வெள்ளி, 4 ஜனவரி, 2019

திருவாரூர் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன் ..

அமமுகவைத் தொடர்ந்து திமுகவும் திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் தனது வேட்பாளரை திமுக அறிவித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் திமுக தலைவர் கலைஞர் . தமிழகத்தின் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரைவிட லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் கலைஞர்  வென்றார்.

 வயோதிகம் காரணமாக உடல் நலிவுற்ற கலைஞர்  கடந்த ஆகஸ்டு 8-ம் தேதி அன்று காலமானதால், திருவாரூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஜன.28 அன்று திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இங்கு மும்முனைப்போட்டி நிலவுவதாக திருவாரூர் கள நிலவரம் தெரிவிக்கிறது. திமுகவின் கோட்டை என கருதப்படும் திருவாரூர் தொகுதியில் கலைஞர்  வாங்கிய வாக்குகளில் பாதி கூட பெறாத அதிமுக இப்போது இரண்டாக பிளவுபட்டுள்ளது என்பதால் வெற்றி இலகுவாக எங்களுக்கு கிடைத்துவிடும் என்று திமுகவினர் கருதுகின்றனர்.
ஆனாலும் கடைசி நேரப் பிரச்சாரம், கஜா புயல் உள்ளிட்ட பல அம்சங்கள் தீர்மானிக்கப்போகும் இந்தத்தேர்தலில் அதிமுக, திமுக, அமமுக மூன்று கட்சிகளிடையே பலத்த போட்டி நிலவுகிறது. வேட்பாளரை அறிவிக்கும் விஷயத்தில் அமமுக தற்போது முந்தி அறிவித்தது.
இந்நிலையில் இன்று நேர்க்காணலை நடத்தி முடித்த திமுக தனது கட்சியின் வேட்பாளராக வேட்பாளராக திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணனை அறிவித்துள்ளது.
அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி இதற்கான அறிவிப்பை ஊடகத்தினரிடம் தெரிவித்தார். திருவாரூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிக வாக்குகளை வைத்துள்ள சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர் கலைவாணன்.
வலுவான வேட்பாளராகக் கருதப்படும் கலைவாணன் 10 ஆண்டுகளுக்கும் மேலாக திமுகவின் மாவட்டச் செயலாளராக உள்ளார்.
கலைஞர்  போட்டியிட்ட இரண்டு முறையும் தலைமைத் தேர்தல் ஏஜெண்டாக இருந்த அனுபவமும், தொகுதியில் கலைஞர்  வர இயலாத நிலையில் அனைத்து வேலைகளையும் கவனிக்கும் இடத்திலும் கலைவாணன் இருந்தார்.
கலைவாணன் மக்கள் செல்வாக்குமிக்க பிரபலமான வேட்பாளர் மட்டுமல்லாமல் திமுகவின் தோழமைக் கட்சிகளான இடதுசாரி கட்சிகள், திராவிடர் கழகத்துக்கும் வாக்குகள் அங்கு அதிகம் என்பதால் போட்டி கடுமையாக இருந்தாலும் திமுக வெல்ல வாய்ப்பு அதிகம் என திமுக வட்டாரத் தகவல் தெரிவிக்கிறது. tamilthehindu.com

கருத்துகள் இல்லை: