செவ்வாய், 6 நவம்பர், 2018

தமிழ் ராக்கர்ஸ் பின்னணியில் சினிமா துறையினரே உள்ளனர் ... சந்தேகம்?

தமிழ் ராக்கர்ஸை முறியடிக்குமா விஷால் அணி?
மின்னம்பலம்: திரைப்படங்களைச் சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட்டு வருவதைத் தடுக்க திரையரங்கு உரிமையாளர்களின் உதவியை நாடியுள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம்.
எந்தத் திரைப்படம் வெளியானாலும் அதே நாளில் படத்தை இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிடுவதில் முன்னணியில் நிற்கிறது தமிழ் ராக்கர்ஸ். வெளியான சில நாட்களில் படத்தின் ஹெச்டி பிரின்ட்டையும் வெளியிடுகிறது. தமிழ் ராக்கர்ஸை முடக்குவதற்காக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், தமிழ் ராக்கர்ஸை முடக்க முடியவில்லை.
விஜய் நடிப்பில், முருகதாஸ் இயக்கத்தில் இன்று (நவம்பர் 6) தீபாவளியை முன்னிட்டு சர்கார் திரைப்படம் வெளியாகிறது. இந்தப் படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், இந்தப் படத்தின் ஹெச்டி பிரின்ட் இணையதளத்தில் வெளியிடப்படும் எனத் தமிழ் ராக்கர்ஸ் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்படங்கள் சட்டவிரோதமாக வெளிவருவதைத் தடுப்பதற்காக ஒவ்வொரு திரையரங்கிலும் சிசிடிவி கேமராவைப் பொறுத்த வேண்டும் என விஷால் தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கெனவே கோரிக்கை வைத்தது. தற்போது தமிழ் ராக்கர்ஸின் அறிவிப்பின் காரணமாக தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக அதன் கௌரவச் செயலாளர் எஸ்.எஸ்.துரைராஜ் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் ஒவ்வொரு திரையரங்கிலும், ஒருவரை நியமித்துக் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும், யாரேனும், செல்போனிலோ, கேமரா மூலமாகவோ படத்தைப் பதிவு செய்தால் உடனடியாக காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: