் பலனை கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே பார்த்தோம்.
தொடர்ந்து மக்களை நேரடியாக பாதிக்கும் வாழ்வாதாரப் பிரச்சனைகளை கையிலெடுத்துப் பேசுகிறார். ஆளுங்கட்சியின் (குறிப்பாக அ.தி.மு.கவின்) ஊழலையும், நிர்வாகச் சீர்கேட்டையும் அம்பலப்படுத்திக்கொண்டே இருக்கிறார். இதுதான் சரியான பாதை.
இதே பாதையில் தி.மு.கவும், அதன் கூட்டணிக் கட்சிகளும் தொடர்ந்து சென்றால் இங்கே பார்ப்பன பாசிசம் வீழ்வது உறுதி.
மக்கள் விரோத மனுவாதிகளை, மக்களின் குரலாக ஒலிப்பதன் மூலம் மட்டுமே வீழ்த்தமுடியும். தலைவர் ஸ்டாலின் வீழ்த்துவார்!

கருத்துகள் இல்லை: