புதன், 3 ஜூலை, 2019

ஆட்சிக் கவிழ்ப்பு - திமுக எம்.எல்.ஏ.க்கள் அப்செட்!

டிஜிட்டல் திண்ணை: ஆட்சிக் கவிழ்ப்பு - திமுக எம்.எல்.ஏ.க்கள் அப்செட்!minnambalam : மொபைல் டேட்டா ஆன் லைனில் இருந்தது. வாட்ஸ் அப் தலைமைச் செயலக வளாகத்தில் இருப்பதாக லொக்கேஷன் அனுப்பியது. தொடர்ந்து செய்தியும் வந்தது.
“தமிழகத்தின் துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கை உச்ச நீதிமன்றம் ஆறு மாதங்களுக்குப் பின் இன்று (ஜூலை 3) எடுத்துக் கொள்ளும் என்று அறிவித்த நிலையில்தான் இன்று சட்டமன்றம் காலையில் கூடியது. சட்டமன்றம் நடந்துகொண்டிருக்கும்போதே இந்த வழக்கின் தீர்ப்பு தேதியை உச்ச நீதிமன்றம் அறிவிக்கும் என்று திமுக தரப்பில் ஆர்வமாக இருந்தனர். ஆனால் இன்று பகல் 12.30 மணி வாக்கில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்த வேகத்தில் மீண்டும் தள்ளி வைத்துவிட்டதாக தகவல் கிடைத்து அது சட்டமன்றத்துக்குள் இருக்கும் திமுக, அதிமுக என இரு தரப்பினருக்கும் தெரிவிக்கப்பட்டது.

துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் காதுக்கு இந்தத் தகவல் வந்த மாத்திரத்திலேயே அவர் கொஞ்சம் அதிகமாகவே புன்னகைத்தார். மெல்ல மெல்ல இந்தத் தகவல் சட்டமன்ற உறுப்பினர்களிடையே பரவியது. இனி இந்த ஆட்சிக்கு ஆபத்து அவ்வளவு சீக்கிரம் வராது என்று அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டனர். இதைக் கேட்டுக் கொண்ட திமுகவினர் சோகமாக கேண்டீனுக்குச் சென்றனர். மாலை வாக்கில்தான் இந்த வழக்கு ஜூலை 30 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதாகத் தகவல் வந்தது. அப்படி அன்றைக்கு எடுத்துக் கொண்டாலும் தீர்ப்பு என்பது இப்போதைக்கு வராது என்பதே அதிமுக எம்.எல்.ஏ.க்களின் நம்பிக்கை.
சட்டமன்ற வளாகத்திலும், எம்.எல்.ஏ. ஹாஸ்டலிலும் இன்று திமுக எம்.எல்.ஏ.க்களின் விரக்திக் குரல்களையே அதிகம் கேட்க முடிந்தது. ‘உச்ச நீதிமன்றத்துல ஓ.பி. எஸ் வழக்கு தீர்ப்பு எப்போ வரும்னு எந்த தகவலும் இல்லை. இதுக்கிடையில தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள்ல ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ரெண்டு பேரும் நேத்து இன்னிக்கு எடப்பாடிய பாத்துட்டாங்க. அதனால அவருக்கு இனிமே எந்தப் பிரச்சினையும் இல்ல. இனிமே பொதுத் தேர்தல்தான்.
திமுககிட்ட சில அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே பேசிக்கிட்டிருந்தாங்க. வரத் தயாரா இருப்பதாவும் சொன்னாங்க. ஆனா அவங்களுக்கு செய்ய வேண்டியதை யார் செய்யுறதுங்கற கேள்விக்கு திமுகவுல பதில் இல்லாததால எல்லா ப்ளானும் அப்படியே நிக்குது. எங்களுக்கு சந்தேகம் என்னன்னா, திமுகவுல இருக்குற மேல் மட்டத் தலைவர்களே இந்த ஆட்சி இருக்கிறத விரும்புறாங்களோனு தோணுது.
சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்தின் அண்ணன் மகன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில இருக்காரு. அவரை போய் விழுப்புரம் மத்திய மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொன்முடி குடும்பத்தோட பார்த்து நலம்விசாரிச்சுட்டு வர்றாரு. மருத்துவமனைக்கு போறதுல ஒண்ணும் தப்பு இல்லதான். ஆனா அங்க போய் சிவி சண்முகத்தோட ஒரு மணி நேரமா பொன்முடி பேசியிருக்காரு. இதை நாங்க என்னனு எடுத்துக்கறது?
அதேபோல துரைமுருகன் அப்பல்லோ போனபோது அங்க எடப்பாடியும் வந்திருக்காரு. ரெண்டு பேரும் சந்திச்சு பேசியிருக்காங்க. இதையும் நாங்க மருத்துவமனை சந்திப்புனுதான் நம்பணும். இன்னிக்கு கூட துரைமுருகன் எடப்பாடியை சட்டமன்றத்துல பாராட்டியிருக்காரு. இவர் இப்படின்னா திமுக கொறடா சக்கரபாணி என்ன பிரச்சினைன்னாலும் நேரா எடப்பாடிக்கே போன் போட்டு பேசிடறாரு. அவர் எந்த பிரச்சினைய சொன்னாலும் எடப்பாடி தீர்த்து வச்சிடறாரு. அதிமுக எம்.எல்.ஏ.க்களே எடப்பாடிக்கிட்ட பேசத் தயங்குறாங்க. ஆனா சக்கரபாணி முதல்வரோட நல்ல தொடர்புல இருக்காரு. இவர்தான் ஓபிஎஸ் தகுதி நீக்க வழக்கையே தொடுத்திருக்க்காரு.
இப்படி திமுக மேல்மட்டப் புள்ளிகள் எல்லாம் அமைச்சர்களோடயும், முதல்வரோடையும் நல்ல லிங்க்ல இருக்காங்க. இதுலேர்ந்து அவங்களுக்கு அதிமுக ஆட்சி தொடரணும்னு விருப்பம் இருக்குதுதோணு தோணுது. இனி நாங்களும் இப்படி அட்ஜெஸ்ட் பண்ண கத்துக்கணும் போலிருக்கு. இனிமே பொதுத்தேர்தல் வரை காத்திருக்க வேண்டியதுதான்’ என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்கள் திமுக எம்.எல்.ஏ.க்கள்” என்ற செய்தியை செண்ட் செய்துவிட்டு ஆஃப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை: