திங்கள், 31 டிசம்பர், 2018

இட்லி, தோசை, உப்மா 1 கோடி ரூபாய்க்கு அப்போலோவில் .. ஜெ., மரணத்தில் மர்மம் இருப்பது உறுதி..!- அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி

ndtv- :
ஜெயலலிதா மரணம் தொடர்பாக மர்மம்
இருப்பது உறுதியாகிவிட்டதாகக் கூறி, பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார் தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம்.
இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘அம்மா நன்றாக அனைத்து வேலைகளையும் செய்து வந்தார். திடீரென்று ஒரு நாள் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அவர் மருத்துவமனையிலிருந்த காலக்கட்டத்தில் அமைச்சர்கள் முதல் தொண்டர்கள் வரை, யாரையும் அம்மாவைப் பார்க்க அனுமதி கொடுக்கப்படவில்லை. இதுதான் உண்மை.

ஆனால் அவர் இட்லி சாப்பிட்டார், தோசை சாப்பிட்டார், உப்மா சாப்பிட்டார் என்று 1 கோடி ரூபாய் வசூல் செய்கிறார்கள். யார் சாப்பிட்டது அந்த இட்லியையும் தோசையையும். சசிகலாவைத் தவிர அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அம்மாவால் துரத்தியடிக்கப்பட்டார்கள். ஆனால், அவர்கள் அம்மா மருத்துவமனையிலிருந்த சமயத்தில், அதை விடுதி போல பயன்படுத்தி சாப்பிட்டுள்ளார்கள். இதில்தான் மர்மம் அடங்கியிருக்கிறது.
முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் மற்றும் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆணையத்திடம் தவறான தகவல்களை கொடுத்துள்ளனர். அவர்கள் மீது விசாரணை செய்யப்பட வேண்டும்.
முறையான மருத்துவம் செய்திருந்தால், அம்மா உயிரோடு இருந்திருப்பார் என்று 3 மருத்துவர்கள் இன்று சொல்லி இருக்கிறார்கள். அம்மாவுக்கு ஆஞ்சியோகிராம் செய்திருக்க வேண்டும் என்கிறார்கள். அதை செய்ய விடாமல் தடுத்தவர் யார். அந்த உண்மை கண்டறியப்பட வேண்டும்.
அதேபோல, அம்மாவுக்கு வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்ற சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் சுகாதாரத் துறைச் செயலாளர், ‘வெளிநாட்டிற்கு சென்று மருத்துவம் செய்தால், இந்திய மருத்துவர்களின் மதிப்பும் மரியாதையும் கெட்டுவிடும்' என்று சொல்லியிருக்கிறார். ஒரு நோயாளியின் உயிரைத்தான் காப்பாற்றியிருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யப்படவில்லை. அவர் மீது உடனடியாக விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும்.
முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவிடம் ஆணையம், ‘ஏன் வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்ற சிகிச்சை செய்யப்படவில்லை' என்று கேட்டதற்கு அவர், ‘நான் இந்த விபரத்தை தமிழக அமைச்சரவையிடம் சொல்லிவிட்டேன். அவர்கள் ஒப்புதல் தர மறுத்துவிட்டனர்' என்று மிகப் பெரிய பொய் குற்றச்சாட்டை சொல்லியுள்ளார். அவர் மீதும் விசாரணை செய்யப்பட வேசண்டும்.

1 COMMENT
அம்மா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படும் வரை அமைச்சரவை கூடவே இல்லை. அதற்கு நானே சாட்சி. எனவே, அம்மாவின் மரணத்தில் மர்மம் இருப்பது உறுதியாகிவிட்டது' என்று அதிர்ச்சியளிக்கும் தகவல்களை கூறியுள்ளார்

கருத்துகள் இல்லை: