திங்கள், 1 ஜூலை, 2019

சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவு!

சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்மாலைமலர் : ஜூன் மாதத்துக்கான சம்பளம் இன்று இரவுக்குள் வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால், சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் திரும்ப பெறப்பட்டது. சென்னை: சென்னை மாநகர பஸ் தொழிலாளர்களுக்கு ஜூன் மாதத்துக்கான சம்பளம் வழங்கப்படாததால், இன்று காலையில் திடீரென வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். வடபழனி, கே.கே.நகர், அண்ணாநகர் மேற்கு உள்ளிட்ட 6 பணிமனைகளில் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். அதிகாலை முதல்  ஊழியர்கள் பஸ்களை இயக்க முன் வராததால் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் பணிமனைகளில் நின்றன. டிரைவர், கண்டக்டர்கள் பஸ்களை வெளியே எடுக்காமல் பணிமனை முன்பு கூடி திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனால் சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் பஸ் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதனால் காலையில் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லக்கூடிய மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்லக்கூடியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தகவல் அறிந்து அதிகாரிகள் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளம் கணக்கில் போடப்பட்டுள்ளதாகவும், நேற்று விடுமுறை என்பதால் ஒரு சிலரின் வங்கி கணக்குகளில் பணம் செல்லவில்லை என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். இன்று இரவுக்குள் அனைத்து தொழிலாளர்களுக்கும் ஊதியம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

அதன்பின்னர் நிலைமையை எடுத்துக்கூறி போக்குவரத்துக் கழக அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்று இரவே முழு சம்பளமும் வரவு வைக்கப்படும் என போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குனர் கணேஷ் வாக்குறுதி அளித்தார்.

இந்த வாக்குறுதியை ஏற்று வேலைநிறுத்தத்தை திரும்ப பெறுவதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்தனர். ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட்டு உடனடியாக பணிக்கு திரும்புவார்கள் என்றும் தொழிற்சங்க தலைவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து ஊழியர்கள் அனைவரும் இன்று மதியம் பணிக்குத் திரும்பினர்

கருத்துகள் இல்லை: