புதன், 2 ஜனவரி, 2019

புதுக்கோட்டையில் மட்டும் சுமார் 5 டன் பிளாஸ்டிக்!!! ஒரே நாளில் அதிரடி

pudukottainakkheeran.in - bagathsingh : பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர் பாதிப்பு, நோய்கள் ஏற்படுகிறது என்பதால் பல ஆண்டுகளாக பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில், ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடையை அமலுக்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் உணவு விடுதிகள், தேநீர் கடைகளில் பார்சலுக்கு பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்துவது பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது கறிக் கடைகள், மீன் கடைகளில் பழையபடி பனை ஓலைகள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது. அப்படி இருந்தும் இன்னும் பல கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டில் உள்ளது. அவற்றை கண்காணித்து பறிமுதல் செய்யவும், அபராதம் விதிக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.


இந்த குழுவினர் இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் சுமார் 5 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பை மற்றும் தடை செய்யப்பட்டுள்ள பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர்.
அதாவது புதுக்கோட்டை நகராட்சியில் ஆணையர் சுப்ரமணியன் தலைமையிலான கண்காணிப்பு குழு, ஜவுளிக்கடைகள் உட்பட பல கடைகளில் ஆய்வு செய்து சுமார் 1.75 டன் தடை செய்யப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். 

அதே போல அறந்தாங்கி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 01/01/2019 முதல் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு முறை மட்டுமே  பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில்  பறிமுதல் செய்து மேற்படி கடைகளுக்கு அபராதம் விதிப்பதற்காக நகராட்சி ஆணையர் அவர்கள் தலைமையில் 02/01/2019   இன்று 27 வார்டுகளில் உள்ள கடைதெருக்களில் பிளாஸ்டிக் பொருளை பறிமுதல் செய்ய நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி ஆய்வில் சுமார் 2 டன் எடையுள்ள, ரூபாய் 2.25 லட்சம் மதிப்புள்ள  தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் அபராத தொகையாக ரூபாய் 25000/-  வரை வசூலிக்கப்பட்டு நகராட்சி கருவூலத்தில் செலுத்தப்பட்டது. இதே போல மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் சுமார் 5 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: