சனி, 10 நவம்பர், 2018

தருமபுரி பாலியல் தாக்குதல்: மாணவி உயிரிழப்பு!

பாலியல் தாக்குதல்: மாணவி உயிரிழப்பு!மின்னம்பலம்: தர்மபுரி அருகே பாலியல் வன்கொடுமை முயற்சியின்போது காயமடைந்த மாணவி, இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே கோட்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த தம்பதி அண்ணாமலை-மலர். இவர்களுக்கு சவுமியா (17) என்ற மகள் உண்டு. இவர் பாப்பிரெட்டிபட்டியில் தங்கி அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு வந்திருந்த இவர் கடந்த 5 ஆம் தேதி, இயற்கை உபாதை காரணமாக காட்டுப்பகுதிக்குச் சென்றுள்ளார் சவுமியா. அக்கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ், சதீஷ் ஆகிய இருவரும் அவரைப் பின்தொடர்ந்து சென்று, ஆற்றங்கரையோரமாகத் தூக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இருவரும் சவுமியாவைப் பாலியல் வல்லுறவு செய்ய முயற்சித்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காகச் சண்டையிட்டபோது, இருவரும் அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இருப்பினும், மாணவி சவுமியா அவர்களிடமிருந்து தப்பி வந்துள்ளார்.
பலத்த காயமடைந்த சவுமியா, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, பிரேதப் பரிசோதனைக்காக மாணவி சவுமியா உடல் அனுப்பிவைக்கப்பட்டது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த கோட்டப்பட்டி போலீசார் தலைமறைவாகியுள்ள சதீஷ், ரமேஷ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.
இதற்குக் காரணமானவர்களை கைது செய்யும் வரை மாணவியின் உடலைப் பெற்றுக் கொள்ளமாட்டோம் என அவரது உறவினர்கள் கூறி வருகின்றனர். இதனால், போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: