செவ்வாய், 2 ஜூலை, 2019

பன்னீர்செல்வம் வழக்கு: திமுகவின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம்!

பன்னீர்செல்வம் வழக்கு: திமுகவின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம்!மின்னம்பலம் : பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை தகுதி நீக்கம் செய்யக்கோரும் வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் அளித்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ததுபோலவே, நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வருக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென திமுக மற்றும் தினகரன் தரப்பிலிருந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கு கடந்த ஜனவரி 31ஆம் தேதி இறுதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் இதுதொடர்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.
வேறொரு வழக்கை விசாரிக்க இருப்பதால் அடுத்த வாரத்தில் தகுதி நீக்க வழக்கை விசாரிப்பதாக நீதிபதிகள் உறுதியளித்தனர். ஆனால் வேறுவழக்குகள், கோடை விடுமுறை ஆகியவற்றை காரணம் காட்டி இதுவரை இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று (ஜூலை 2) திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதனை ஏற்றுக் கொண்ட ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு மனுவை பரிசீலனைக்கு ஏற்பதாகவும், விரைவில் விசாரணை செய்ய உத்தரவிடுவதாகவும் தெரிவித்தது.

கருத்துகள் இல்லை: