வெள்ளி, 4 ஜனவரி, 2019

திருவாரூர் அதிமுக வேட்பாளர் மலர்விழி கலியபெருமாள்.. அமமுக வேட்பாளராக எஸ்.காமராஜ்...?

டிஜிட்டல் திண்ணை:  திருவாரூர் அதிமுக வேட்பாளர் மலர்விழி கலியபெருமாள்?மின்னம்பலம் : திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் ரேஸ் சூடுபிடித்துள்ளது. ஜனவரி 28ஆம் தேதி இடைத்தேர்தல் என்று தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில் அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அதேநேரம் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா உச்ச நீதிமன்றத்தில் திருவாருர் இடைத்தேர்தலை நிறுத்தக் கோரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
அனேகமாக 7ஆம் தேதி (திங்கள்கிழமை) இந்த மனு விசாரணைக்கு வருமென்ற நிலையில் திமுக, அதிமுக கட்சியினரை முந்திக் கொண்டு இன்று வேட்பாளரை அறிவித்து விட்டார் டிடிவி தினகரன். இன்று தஞ்சாவூரில் நடந்த நிகழ்ச்சியில் அமமுகவின் திருவாரூர் மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜை அமமுக வேட்பாளராகத் தொண்டர்கள் மத்தியில் அறிவித்தார் தினகரன். வேட்பாளரை முடிவு செய்வதற்காக இன்று நடக்க இருந்த ஆட்சி மன்றக் குழுவை நாளைக்கு ஒத்தி வைத்திருக்கிறது அதிமுக. திமுக வேட்பாளர் யார் என்று பார்த்துக்கொண்டு அறிவிக்கலாம் என்பதுதான் இதற்குக் காரணம். திமுகவும் திருவாரூர் மாவட்டச் செயலாளர் கலைவாணனை இன்று மாலை வேட்பாளராக அறிவித்துவிட்டது.

மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் ஜனவரி 2ஆம் தேதி நாம் பேசியபடிதான் வேட்பாளர் தேர்வுகள் அமைந்துள்ளன. அமமுக சார்பில் எஸ். காமராஜ் என்றும் அதிமுக சார்பில் அமைச்சர் காமராஜின் நெருக்கமான நபரான கலியபெருமாள் நிறுத்தப்படலாம் என்றும், திமுக சார்பில் மாவட்டச் செயலாளர் கலைவாணனுக்கு கட்சிக்குள்ளேயே சில அதிருப்திகள் இருந்தாலும் அவரே வேட்பாளருக்குத் தீவிர முயற்சியில் இருப்பதாகவும் சொல்லியிருந்தோம். இந்தப் பெயர்களைத் தாண்டி வேறு யாரும் வேட்பாளர் ரேஸில் இல்லை.

அமமுக சார்பில் தினகரன் அறிவித்திருக்கும் எஸ்.காமராஜ் அக்கட்சியின் திருவாரூர் மாவட்டச் செயலாளர். தரணி கன்ஸ்ட்ரக்‌ஷன், தரணி ரெடிமிக்ஸ் எனத் தொழில்கள் செய்துவருகிறார். கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த இவர் அதிமுகவில் நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர், ஒன்றியக் குழு உறுப்பினர் என்று அடிமட்டத்தில் இருந்து வளர்ந்தவர். அதிமுக பிளவுபட்டபோது சசிகலா பிரிவில் இருந்தவர் இன்றும் தினகரனோடு தொடர்கிறார். 2016 சட்டமன்றத் தேர்தலில் மன்னார்குடி தொகுதியில் டி.ஆர்.பி. ராஜாவிடம் ஆச்சரியத் தோல்வி கண்டார் காமராஜ். ’எல்லா இடத்திலும் ஜெயிக்கிறோம்., உன் ஊர்ல தோத்துட்டியே?’ என்று திவாகரனிடம் அப்போதே இதற்காக கோபித்துக் கொண்டார் ஜெயலலிதா. மன்னார்குடியில் தோல்வி கண்ட அனுபவத்தோடு இப்போது அமமுக வேட்பாளராக திருவாரூர் தொகுதியில் நிற்கிறார் எஸ்.காமராஜ். தொகுதியில் போதுமான அறிமுகம் பெற்றவர். படித்தவர் என்ற இமேஜ், முக்குலத்தோர் சமுதாயம், தினகரனின் பிரச்சார பலம் ஆகியவற்றை நம்பி களம் காண்கிறார். முக்குலத்து வாக்குகளை முழுமையாக பெறுவதற்கான வியூகத்தை வேட்பாளர் என அறிவிக்கப்படும் முன்பே ஆரம்பித்துவிட்டார் காமராஜ்.
2011 சட்டமன்றத் தேர்தலில் கலைஞரை எதிர்த்துப் போட்டியிட்ட குடவாசல் எம்.ராஜேந்திரன் இந்த முறை தினகரனிடம் சீட் கேட்டிருக்கிறார். அவர் மீது அதிரடி இமேஜ் இருப்பதாலும் ஜாதகம் பார்த்ததிலும் காமராஜை செலக்ட் செய்தாராம் தினகரன்.
அதிமுகவில் நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த அமைச்சர் ஆர்.காமராஜுக்கு நெருக்கமான நண்பர் கலியபெருமாளின் மனைவி மலர்விழி விருப்ப மனு தாக்கலுக்குச் சென்றிருந்ததால், கலியபெருமாளுக்குக் கிடைக்க இருந்த வாய்ப்பு அவரது மனைவி மலர்விழிக்குச் செல்லும் என்கிறார்கள். அதிமுக வேட்பாளருக்கு பலமும், பலவீனமும் காமராஜ்தான். எவ்வளவு செலவானாலும் ஜெயித்து வர வேண்டும் என்று எடப்பாடி கட்டளையிட்டிருப்பதால், ஓட்டுக்குப் பத்தாயிரம் என்ன பதினைந்தாயிரம் வரைகூடத் தரத் தயாராக இருக்கிறது அதிமுக தரப்பு. அதேநேரம் ஒருமாதத்துக்கு முன்னர் கஜா புயலின்போது திருவாரூர் மாவட்டத்தில் அமைச்சர் காமராஜைப் பல்வேறு இடங்களில் மக்கள் விரட்டியடித்த சம்பவங்கள் நடந்தன. இதே அதிர்ச்சி வரவேற்பு ஓட்டுக் கேட்கப் போகும்போதும் தொடர்ந்தால் வேட்பாளருக்கு அதுவே பலவீனமாகக்கூடும். ஆனால் மூன்று முக்கியமான வேட்பாளர்களில் அதிமுக பெண்ணை நிறுத்துகிறது என்பதால் கவனம் பெறுகிறார் மலர்விழி.

வேட்பாளர் தேர்விலேயே குழப்பத்தை எதிர்கொண்ட கட்சி என்றால் திமுகதான். பலத்த சிந்தனைக்குப் பிறகு மாவட்டச் செயலாளரும், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவருமான பூண்டி கலைவாணனை வேட்பாளராக முடிவு செய்துள்ளது திமுக. ‘கலைஞர் இடத்தில் கலைவாணனா?’ என்று ஆரம்பத்திலேயே முட்டுக்கட்டை போட்ட டி.ஆர்.பி.ராஜா தரப்பினரை எதிர்கொள்வது கலைவாணனுக்கு சவாலான விஷயம்தான். ஆனால் வழக்கமான திமுக வாக்கு வங்கியோடு கலைஞர் அனுதாபமும், கம்யூனிஸ்டுகளின் வாக்கு வங்கியும் திமுகவுக்குப் பெரும் சாதகம்” என்று முடிந்தது மெசேஜ்.

“மூன்று கட்சிகளின் முக்கிய வேட்பாளர்கள் கிட்டத்தட்ட முடிவாகிவிட்ட நிலையில் உளவுத் துறை அதிகாரிகள் கும்பகோணம், தஞ்சாவூர், நாகையில் தங்கி எதிர்க்கட்சிகளின் மூவ்களை கண்காணித்துத் தேர்தல் வேலைகளை இன்று (ஜனவரி 4) முதல் துவங்கிவிட்டார்கள். அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று ஜனவரி 4ஆம் தேதி தஞ்சை முக்கிய நிர்வாகிகளுடன் மதியம் 3.00 மணி வரையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அப்போது, , தொகுதியில் வாக்கு சேகரிக்க செல்லும் பொறுப்பாளர்கள் கருணாநிதியைக் குறை சொல்லாமல், எடப்பாடி அரசின் குறை குற்றங்களைச் சொல்லி வாக்குக் கேளுங்கள், அது கலைவாணனைப் பிடிக்காத திமுக முக்குலத்தோர் வாக்குகளையும் நம் பக்கம் விழ வைக்கும். கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களைக் கண்டுகொள்ளாத எடப்பாடி அரசு என்று சொல்லி ஓட்டு கேளுங்கள் தேர்தல் நடந்தால் நாம்தான் வெற்றிபெறுவோம்’ என்று சொல்லியிருக்கிறார்”

கருத்துகள் இல்லை: