திங்கள், 1 ஜூலை, 2019

இனியும் ஏகலைவன்களாக இருக்கமுடியாது” - மக்களவையில் மாற்று சபாநாயகராகச் செயல்பட்ட ஆ.ராசா!


மக்களவையில் இன்று உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய தி.மு.க எம்.பி ஆ.ராசா, “பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர்பிரிவினருக்கு கடன் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கலாம். வேண்டுமெனில், கல்விக் கட்டணத்தையே கூட ரத்து செய்யலாம்.
ஆனால், அவர்களை 10 சதவீதம் இடஒதுக்கீட்டுக்குள் கொண்டு வருவது, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை மடைமாற்றுவதாகும். பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கு இடஒதுக்கீடு தர அரசியல் சட்டத்தில் குறிப்பிடவில்லை.
வழக்கு நிலுவையில் இருப்பதால் கல்வி நிறுவன ஆசிரியர் பணிக்கு 10% இடஒதுக்கீடு மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும்” என்று ஆ.ராசா வலியுறுத்தினார்.

மேலும் பேசிய அவர், துரோணாச்சாரியார்கள் மனநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏகலைவன்களாக எங்களால் இனிமேலும் இருக்க முடியாது எனச் சொல்லி பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு குறித்தும், சமூக நீதி குறித்தும் சிறப்பாக உரையாற்றினார்.
தொடர்ந்து மாலை 5 மணிக்கு, மக்களவையை வழிநடத்தும் மாற்று சபாநாயகர் பொறுப்பையும் ஏற்றார் ஆ.ராசா. 3 முறைக்கு மேல் நாடாளுமன்ற உறுப்பினர்களாகப் பதவி வகிப்பவர்களை அவையின் இறுதி நேரத்தில் மாற்று சபாநாயகராகச் செயல்படுமாறு கேட்டுக்கொள்வது வழக்கம். அதன்படி, கடந்த வாரத்தில் டி.ஆர்.பாலு மாற்று சபாநாயகராகச் செயல்பட்டார்.
இன்று மாலை, மாற்று சபாநாயகராகச் செயல்பட்டு மக்களவையை வழிநடத்திய ஆ.ராசாவுக்கு தி.மு.க-வினர் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: