செவ்வாய், 1 ஜனவரி, 2019

இயக்குனர் பா.ரஞ்சித் :காதல் திருமணங்களால் ஜாதியை ஒழிக்க முடியாது

Parimala Rajan : இயக்குனர் ரஞ்சித் பார்வைக்கு,
"காதல் திருமணங்களால் ஜாதியை ஒழிக்க முடியாது" - தோழர் இயக்குனர் பா.ரஞ்சித்.
(நீலம் பண்பாட்டு மையம் - “வானம் கலைத்திருவிழா” - சென்னை -30.12.2018.
புதிய தலைமுறை செய்தி.)
தோழர் ரஞ்சித் அவர்களுக்கு ஜாதியின் இருத்தல் குறித்தும் அதன் தகர்ப்பு குறித்தும் குறைந்த பட்ச புரிதல் கூட இல்லை என்பதன் வெளிப்பாடே இந்த கருத்து .
புரட்சியாளர் அண்ணல் பாபாசாகிப் அம்பேத்கர் அவர்கள் ரஞ்சித்திற்கு ஒரே வரியில் பதில் சொல்கிறார்.
""ஜாதியை தகர்த்தெறிவதற்கான வழி கலப்புத் திருமணமே. வேறு எந்த சக்தியாலும் ஜாதியை அழிக்க முடியாது." -
("ஜாதியை அழித்தொழிக்கும் வழி" நூலில் புரட்சியாளர் அம்பேத்கர்)
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் படத்தை மட்டும் முகமூடியாய் வைத்துக் கொண்டு பெரியாரை வசை பாடும் "ஒரு சிலர்" புரட்சியாளரின் முக்கியமான புத்தகங்களை கூட படித்ததில்லை என்பது தான் உண்மை.
மேலும் புரட்சியாளர் கூறுகிறார்,

""கலப்புத் திருமணமே சாதியை ஒழிப்பதற்கான உண்மையான வழி என நான் நம்புகிறேன். ரத்தக் கலப்பு மட்டுமே ‘எல்லாரும் நம்மவரே' என்கிற உணர்வை உருவாக்கும். இந்த உணர்வு, ஒவ்வொருவரையும் ஆட்கொள்ளாத வரை, தன்னுடைய சாதிக்காரனைத் தவிர்த்த மற்ற எல்லோருமே அயலார்தான், அந்நியர்தான் என்கிற பிரிவினை உணர்வு - அந்நிய உணர்வு மறையாது."
("ஜாதியை அழித்தொழிக்கும் வழி" நூலில் புரட்சியாளர் அம்பேத்கர்)
கலப்புத் திருமணங்களால் எத்தனை ஜாதி ஒழிந்து விட்டது என்று கேட்கலாம்.இது குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால் இப்போது எந்த குரங்கு மனிதனாக மாறுகிறது என்கிற கேள்விக்கு சமமானது. ஜாதி மறுப்புத் திருமணங்கள் ஜாதியின் ஆணிவேரை மெல்ல மெல்ல அறுக்கிறது. இது ஒரு நீண்ட கால நிகழ்வு. தொடர்ந்து அதிகதிக ஜாதி மறுப்பு திருமணங்கள் ஜாதி கட்டமைப்பை தகர்த்தே தீரும்.
அதனால் தான் ஜாதி வெறியர்கள் ஜாதி மறுப்புத் திருமணம் செய்பவர்களை கொடூரமாக கொலை செய்கிறார்கள். இக்கொலைகள் வெறும் பெற்றோர்களின் கோபம் மட்டுமல்ல, ஜாதி சங்கங்களின் பலமான பின்புலம் இதில் இருக்கிறது. ஜாதி சங்கங்களுக்கு பின்புலமாக பார்ப்பன சக்திகளின் மூளை இருக்கிறது.
ஜாதி சங்க தலைவர்களும், பார்ப்பனர்களும், பிளட் டெஸ்ட் தமிழ் கம்பெனிகளும் கூறுவது தான் "காதல் திருமணங்களால் ஜாதியை ஒழிக்க முடியாது" .இதனை ரஞ்சித் கூறுவது ஏமாற்றமளிக்கிறது.
மிக மிக முக்கியமான,
புரட்சியாளர் அம்பேத்கரின் ஜாதி மறுப்பு திருமணங்கள் குறித்து கருத்துக்கள் உள்ள "ஜாதியை அழித்தொழிக்கும் வழி " எனும் பேச மறுக்கப்பட்ட உரையை தமிழில் மொழிபெயர்த்து 1936 லேயே புத்தகமாக அச்சிட்டு தமிழ்நாட்டில் பரப்பியவர் அறிவாசான் தந்தை பெரியார் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
"ஜாதியை அழித்தொழிக்கும் வழி” என்னும் இந்நூல் 1936 ஆம் ஆண்டு லாகூர் ‘ஜாத் – பட் – தோடக் மண்டல்’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டிற்காக டாக்டர் அம்பேத்கர் அவர்களால் தயாரிக்கப்பட்ட ஆனால் பேசப்படாத உரை. இம்மாநாட்டுக்கு தயாரித்த உரை, மாநாட்டு வரவேற்புக் குழுவுக்கு ஏற்புடையதாக இல்லாததால், இக்கூட்டத்தையே ரத்து செய்துவிட்டது.
இதனை பெரியார் வாங்கி தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். பெரியார் வெளியிட்ட இந்நூலின் தமிழ்ப் பதிப்பே இந்திய மொழிகளில் வெளியான முதல் பதிப்பாகும்.
புரட்சியாளர் அம்பேத்கரை வாசிப்போம் !
அண்ணல் வழியில்
ஜாதி அமைப்பை அழித்தொழிப்போம் !
மீள் Parimala Rajan

கருத்துகள் இல்லை: