வியாழன், 12 ஜூலை, 2018

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடைகளை திறக்க உயர்நீதி மன்றம் அனுமதி

மாலைமலர் : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சன்னிதி பகுதியில் உள்ள 51 கடைகளை மட்டும் திறக்க அனுமதி வழங்கி ஐகோர்ட் மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது. மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உலக புகழ் பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்குள்ள கடைகளில் பிப்ரவரி மாதம் 2-ம் தேதி தீவிபத்து ஏற்பட்டது. இதனால் கோவிலின் புனிதம் கெட்டுவிட்டதாக இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. மேலும், அறைநிலையத்துறை முறையாக செயல்படவில்லை எனவும் குற்றம்சாட்டின.
இதையடுத்து, கோவில் வளாகங்களில் உள்ள கடைகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் தாங்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், முறையாக கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் எனவும் கடை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், கடை உரிமையாளர்கள் சங்கம் சார்பாக ராஜநாகுலு என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், மீனாட்சி அம்மன் கோவில் சன்னிதி அருகே உள்ள 51 கடைகளை மட்டும் திறந்து கொள்ள இன்று அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், டிசம்பர் 31-ம் தேதி வரை கடைகளை நடத்திக்கொள்கிறோம் என உறுதிமொழி பத்திரம் அளிக்குமாறும், வாடகை பாக்கிகளை முறையாக கோவில் நிர்வாகத்திடம் அளிக்குமாறும் கடை உரிமையாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கருத்துகள் இல்லை: