வெள்ளி, 4 ஜனவரி, 2019

குழந்தை மீது மின்சாரம் பாய்ச்சிய வீட்டு உரிமையாளர்!

குழந்தை மீது மின்சாரம் பாய்ச்சிய வீட்டு உரிமையாளர்!மின்னம்பலம் : வீட்டு வாடகை கொடுக்கவில்லை என்று கூறி, வீட்டில் இருந்த குழந்தை மீது மின்சாரம் பாய்ச்சிக் கொடுமைப்படுத்தியதாக அவ்வீட்டின் உரிமையாளரும் அவரது மகனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை சிம்மக்கல் பகுதியிலுள்ள பேச்சியம்மன் படித்துறையைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது வீட்டில் கணேஷ் குமார் தன் மனைவி, 8 வயது மகள் ஹரிணியுடன் வசித்து வந்தார். மார்க்கெட்டிங் துறையில் இவர் பணியாற்றி வருகிறார். கடந்த 4 மாதங்களாக கணேஷ் குமார் மணிவண்ணனிடம் வீட்டு வாடகையைக் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மணிவண்ணன், வாடகை தராவிட்டால் வீட்டைக் காலி செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார்.

கடந்த 29ஆம் தேதியன்று கணேஷ் குமார் அலுவலகப் பணி காரணமாக வெளியூர் சென்றிருந்தார். ராஜலட்சுமியும் கடைக்குச் சென்றுள்ளார். அந்த நேரத்தில் ஹரிணியின் வாயில் துணியை வைத்து அடைத்து, அவர் மீது மின்சாரம் பாய்ச்சியுள்ளார் மணிவண்ணனின் மகன் சந்தோஷ் ராஜ். கடைக்குச் சென்ற ராஜலட்சுமி வீடு திரும்பியபோது, ஹரிணியின் உடலில் தீக்காயங்கள் இருப்பதைப் பார்த்துள்ளார். இதையடுத்து அவரை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் ராஜலட்சுமி.
தனது உடலில் சந்தோஷ் ராஜ் மின்சாரம் பாய்ச்சியதாகவும், இதுபற்றி பெற்றோரிடம் சொன்னால் மீண்டும் மின்சாரத்தைப் பாய்ச்சுவேன் என்று மிரட்டியதாகவும், சிகிச்சைக்குப் பின்னர் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் ஹரிணி.
இது தொடர்பாக திலகர் திடல் காவல் நிலையத்தில் கணேஷ்குமார் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, சந்தோஷ் ராஜும் மணிவண்ணனும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் போலீசார்.

கருத்துகள் இல்லை: