வியாழன், 4 ஜூலை, 2019

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளிவரும் மொழிப்பட்டியலில் தமிழ்மொழி இடம்பெறாததுமிகுந்த ஏமாற்றம் தருகிறது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தினகரன்  : சென்னை: செம்மொழியாம் தமிழ்மொழி உச்ச நீதிமன்றத்தின் பட்டியலில் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மாநில மொழிகளிலும் மொழியாக்கம் செய்து வெளியிடுவதற்கு, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விரும்புவதாக வெளிவந்துள்ள செய்தி மகிழ்ச்சியளிக்கிறது.
திமுக சார்பில், இந்த நல்ல முயற்சியை மனதார வரவேற்கிறேன். வழக்குகளை தொடுப்பவர்கள் மொழிப் பிரச்னையின்றி - எந்தவித குழப்பமும் சந்தேகமும் இல்லாமல் தீர்ப்புகளின் சாரம்சத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும், வழக்கை நடத்திய தங்களது வழக்கறிஞர்கள் எடுத்து வைத்த வாதங்களையும், எதிர்த் தரப்பின் பிரதிவாதங்களையும் நன்கு தெரிந்து புரிந்து கொள்ள வழிவகுக்கும் இந்த முயற்சி இந்திய நீதி பரிபாலனச் சரித்திரத்தில் மிக முக்கிய மைல்கல் என்றே கருதுகிறேன்.


இந்த முயற்சியின் விளைவாக ஆங்கிலம் தவிர கன்னடம் - தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் கிடைப்பதற்கு வாய்ப்பிருக்கும். அதே வேளையில், தமிழ்மொழி உச்ச நீதிமன்றத்தின் அந்தப் பட்டியலில் இடம்பெறாதது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. இந்திய அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அலுவலக மொழி என்ற அந்தஸ்தில் செம்மொழியாம் தமிழ் மொழி ஆரம்பம் முதலே இருந்து வருகிறது. ஆகவே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் மொழியிலும் வெளியிடப்படுவது தமிழக மக்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை. மேலும், தீர்ப்புகளின் மொழியாக்கத்தில், இந்திய துணைக் கண்டத்திலேயே மூத்ததும் முதன்மையானதும் - இலக்கண இலக்கிய வளங்களைப் பெற்றுச் செழுமையானதுமான செம்மொழித் தமிழை, உச்ச நீதிமன்றம் தவிர்ப்பது, உலகத் தமிழர்கள் மற்றும் மேலை, கீழை நாடுகளின் தமிழறிஞர்களுக்குப் பல்வேறு அய்யப்பாடுகளை தோற்றுவித்துவிடும்.

எனவே, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்த வரவேற்கத்தக்க சீரிய முயற்சியின் விளைவாகத் தமிழ்மொழியிலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் கிடைத்திட வேண்டும். அந்த அரிய செயலைச் செய்து அவர் வரலாற்றில் சிறப்பான இடத்தைப் பெற வேண்டுமென்று, ஏழரைக் கோடி தமிழக மக்களும் விரும்புகிறார்கள். ஆகவே உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வெளிவரும் மொழிப் பட்டியலில் தமிழ்மொழியை அவசியம் சேர்த்திடுமாறு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியை திமுக சார்பில் அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: