வெள்ளி, 4 ஜனவரி, 2019

திருவாரூர் திமுக வேட்பாளர் பூண்டி கலைவாணன்?- இன்று மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

tamil.thehindu.com ; திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி, மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் சார்பில் விருப்ப மனுக்களை அக்கட்சி நிர்வாகிகள் அளித்துள்ளனர். இதில் பூண்டி கலைவாணன் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருணாநிதி மறைவால் காலியான திருவாரூர் தொகுதிக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. இங்கு திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஜனவரி 2, 3 தேதிகளில் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்திருந்தார். முதல் நாளான நேற்று முன்தினம் யாரும் மனு அளிக்கவில்லை.

இந்நிலையில், 2-வது நாளான நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடக் கோரி திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் விருப்ப மனு அளித்தார். ஸ்டாலின் மகன் உதயநிதி போட்டியிட விருப்பம் தெரிவித்து திருவாரூர் மாவட்ட உதயநிதி ரசிகர் மன்றத் தலைவர் எடிசன் மனு அளித்தார். திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுக தலைமை அலுவலக மேலாளர் பத்மநாபனிடம் 10-க்கும் அதிகமான விருப்ப மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
விருப்ப மனு அளித்தது பற்றி பூண்டி கலைவாணனிடம் கேட்டபோது, ‘‘திமுக தலைவர் ஸ்டாலின் தனக்காக யாரும் விருப்ப மனு தாக்கல் செய்ய வேண்டாம் என கூறினார். ஆனாலும் கருணாநிதி போட்டியிட்ட தொகுதி என்பதால் ஸ்டாலின் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்துள்ளேன். நான் போட்டியிட விருப்பம் தெரிவித்து நிர்வாகிகள் பலர் விருப்ப மனு அளித்துள்ளனர். ஸ்டாலின் இறுதி முடிவு எடுப்பார்’’ என்றார்.
ஸ்டாலின், உதயநிதி, பூண்டி கலைவாணன் ஆகியோருக்காக மட்டுமே விருப்ப மனு அளிக்கப் பட்டுள்ளது. இதில் ஸ்டாலின், உதயநிதி சார்பில் தலா ஒரு மனு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. பூண்டி கலைவாணனுக்காக 10-க்கும் அதிகமான மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஸ்டாலினும் உதயநிதியும் போட்டியிட விரும்பவில்லை என்பதும், பூண்டி கலைவாணன் வேட்பாளராக அறிவிக்கப்படுவது உறுதியாகி உள்ளதாகவும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பூண்டி கலைவாணன் உள்ளிட்டோர் விருப்ப மனுக்களை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலை முன்பு வைத்து கையெழுத்திட்ட பிறகே தலைமை அலுவலக மேலாளர் பத்மநாபனிடம் வழங்கினர்.

கருத்துகள் இல்லை: