சனி, 6 ஜூலை, 2019

பாஜகவிற்கு எதிராக முடிவெடுத்த திமுக, ஆதரவளித்த அதிமுக.. சேலம் உருக்காலை ....

dmkநக்கீரன் : தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல் நடந்து முடிந்த பிறகு ஜூன் 28ஆம் தேதியில் இருந்து  சட்டமன்ற கூட்ட தொடர் நடந்து வருகிறது. இந்த கூட்ட தொடரில் துறை ரீதியான கோரிக்கைகள் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு துறையில் உள்ள கோரிக்கைகள், பிரச்சனைகள் பற்றி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் பதிலும், விளக்கமும் அளித்து வருகின்றனர்.
நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது, சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் உருக்காலை நஷ்டத்தில் இயங்கி வருவதால் இதனை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

இதனை எதிர்த்து தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். சேலம் உருக்காலை திட்டம் என்பது அண்ணாவின் கனவு திட்டம் ஆகும். விரிவாக்கத் திட்டத்தின் மூலம் சேலம் உருக்கு ஆலை இயங்கி கொண்டிருக்கிறது. மத்திய அரசின் மாற்றாந்தாய் போக்கினால் உருக்காலை நஷ்டத்தில் இயங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. 4 ஆயிரம் ஏக்கர் நிலத்துடன் இருக்கக்கூடிய சேலம் உருக்கு ஆலை தனியாருக்கு தாரை வார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதை தமிழக அரசு உடனடியாக தடுக்க வேண்டும் என்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். மேலும் இந்த பிரச்னை குறித்து முதல்வர், பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். இதற்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,  சேலம் உருக்காலை பிரச்சினை தொடர்பாக அனைத்து கட்சிகளும் ஒன்றாக சேர்ந்து பிரதமரையும், சம்பந்தப்பட்ட மத்திய அமைச்சரை சந்தித்து அழுத்தம் கொடுப்போம்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த பிரச்சினையை எழுப்பி அதைத் தடுப்பதற்கு உரிய ஆக்கப்பூர்வமான திட்டத்துக்கு தமிழக அரசு, அதிமுக முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்று தெரிவித்தார்.;

கருத்துகள் இல்லை: