சனி, 10 நவம்பர், 2018

மாபா பாண்டியராஜனின் தேர்தல் வழக்கை நிராகரிக்க முடியாது .. உயர்நீதிமன்றம்

THE HINDU TAMI : ஆவடி தொகுதியில் தான் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக வேட்பாளர் சார்பில் தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மாஃபா பாண்டியராஜன், தற்போது தமிழக அமைச்சராக பதவி வகித்து வருகிறார். பாண்டியராஜன் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி அவரை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட நாசர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். ‘அமைச்சர் பாண்டியராஜன் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப் பொருட்களை வழங்கினார். அவர் குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றுள்ளார். இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே, அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும்’ என மனுவில் கோரியிருந்தார்.

இதை எதிர்த்து அமைச்சர் பாண்டியராஜன் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘எனக்கு எதிராக மனுதாரர் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் இல்லை. எனவே, இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எம்.வி.முரளிதரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ‘‘அமைச்சர் பாண்டியராஜன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்கள் உள்ளன என்பதால்தான் இந்த தேர்தல் வழக்கே தொடரப்பட்டுள்ளது’’ என்றார்.
அதையடுத்து நீதிபதி எம்.வி.
முரளிதரன், ‘‘அமைச்சருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தேதிவாரியாக விவரித்து மனுதாரர் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். அமைச்சருக்கு எதிராக தீவிர குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு உண்மையில்லை என்பதை அமைச்சர்தான் சட்டரீதியாக நிரூபிக்க வேண்டும். மேலும் இந்த வழக்கு கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. எனவே, இந்த பிரதான வழக்கை நிராகரிக்கக் கோரி அமைச்சர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்கிறேன்’’ என உத்தரவிட்டு, பிரதான வழக்கு விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

கருத்துகள் இல்லை: