வெள்ளி, 5 ஜூலை, 2019

உதயநிதியின் அடையாளம் என்ன? ஒரு மூத்த பத்திரிகையாளரின் பார்வை

LRJ : கடந்த சில ஆண்டுகளில் திராவிட சார்பாளர்கள் பலர் திராவிடம் 2.0 உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை இணையத்திலும் களத்திலும் உருவாக்கி செயற்பட்டு வருகிறார்கள்.
அதில் ஈடுபட்ட, இணைந்து பணியாற்றிய, அதனால் ஈர்க்கப்பட்டவர்களில் 90% பேர் இளைஞர்கள்; இளைஞிகள். அவர்கள் அனைவருமே கலைஞர் என்கிற 90 வயது கிழவனின் கொள்கையால், ஆட்சியால், ஆளுமையால், தலைமையால் ஈர்க்கப்பட்டவர்கள்.
கலைஞரைவிட இளையவரான அவரது மகன் மு க ஸ்டாலினால் ஈர்க்கப்பட்டவர்கள் இவர்களில் குறைந்தது 10% முதல் அதிகபட்சமாக 25% பேர் வரை இருக்கக்கூடும். மீதி 75% பேரை ஈர்த்தவர் கலைஞர் என்கிற முதுபெரும் கிழவர். அதுவும் நடக்க முடியாத சர்க்கர நாற்காலியில் அமர்ந்து நடமாடிய காலகட்டத்தில்.
எனவே இளைஞர்களை ஈர்க்க ஒருவரின் வயது தடை என்பது எந்தவித ஆதாரமும் அற்ற, ஆனால் பொதுவெளியில் பலரும் நம்பும் ஒரு கருத்துரு.
இதில் இன்னொரு கூடுதல் தகவலும் உண்டு. இந்த திராவிட சார்பு அமைப்புகள் எதிலும் உதயநிதியின் பங்களிப்பு இருந்ததாகவோ அல்லது அவற்றின் நிகழ்ச்சிகளில் அவர் ஒரு பார்வையாளராகவேனும் கலந்துகொண்டதாகவோ எனக்குத் தெரிய எந்த தகவலும் இல்லை. இருந்தால் தெரிவியுங்கள். திருத்திக்கொள்கிறேன்.
எனவே திராவிட கொள்கையால் ஈர்ப்பக்கப்பட்டு திமுக பக்கம் வந்த/வரும் இளம் தலைமுறை கூட்டத்திலேயே இன்றுவரை கலைஞரால் ஈர்க்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமே தவிர ஸ்டாலினால் ஈர்க்கப்படும் கொள்கைசார் இளைஞர் கூட்டம் இன்னும் குறைவாகவே இருந்து வருகிறது. இதுவே கசப்பான யதார்த்தம்.

காரணம் கலைஞர் கொள்கையின் குறியீடாக, அடையாளமாக வளர்ந்தவர்; தன்னை வளர்த்துக்கொண்டவர். ஸ்டாலின் ஏனோ அதில் என்றுமே அந்த அளவுக்கு அக்கறை காட்டியதில்லை. உழைப்பே போதும் என்பது அவரது அணுகுமுறையாக இருந்தது. அதில் தவறில்லை. தன்னால் எது முடியுமோ அதில் கவனம் செலுத்தி மேம்படுத்திக்கொள்ள நினைப்பது மனித இயல்பு. எனவே ஸ்டாலின் உழைப்பையே தன் அடையாளமாக கொண்டார். அதில் அவர் பெருமளவு வெற்றியும் பெற்றார்.
இதில் உதயநிதியின் அடையாளம் என்ன? அவருக்கும் கொள்கைக்குமான தொடர்பு என்றொரு கேள்வியை கேட்டால் ஜெயலலிதாவுக்கும் அடக்கத்துக்குமான தொடர்பு மாதிரி தான் இதுவும் என்பதே உண்மையான பதிலாக கிடைக்கும்.
அதேசமயம் ஒரு அரசியல் கட்சிக்கு கொள்கை மட்டும் போதாது. ஜனரஞ்சகமான இளம் தலைமுறைத் தலைவர்களும் வேண்டும் என்று நீங்கள் வாதாடலாம். நியாயமான வாதம். மறுப்பதற்கில்லை. முழுமையாக ஏற்கவேண்டிய வாதமும் கூட. தேர்தலில் வெல்ல ஒரு அரசியல் கட்சிக்கு ஜனரஞ்சகத்தலைமைகளும் மிக மிக அவசியம்.
அந்த ஜனரஞ்சக அளவுகோளின்படியுமே கூட உதயநிதி இதுவரை அவர் இயங்கிய சினிமாத்துறையில் வெற்றிபெற்ற நடிகரல்ல. அவர் நடித்த படங்கள் எவையுமே உண்மையில் வணிகரீதியில் வெற்றி பெற்றவையல்ல. அவரே கூட வணிகரீதியில் வெற்றி பெற்ற நடிகரும் அல்ல. அவரது குடும்பத்தின் பணபலமே அவரது ஒரே வலிமை. அதை அவர் சினிமாத்துறையில் முதலீடு செய்து தயாரிப்பாளராக இருக்கிறாராரே தவிர அவராக சொந்தமாக நடித்து சாதித்தது என்பது இன்றுவரை ஒன்றும் இல்லை. நடிகராக எந்தவித செல்வாக்கும் ஸ்டார் அந்தஸ்தும் அவருக்கு இன்றுவரை ஏற்படவில்லை.
இப்படி திமுகவின் அடிப்படை கொள்கைகளில் குறைந்தபட்ச ஆர்வமோ, அறிமுகமோ, அவர் இயங்கும் சினிமாத்துறையில் சொந்தக்காலில் நிற்கும் சினிமா நடிகராக வெற்றியோ பெறாத ஒருவர் தமிழ்நாட்டு இளைஞர்களை திமுகவின் பக்கம் கொண்டுவருவார் என்பதற்கு இன்றுவரை ஏற்கத்தக்க சான்றோ ஆதாரமோ இல்லை. மாறாக உதயநிதியின் நியமனம் திமுக எதிர்ப்பாளர்களுக்கு ஒரு வலுவான ஆயுதத்தையும் திமுக ஆதரவாளர்கள் மத்தியில் வெறுப்பு, விரக்தியையும் உருவாக்கியிருக்கிறது.
இது ஆதாரமற்ற கருத்தல்ல. உதயநிதியின் நியமனத்தை வரவேற்பவர்களில் 90% கட்சிக்காரர்கள் (முழுநேர அரசியல்வாதிகள் அல்லது கட்சி உறுப்பினர்கள்) எதிர்ப்பவர்கள்/விமர்சிப்பவர்களில் 90% பேர் திமுகவின் நிரந்தர எதிர்ப்பாளர்கள்.
இந்த இரண்டு தரப்பிலும் விடுபடும் அந்த 20% (10+10+20%) பேர் தான் ஒரு அரசியல் கட்சி கணக்கில் கொள்ளவேண்டியவர்கள். உண்மையில் அவர்கள் குறித்து தான் ஒரு கட்சி கவலைப்படவேண்டும்.
ஒரு அரசியல் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்கவேண்டுமானால் அதற்கு கட்சிக்காரர்களின் வாக்குகள் மட்டும் போதாது. கட்சி ஆதரவாளர்களின் வாக்குகளும் கட்சி சாராதவர்களின் வாக்குகளும் கிடைத்தால் மட்டுமே ஒரு கட்சி தேர்தலில் வெல்ல முடியும். ஆட்சிக்கு வரமுடியும்.
அந்த கோணத்தில் பார்த்தால் உதயநிதியின் நியமனத்துக்கு கட்சிக்காரர்களில் குறைந்தபட்சம் 10% பேரிடம் வெளிப்படையான ஆதரவில்லை. கட்சி ஆதரவாளர்களில் கணிசமானவர்களிடம் குறைந்தபட்சம் வருத்தமும் அதிகபட்சம் விரக்தியும் வெறுப்பும் உருவாகியிருக்கிறது. கட்சிக்கு வெளியில் இருப்பவர்களில் குறைந்தது 10% பேர் பகிரங்கமாக விமர்சிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இப்படியாக ஆரம்பமே கழித்தல் கணக்கில் ஆரம்பித்திருக்கிறது உதயநிதியின் உள்கட்சி நியமனமும் பட்டாபிஷேகமும்.
ஒரு அரசியல் கட்சி தன் ஆதரவு தளத்தை விரிவாக்கிக்கொண்டே செல்லவேண்டுமே தவிர தனக்கு ஏற்கனவே இருக்கும் ஆதரவு தளத்தை இழக்கக்கூடாது. குறைந்தபட்சம் அதை அசைத்துப்பார்க்கக்கூடாது. ஆனால் உதயநிதியின் கட்டாய திணிப்பு அந்த இரண்டையும் தான் செய்திருக்கிறது.
காண்ட்ராக்டர் நேசமணி வார்த்தைகளை கடன்வாங்கி சொல்வதானால் உதயநிதியின் தற்போதைய பலவந்த நியமனமும் திணிப்பும் திமுகவுக்கு தேவையற்ற ஆணி பிடுங்கலே. எடப்பாடிக்கும் மோடிக்கும் இதைவிட மிகச்சிறந்த பரிசு வேறொன்று இருக்க முடியாது.

கருத்துகள் இல்லை: