திங்கள், 5 நவம்பர், 2018

பட்டேல் தேச ஒற்றுமையின் சின்னம் அல்ல ..ஊதி பெருப்பித்த குஜராத்தி பலூன்

Gopal Pillai Shanmugakani : தேச ஒற்றுமையின் சின்னம் பட்டேல் என்பதை
சிறிதளவும் ஒப்புக்கொள்ள முடியாது. இந்தியா என்பது ஒரு நாடல்ல, ஒரு நாடாக ஆங்கிலேயர்களால் அவர்களின் நிர்வாக வசதிக்காக கட்டமைக்கப்பட்டது.
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. காரணம் என்ன? ஒவ்வொரு மொழியும், அந்த மொழி பேசும் மக்களின் கலாசாரமும், பண்பாடும், உணவு முறையும், பழக்க வழக்கங்களும் காக்கப்படவேண்டும் என்கிற அந்த உயரிய நோக்கத்தோடுதான் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்டன. ஆனால் தற்போதைய நிலைமை என்ன? ஒரு மொழிக்காக பல மொழிகள் சிதைக்கப்படுகின்றன. பல மொழிகள் வழக்கொழிந்துவிட்டன. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்பது திணிக்கப்படுகிறது, தற்போதைய மத்திய அரசால். வழக்கொழிந்த, நாகரீகமற்ற மொழியான சமஸ்கிரதம் நம்மீது திணிக்கப்படுகிறது. காங்கிரசும் சுதந்திரத்திற்கு முன்பும், சுதந்திரம் அடைந்த பின்பும் இந்தியைத் திணிக்க முயன்றது. எமது வளமான தமிழ் மொழியைக் காக்க களம் கண்டவர் அண்ணா. அதுமட்டுமல்லாமல் மற்ற மொழிகளும் காக்கப்படவேண்டும் என்று மாநிலங்களவையில் குரல் கொடுத்தவர் அண்ணா. சுதந்திரமான உண்மையான கூட்டாட்சித்தத்துவத்தின் அடிப்படையில் இயங்கும் வளமான மாநிலங்கள்தான் தேச ஒற்றுமையைக் காக்கும் என்றார் அண்ணா. அகவே, தேச ஒற்றுமையின் சின்னமாக அண்ணா அவர்களைத்தான் குறிப்பிட முடியும். 

அண்ணா அவர்கள் தனிநாடு கேட்டதற்குக் காரணம் டில்லியின் ஆதிக்க வெறி, மாற்றாந்தாய்ப் போக்கு, தென்னகத்தின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு நமக்குத் தரவேண்டிய நிதியை தராமல் வடக்கு மட்டுமே வாழ வேண்டும் எனும் வஞ்சகப் போக்கு இவைகள்தான் காரணம்.
சுதந்திரப் போராட்டத்தின் போது பட்டேல் பயணம் செய்த மாநிலங்கள் எத்தனை? சந்தித்த மக்கள் எத்தனை பேர்? கலந்துகொண்ட போராட்டங்கள் எத்தனை? மகாத்மாவைப் போன்றோ, நேருவைப் போன்றோ இந்தியா முழுவதும் வலம் வந்து மக்களைச் சந்தித்தவரா பட்டேல்? என்ன காரணங்களுக்காக பட்டேலை எங்கள் மீது திணிக்கிறீர்கள்? அந்த மனிதர் மீது இருக்கும் நாங்கள் கொண்டுள்ள மரியாதையையும் உங்கள் திணிப்பின் மூலம் வெறுப்பாக மாற்றாதீர்கள். பிறகு உங்கள் ராமருக்கு நாங்கள் கொடுக்கும் மரியாதைதான் பட்டேல் அவர்களுக்கும் கொடுக்க வேண்டியிரு்கும். மோடி யாரையாவது ப்ரமோட் செய்தாலே அவர் ஒரு வில்லங்கமான பேர்வழியாக இருப்பார் என்பதில் எஙகளுக்கு ஆழ்ந்த நம்பிக்கையுண்டு.
அண்ணலையும், மகாத்மாவையும், பெரியாரையும் கொண்டாடும் பூமி எங்கள் தமிழகம். மற்றவரை எங்கள் மீது திணிக்காதீர்கள். ஒற்றுமையின் சின்னம் என்று கூட தமிழில் மொழி பெயர்க்கத் தெரியாத நீங்கள் எல்லாம் எங்களுக்கு கருத்துச் சொல்ல வராதீர்கள். யாரைக் கொண்டாட வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்.

கருத்துகள் இல்லை: